

தேசிய ஊரக சுகாதார இயக்கம் (NRHM) எனும் நலத்திட்டத்தை மத்திய அரசு ஏப்ரல் 12, 2005 அன்று அறிமுகப்படுத்தியது. பலவீனமான பொதுச் சுகாதார குறியீடு கொண்ட 18 மாநிலங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம், அங்கு உருவாக்கிய ஆரோக்கியமான மாற்றங்களின் காரணமாக, நாடு முழுமைக்கும் பின்னர் விரிவுபடுத்தப்பட்டது.
இந்தியாவில் சுகாதார திட்டங்களின் பரவலாக்கத்துக்கு இன்று என்.ஆர்.ஹெச்.எம். முக்கியக் காரணமாக உள்ளது. பொருளாதார ஏற்றதாழ்வுகளால் பொதுச் சுகாதாரத்தில் நிலவும் சமத்துவமின்மையைக் குறைக்க உதவுவதில் இந்த இயக்கம் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை அளித்துவருகிறது.
இந்தியாவில் ஆரம்ப சுகாதார வசதிகள் புத்துயிர் பெற்றதற்கும், ஐ.நா.வின் ‘புத்தாயிர வளர்ச்சி இலக்குகளை' அடைவதற்கும் இந்த இயக்கமே பெருமளவில் உதவியுள்ளது. இந்த இயக்கத்தின் முன்னெடுப்புகளின் காரணமாக, இந்தியாவில் சுகாதாரச் சேவைகளின் தரம் பெருமளவு உயர்ந்துள்ளது.
இந்தத் திட்டத்தின் அடித்தளமாகச் சமூக சுகாதாரப் பணியாளர்கள் (ASHAs) இருக்கின்றனர். அதில் பெண்கள் மட்டுமே சேர்க்கப்படுகின்றனர். 2005இல் ஏழு லட்சமாக இருந்த ஆஷாக்களின் எண்ணிக்கை தற்போது ஒரு கோடியைத் தாண்டிவிட்டது. பொதுமக்களுடன் நேரடியாகத் தொடர்புகொண்டு அவர்களின் உடல்நலத்தையும், ஊட்டச்சத்தையும் மேம்படுத்தி சிகிச்சை வழங்குவதை ஆஷாக்கள் எளிதாக்குகின்றனர். நோயாளிகள் தொடர்ந்து சிகிச்சை எடுத்துக்கொள்வதையும் மருத்துவ வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றுவதையும் அவர்கள் உறுதிப்படுத்துகின்றனர்.
இவர்களின் தன்னலமற்ற சேவையினால், இந்தியாவில் ஒரு வயதை நிறைவுசெய்யாத குழந்தைகளின் இறப்பு விகிதம் 28/1000 எனவும், மகப்பேறின்போது தாய்மார்களின் இறப்பு விகிதம் 113/100,000 எனவும் குறைந்துள்ளன. கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் ஆஷாக்கள் ஆற்றிய பணியை உலக சுகாதார நிறுவனம் பாராட்டியுள்ளது. கோவிட் 19 பெருந்தொற்றுக் காலத்தில், தடுப்பூசி வழங்கலில் நாடு படைத்திருக்கும் சாதனைக்கு இவர்களே அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர்.
- ஹுசைன்