சுதந்திரச் சுடர்கள் | மகளிர்: ஏற்றம் தரும் மகளிர் சுயஉதவிக் குழுக்கள்

சுதந்திரச் சுடர்கள் | மகளிர்: ஏற்றம் தரும் மகளிர் சுயஉதவிக் குழுக்கள்
Updated on
1 min read

கிராமப்புறப் பெண்களின் கைகளில் நேரடியான பணப்புழக்கம் குறைவு. அவர்களின் வருவாய்க்கு வழிசெய்யவும் அவர்களது திறமைக்குக் களம் அமைத்துத் தரவும் உருவாக்கப்பட்டது ‘மகளிர் சுயஉதவிக் குழு’ திட்டம்.

80-களில் இது தொடங்கப்பட்டாலும் 90-களில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பரவலாக அறியப்பட்டது. தேசிய ஊரக வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் இது செயல்படுத்தப்படுகிறது.

இதன் கீழ் கிராமங்கள்தோறும் எட்டு முதல் பத்துப் பெண்கள் கொண்ட தனித்தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டன. குழுவில் இருக்கும் பெண்கள் தொழில் தொடங்க குறைந்த வட்டியில் வங்கிக் கடன் வழங்கப்படுகிறது. சிறுதொழில் பயிற்சி, கைவினைக் கலை பயிற்சி போன்றவையும் வழங்கப்படுகின்றன.

சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் தங்கள் தயாரிப்புகளைச் சந்தைப்படுத்துவதற்கான ஏற்பாட்டையும் அரசு ஏற்றுக்கொள்கிறது. சுகாதாரக் கணக்கெடுப்பு, கிராமப்புற மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல், ஓய்வூதியம் உள்ளிட்ட வங்கிப் பரிவர்த்தனை தொடர்பானவற்றுக்கு உதவுதல் போன்றவற்றிலும் இவர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

இந்தியா முழுவதும் 60 லட்சத்துக்கும் அதிகமான மகளிர் சுயஉதவிக் குழுக்கள் உள்ளன. இவற்றில் ஆறு கோடிக்கும் அதிகமான பெண்கள் உறுப்பினர்களாக இருக்கின்றனர். கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் இவர்களது பங்களிப்பு அளப்பரியது.

முகக்கவசம், கிருமிநாசினி தயாரிப்பு போன்றவற்றில் இவர்களே அதிகமாக ஈடுபட்டனர். 27 மாநிலங்களைச் சேர்ந்த 20 ஆயிரத்துக்கும் அதிகமான மகளிர் சுயஉதவிக் குழுக்கள் இந்தப் பணிகளில் ஈடுபட்டன.

மகளிர் சுயஉதவிக் குழுவினர் மேற்கொள்ளும் தொழில்களில் உணவகத் தொழில் முக்கியமானது. நாடு முழுவதும் பத்தாயிரத்துக்கும் அதிகமான உணவகங்களை இவர்கள் நடத்திவருகிறார்கள்.

கேரளப் பெண்களின் பொருளாதார முன்னேற்றத்துக்காக அம்மாநில அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘குடும்ப’ திட்டம் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு முன்னோடித் திட்டமாகக் கருதப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in