தாய்மொழியில் உயர்கல்வி: கொள்கை மட்டும் போதுமா?

தாய்மொழியில் உயர்கல்வி: கொள்கை மட்டும் போதுமா?
Updated on
3 min read

விடுதலை பெற்ற இந்தியாவில் ராதாகிருஷ்ணன் கமிட்டி, பல்கலைக்கழகக் கல்வி மேம்பாடு பற்றிய அறிக்கையினை 1948-49இல் சமர்ப்பித்தது. ‘ஆங்கிலக் கல்விக்கு மாற்றாக இந்திய மொழிகள்தான் உயர்கல்விப் பயிற்று மொழிகளாக இருக்க வேண்டும்’ என்று அந்த அறிக்கை பரிந்துரைத்தது.

இந்திய அரசமைப்பும் இந்தியக் கல்விக் கொள்கையும்,தாய்மொழியில் கல்வி அளிக்கப்படும் என்ற உத்தரவாதத்தை அளித்திருக்கின்றன. ஆனாலும்கூடப் பரிந்துரைகளுக்கும் உத்தரவாதங்களுக்கும் அரசுகள் போதிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை. 1986, 1992 ஆண்டுகளில் கொண்டுவரப்பட்ட தேசியக் கல்விக் கொள்கைகளிலும் தாய்மொழிக் கல்வி மேம்பாட்டிற்கான பரிந்துரைகள் ஏதுமில்லை.

தேசியக் கல்விக் கொள்கை 2020, தாய்மொழியில் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை கல்வி அளிப்பதன் அவசியத்தையும், அதற்கான வழிமுறைகளையும் பரிந்துரைகளையும் அளித்துள்ளது.

குறிப்பாக இந்தியா முழுவதும், தாய்மொழிகளில் பாடங்களைக் கற்பிக்கும் உயர்கல்வி நிறுவனங்களை உள்ளடக்கிய கல்லூரிகளையும், பல்கலைக்கழகங்களையும் உருவாக்க வேண்டும். உயர்கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சிகள், தொழிற்கல்வி - மருத்துவப் படிப்புகள் தாய்மொழியில் படிக்க வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும் என்று வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தொடங்கி, பிரதமர் நரேந்திர மோடி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, சமீபத்தில் சென்னை நிகழ்ச்சியொன்றில் உரையாற்றிய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா வரை, தாய்மொழியில் கற்பித்தலின் அவசியத்தையும், தாய்மொழியில் நீதிமன்றம் உள்ளிட்ட ஆட்சிமுறைகளை மேற்கொள்வது இன்றிமையாதது என்றும் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர்.

தாய்மொழியில் படிப்பவர்களுக்கு உயர்கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் ஒதுக்கீடுகள் அளிக்கப்பட வேண்டும். அண்ணல் காந்தி, தாய்மொழியில் கல்வி கற்பது எவ்வளவு பயன்தரும் என்பதை 1946 ‘ஹரிஜன்’ இதழில், ‘தாய்மொழியில் படிப்பது, தாய்ப்பால் குடித்து, வலுவும் பயனும் பெறுவதைப் போன்றது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

புதிய முன்மொழிவுகள்

அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் குழுமம் (ஏஐசிடிஇ), தேசியக் கல்விக் கொள்கை 2020 செயல்பாட்டு வரையறை அமைத்த பிரேம்வீர் கமிட்டி, தொழிற்கல்வியைத் தாய்மொழியிலும் அளிக்கப் பரிந்துரை செய்துள்ளது.

அதன்படி பிராந்திய மொழிகளில் தொழிற்கல்வியைக் கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் 2021-22ஆம் கல்வி ஆண்டில் தொடங்கத் தேவையான தகுதிகள் பற்றியும், பல்கலைக்கழகத் துணைவேந்தர்களுக்கு 2021 மார்ச் 3 அன்று சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

இதன் பயனாக உயர்கல்விக்கான மாணவர் சேர்க்கை எண்ணிக்கை (Gross Enrollment Ratio) அதிகரிக்கும், நாட்டின் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் வாழ்ந்து, ஆங்கிலம் கற்பதற்கான வாய்ப்பே இல்லாதவர்களுக்கு, குறிப்பாக பழங்குடியினருக்கு, தாய்மொழியில் படித்துப் பட்டம்பெறும் வாய்ப்புகள் கிடைக்கும்.

