

மேகேதாட்டுவில் அணை கட்டுவது தொடர்பான திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திடம் கர்நாடக அரசு சமர்ப்பித்திருப்பதாகக் கூறப்படும் நிலையில், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துத் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது, இவ்விவகாரத்தில் விரைவில் தீர்வு ஏற்படுமா என்கிற எதிர்பார்ப்பை எழுப்பியிருக்கிறது.
பெங்களூரு நகரக் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதையும், மின்சாரம் உற்பத்தி செய்வதையும் நோக்கமாகக் கொண்டு 6,996 ஏக்கர் பரப்பில் மேகேதாட்டு அணை கட்டுவதைப் பரிசீலித்துவருகிறது கர்நாடகம்.
2022 மே 30இல் அணை கட்ட மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்து, அம்மாநிலத்தின் இரண்டு அவைகளிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அமைச்சரவையின் ஒப்புதலும் பெறப்பட்டது. பணிகளைத் தொடங்க மத்திய அரசு நிதியும் ஒதுக்கியது.
எனினும், நீர்ப் பற்றாக்குறை ஏற்படும் காலக்கட்டத்தில் கர்நாடகம் மட்டுமே காவிரி நீரைப் பயன்படுத்த இத்திட்டம் வழிவகுக்கும் என்று தமிழக விவசாயிகள் குரல் கொடுத்துவருகின்றனர்.
தமிழகத்தின் வாழ்வாதாரம், உரிமைகளை இது முற்றிலுமாகப் பாதிப்புக்கு உள்ளாக்கும் என்பதும் வெளிப்படை. 2025 நவம்பர் 13இல் மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கு எதிராகத் தமிழக அரசு மனுத் தாக்கல் செய்தபோது, அந்தத் திட்டம் தொடக்க நிலையில் உள்ளதாகக் கூறி அவ்வழக்கைத் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்.