

கைம்பெண் கோலத்தையும் மறுமணத்தையும் ஆதரித்தும் எதிர்த்தும் 1850களுக்குப் பின் இந்தியாவில் விவாதம் தொடங்கியது. ‘தம்மைத் தாமே சாதியாக்க விரும்பிய குழுவுக்கு ஆண்-பெண் எண்ணிக்கைச் சமநிலை அவசியமாக இருந்தது.
கூடுதலான பெண், சாதிக்கு வெளியேயோ, உள்ளேயோ மணந்து, மணமுடிக்க வேண்டிய மற்றொரு பெண்ணுக்கு இடையூறாவாள். இதைத் தடுக்கவே கைம்பெண் கோலம் உருவாக்கப்பட்டது’ என்பது அம்பேத்கரின் கூற்று.
சாதியும் சொத்துடைமையும் வலுப்பெறாத பாட்டாளிச் சமூகங்களிலும் பழங்குடிச் சமூகங்களிலும் கைம்பெண்கள் கணவரின் சகோதரனை மறுமணம் முடித்தனர்.
இதன் எச்சங்கள் இக்காலத்திலும் நீடிக்கின்றன. கைம்பெண்கள் தங்கள் சாதி ஆண்களுடன் கூடியும் வாழ்ந்தனர். இவ்வழக்கங்களால் அச்சமூகங்களில் கைம்பெண்கள் தோன்றவில்லை.
மறுமண மலர்ச்சி
மொட்டையடித்து, வெள்ளாடை உடுத்தி, பூவும் பொட்டும் சூடுவதைத் தடுத்து, உணவையும் குறைத்ததே கைம்பெண் கோலமானது. விரும்பியும் விருப்பமற்றும் கைம்பெண்கள் குழந்தைகளைப் பெற்றது விவாதமானது. கைம்பெண் பாடல்கள் 1913இல் வெளியாகின.
‘முத்துமீனாக் ஷி’, ‘காமாக் ஷி’ நாவல்கள் கைம்பெண்களின் நிலை பற்றிப் பேசின. சி.பி.இராஜகோபாலின் ‘விதவா விவாக விளக்கம்’ நூல் கவனம் பெற்றது.
விதவைகள் கர்ப்பத்தை அழிப்பது, குழந்தையைக் கொல்வது, வீடுகளைவிட்டு வெளியேறியது, பாலியல் தொழிலாளியானது போன்ற சிக்கல்களைக் குறித்துப் பெரியார் 1929இல் பேசினார்.‘வாழ்க்கையின் ஏக்கம்’ கட்டுரையில் (1939) ஸி.சண்முகம், ‘தாலி இருந்தாலும் அறுந்தாலும் பருவ உணர்ச்சிகளை எவராலும் தடுத்துவிட முடியாது.
இளமங்கை தன் உள்ளத்தே இயற்கையாகத் தோன்றும் இன்ப ஊற்றை எவ்வளவு நாளைக்கு அடக்கியாள முடியும்?’ என அவர் வினவினார்; ‘விதவைகள் காதல் உணர்ச்சிக்குக் கட்டுப்பட்டு நடக்க இயலாது கற்பிழந்து வாழ்க்கையைக் கெடுத்து, பிறரால் இகழப்பட்டுச் சாகின்றனர். பெற்றோர்களுக்கும் உறவினர்களுக்கும் சமூகத்துக்கும் பயந்து பயித்தியமாகி இறக்கின்றனர்’ என எழுதினார். இவ்வேதனைகளால் கைம்பெண் மறுமண விவாதம் வலுவானது.
ஆதரவும் எதிர்ப்பும்
சென்னை மாகாண கைம்பெண்களுக்காக வீரேசலிங்கம், ராமராவ், நடேசன் போன்றோர் செயல்பட்டபோதிலும் 1910கள் வரையிலும் கைம்பெண்களுக்கு என அமைப்புகள் இல்லை.