

இந்திய - அமெரிக்க உறவு, பல்லாண்டு கால உழைப்பில் நெய்யப்பட்ட ஆடை. அதன் இழைகள் இப்போது பிரிகின்றனவா? இல்லை என்கிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப். ஜூன் 17 அன்று நடைபெற்ற ஜி-7 மாநாட்டின் இடைநேரத்தில் பிரதமர் மோடியைச் சந்தித்த டிரம்ப், இந்தியாவும் அமெரிக்காவும் வெகு அணுக்கமாக இருப்பதாகச் செய்தியாளர்களிடம் கூறினார்.
அது உண்மையா அல்லது வெறும் புகழ்ச்சியா? அண்மைக் காலத்தில் மார்க் ரூபியோ ஆற்றிய ஓர் எதிர்வினையும், அவர் மேற்கொண்ட இந்தியப் பயணமும் இந்தக் கேள்விக்குப் பதிலாக அமையலாம். ரூபியோ, அதிபர் டிரம்ப்பின் அமைச்சரவையிலும் உள்வட்டத்திலும் முக்கியமானவர்; அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர்.
கடல் மேல் பிரிந்த உயிர்
ஜூன் இரண்டாம் வாரத்தில் (ஜூன் 8 - 11) ஓமன் வளைகுடாவில் மூன்று சரக்குக் கப்பல்களை அமெரிக்க ஏவுகணைகள் தாக்கின. இவை இந்தியக் கப்பல்கள் அல்ல. என்றாலும் மூன்று கப்பல்களிலும் இந்திய மாலுமிகள் இருந்தனர். இதில் ‘செட்டபெல்லோ’ என்னும் கப்பலில் மூன்று இந்திய மாலுமிகள் உயிரிழந்தனர். மற்றவர்கள் மீட்கப்பட்டனர்.
இந்தக் கப்பல்கள் செய்த குற்றமென்ன? அவை தடை செய்யப்பட்ட ஈரானின் எரிபொருளைச் சுமந்து சென்றன. தடை செய்தது ஐநா போன்ற பன்னாட்டு அமைப்பா? இல்லை, அமெரிக்கா. இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், நமது மாலுமிகள் கொல்லப்பட்டதற்கு இந்திய அரசின் கண்டனத்தை ரூபியோவிடம் தெரிவித்தார்.
இதற்கு ரூபியோ அளித்த பதில், ஜூன் 13ஆம் நாள் அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்திக் குறிப்பாக வெளியானது - ‘எல்லாச் சரக்குக் கப்பல்களும் அமெரிக்காவின் ஆணைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்; அமெரிக்கத் தடையை மீறி ஈரானின் எரிபொருளை ஏற்றிச் செல்வது சட்ட விரோதம்; அதை அமெரிக்கா சகித்துக்கொள்ளாது’.
ரூபியோவின் பயணம்
ரூபியோவின் பதிலில் எந்த மேற்பூச்சும் இல்லை. அது அமெரிக்கத் தரப்பை மட்டுமே உயர்த்திப் பிடிக்கிறது. ஆனால், மே கடைசி வாரத்தில் அவர் மேற்கொண்ட நான்கு நாள் இந்தியப் பயணம், இரு தரப்புக்கு இடையே பிரியும் இழைகளை இணைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்தப் பயணத்தில் கொல்கத்தா, ஆக்ரா, ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களுக்கு ரூபியோ போனார். பாரம்பரியப் பெருமைமிக்க அந்த நகரங்களில் கிடைத்த ஒளிப்பட வாய்ப்புகள் எதையும் அவர் தவறவிடவில்லை.
அடுத்து டெல்லி பாரத மண்டபத்தில், ஏ.ஆர்.ரஹ்மானின் கச்சேரியுடன் விமரிசையாக நடைபெற்ற அமெரிக்க ஜனநாயகத்தின் 250ஆம் ஆண்டுக் கொண்டாட்டத்திலும், தொடர்ந்து நான்கு நாடுகளின் கூட்டணியான ‘குவாட்’ கூடுகையிலும் பங்கேற்றார். விருந்துகளுக்கும் குறைவில்லை. இவையெல்லாம் இந்தப் பயணம் இரு நாட்டு உறவை மேம்படுத்தும் என்கிற தோற்றத்தை உருவாக்கின.