

காவிரி விவசாயிகள் பாசன நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று எல்லாருமே சொல்கிறார்கள். இங்கே ‘சிக்கனம்’ என்பது பண்பாட்டு நளினத்தில் தேர்வு செய்துகொண்ட சொல். காவிரிப் படுகையில் தேவைக்கு அதிகமாக நீர் செலவாகிறது என்கிற அவர்களின் குறையே இதன் பொருள்.
குறைவான இருப்பு, நிச்சயமில்லா வரத்து, தட்டுப்பாடு வருமோ என்கிற அச்சம் - இவை எல்லாமே சேர்ந்துகொண்ட இன்றைய காலத்தில் சிக்கனம் சார்ந்து சிந்திக்கத் தோன்றுவது இயற்கை. ஆனாலும், வல்லுநர்களின் இத்தகைய கருத்து விவசாயிகளின் அனுபவத்தோடு ஒத்துப்போகாது.
காவிரிப் படுகை விவசாயம், நீர்ச் சிக்கனம் போன்ற நடைமுறைகளைப் பேச அதிகம் இடம் தராது. விவசாயிகள் அப்போதைய தேவைக்கு அதிகமான நீரை வயலில் வைத்துக்கொள்வதும் இல்லை. இது ஏன் என்று நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.
நனைவதற்கு வேண்டும் நீர்
காவிரிப் படுகை என்கிற பெரும் பரப்பின் பின்னணியில் சிந்திப்பது நமக்கு உதவும். தெற்கே கல்லணைக் கால்வாய், பிறகு வடவாற்றின் கிளைகளிலிருந்து வடக்கே வெட்டாறு வரை வெண்ணாறு பிரிவில் பதினொரு பெரிய ஆறுகள்.
அதற்கு வடக்கே சோழ சூடாமணியிலிருந்து வீராணத்தின் பாய்காலான வடவாறு வரை காவிரி - கொள்ளிடம் பிரிவில் பதினான்குக்கும் குறையாத பெரிய ஆறுகள். பல கிளைகளைக் கொண்ட இவற்றில் சில ஆறுகள் 100 கி.மீ. நீளத்துக்குமேல் உள்ளவை. இவற்றோடு குளம், குட்டை, வாரி, வாய்க்கால், வடிகால், ஓடை, ஏரி முதலியவற்றைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
காவிரிப் படுகையின் பரப்பு மட்டும் 9,600 சதுர கி.மீ. இருக்கக்கூடும். இதில் பழைய கணக்குப்படி 13,25,000 ஏக்கர் ஆற்றுப் பாசனத்தில் இருக்கும்.
இதன் பரப்பு 5,362 சதுர கி.மீ. நெல் நடவு முடிந்து வயலில் அது பயிராக நிற்கும்போது இந்தப் பரப்பு முழுவதும் சீராக மூன்று அங்குல உயரத்துக்குத் தண்ணீரை வைத்துக்கொள்வார்கள் காவிரி விவசாயிகள். காவிரிப் படுகையின் மண் வாகு இப்படித் தண்ணீர் கட்டாமல் நெல் பயிரிடுவதற்கு உரியதல்ல. வயலில் கட்டிய நீர் இஞ்சிப்போவதும் இங்கே விரைவாக நடக்கும்.