

நவீன அறிவியல் நமது முன்னோர்கள் கற்பனை செய்தும் பார்க்க முடியாத பல அதிசயங்களை நிகழ்த்திக் காட்டியுள்ளது. கடந்த நூற்றாண்டில் மனிதர்களின் சராசரி ஆயுள்காலம் மிக வேகமாக அதிகரித்துள்ளது. மனித வரலாற்றில் முன்னெப்போதையும்விட நீண்ட காலம் வாழ்கிறோம்.
ஆனால், இந்த அசுர வளர்ச்சிக்குப் பின்னால் ஒரு வேதனையான கேள்வி தொக்கி நிற்கிறது. நவீன மருத்துவம் உண்மையிலேயே நம் வாழ்நாளை நீட்டித்துள்ளதா அல்லது நாம் இறக்கும் அவஸ்தையைத்தான் நீட்டித்துள்ளதா? நமது உயிரியல் வாழ்க்கையில் சில ஆண்டுகளை அதிகரிப்பதில் அறிவியல் வெற்றி பெற்றிருக்கலாம்.
ஆனால் ஆரோக்கியமான வாழ்க்கையையும், அதைவிட முக்கியமாக, மரணத்தின்போது ஓர் அமைதியான முடிவையும் உறுதிசெய்ய அது முற்றிலும் தவறிவிட்டது.
எந்த விலை கொடுத்தாவது மரணத்தைத் தள்ளிப்போட வேண்டும் என்கிற மருத்துவமனைகளின் பிடிவாதத்தால், மனித வாழ்க்கையின் இறுதிப் பக்கத்தை ஒரு புனிதமான விடைபெறுதலாகப் பார்க்காமல், இயந்திரத்தனமான ஒரு கொடூரமான நரகமாக நாம் மாற்றிவிட்டோம்.
தீவிர சிகிச்சைப் பிரிவின் கொடுமை
இன்றைய நவீன மருத்துவமனையின் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் (ICU) வெவ்வேறு சமூகப் பின்னணியைச் சேர்ந்தவர்கள் எவ்வாறு தங்களின் இறுதி நாள்களைக் கழிக்கிறார்கள் என்பதை நாம் உற்றுநோக்க வேண்டும்.
ஏழைகளுக்கு, மரணம் என்பது அவர்கள் குடும்பத்தின் பொருளாதாரத்தையும் உணர்ச்சிகளையும் ஒரே நேரத்தில் சிதைக்கும் ஒரு பேரதிர்ச்சி. வாழ்நாள் முழுவதும் முறையான மருத்துவ வசதி கிடைக்காமல், தீராத நோய்களுடன் இறுதிக்கட்டத்தில் மருத்துவமனைக்குள் நுழைகிறார்கள்.
ஆபத்தான சூழல் ஏற்படும்போது, அரசு அல்லது குறைந்த கட்டண மருத்துவமனைகளின் இயந்திரத்தனமான தீவிரச் சிகிச்சைப் பிரிவுக்குள் தள்ளப்படுகிறார்கள். அங்கே, அவர்களின் உடலை எப்படியாவது இயங்கவைக்க வேண்டும் என்கிற ஆக்ரோஷமான முயற்சிகள் நடக்கின்றன.
குழாய்கள் செருகப்படுகின்றன, இதயம் நின்ற பிறகும் நெஞ்சைப் பலவந்தமாக அழுத்திப் பிழைக்க வைக்க முயற்சிகள் நடக்கின்றன. சிகிச்சைக்காக வாங்கிய கடனை நினைத்துக் கதறும் குடும்பத்தாரைப் பிரிந்து ஒளிரும் விளக்குகளுக்குக் கீழே அந்த ஏழைகள் அநாதையாக இறக்கிறார்கள்.
நடுத்தர வர்க்கத்தினரின் நிலையோ இன்னும் பரிதாபகரமானது. அவர்களின் இறுதி நாள்கள் தங்களின் வாழ்நாள் சேமிப்பு மொத்தத்தையும் மெல்லமெல்லக் கரைக்கும் ஓர் உறிஞ்சியாக மாறிவிடுகிறது.