அதே தறுவாயில் பல்கலைக்கழகங்கள், ஆங்கில மொழிப் பாடங்களைக் கட்டாயமாக்கி, ஒவ்வொரு மாணவனும் ஆங்கிலத்தில் பேசுவதிலும் எழுதுவதிலும் நிபுணத்துவம் பெற்றவர்களாக உருவாக வேண்டும் என்றும் அந்தச் சுற்றிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டு முன்மாதிரிகள்

பல நூற்றாண்டுகளாக ஜப்பான், சீனா, ஜெர்மனி, பின்லாந்து ஆகிய நாடுகள் பள்ளிப் படிப்பு முதல் பல்கலைக்கழகப் படிப்பு, ஆராய்ச்சி, மருத்துவம், தொழிற்கல்வி உள்ளிட்ட அனைத்தையும் தங்கள் தாய்மொழியில் அளித்துவருகின்றன.

அதன் விளைவாக, உலகளாவிய வேலைவாய்ப்பிலும், பொருளாதாரத்திலும் மேம்பட்டு வளர்ந்த நாடுகளின் பட்டியலில் முன்னணியில் இருக்கின்றன.

சீனா, ஜப்பான் நாட்டின் பல்கலைக்கழகங்களுக்குச் சென்று பார்த்தபோது, நோபல் பரிசு பெற்ற ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சிக் கூடங்கள் அனைத்துமே அவர்களின் தாய்மொழியிலேயே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

மென்பொருள்களும் அதேபோல் உள்ளன. உலகத்தில் ஆங்கிலத்தில் வெளிவருகின்ற நூல்களும், பத்திரிகைகளும் வெளிவந்த அடுத்த இரண்டு நாட்களில் ஜப்பானிய மொழியில் அதற்கான மென்பொருள் மூலமாக மாற்றித் தரப்படுகின்றன.

ஆசிரியர்களும் தாய்மொழியிலேயே படித்துப் பட்டம் பெற்றிருப்பதால், அவர்களுக்குத் தொழிற்கல்வி, மருத்துவக் கல்வி, பிற கல்வி நிலைகளில் போதித்தலைத் தாய்மொழியில் அளிப்பது எளிதாகிறது. மிக முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது.

எந்த அளவிற்குத் தாய்மொழியில் படிப்பு வழங்கப்பட்டாலும், அதற்குச் சமமாக ஆங்கிலத்தில் மாணவர்களைத் தேர்ச்சி பெற்றவர்களாக உருவாக்குவதற்குப் பயிற்சியும் பாடமும் அளிப்பது கட்டாயமாகக் கொள்ளப்பட்டிருக்கிறது.

ஆங்கிலத்தில் பேசுவதிலும் எழுதுவதிலும் திறமையுடன், நல்ல மதிப்பெண் பெற்றவர்களுக்குத்தான் தேர்ச்சியும் பட்டமும் வழங்கப்படுகிறது. இதன் பயனாக, மாணவர்கள் தங்களது வேலையைப் பெறுவதற்கு, மேல் படிப்பிற்கு - ஆராய்ச்சிகளுக்குப் பிற நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்குச் செல்வது எளிதாகிறது.

தாய்மொழியில் தொழிற்கல்வி தருவதை இந்தியாவின் முதன் மாநிலமாகத் தமிழகத்தில் 2010-ல்,அன்றைய முதல்வர் மு.கருணாநிதி தொடங்கி வைத்தார்.

தமிழ்வழியில் தொழிற்கல்வியை அண்ணாபல்கலைக்கழகத்திலும், 14 பொறியியல் கல்லூரிகளிலும் 1,800 இடங்களை அதிகப்படுத்தி, மெக்கானிகல் இன்ஜினீயரிங், சிவில் இன்ஜினீயரிங் பாடங்கள் தொடங்கப்பட்டன. பயிற்றுவிக்கவுள்ள ஆசிரியர்களுக்குப் பயிற்சி போன்றவை முனைப்போடு முன்னெடுக்கப்பட்டன.

ஆரம்பத்தில் மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும் ஆசிரியர்களிடமும் இருந்த ஆர்வம் படிப்படியாகக் குறைந்தது. அதற்கான காரணம், தமிழில் போதிய நூல்கள், பத்திரிகைகள், மென்பொருட்கள் இல்லாமை முக்கியக் காரணம்.

கல்வி நிறுவனங்கள் தாய்மொழியில் கல்வி, ஆராய்ச்சிப் படிப்புகளை வழங்க, நடப்பு அறிவியல் தொடர்பான உள்கட்டமைப்புகளை உருவாக்க, கல்வி மேம்பாட்டிற்கு உள்நாட்டு மொத்த உற்பத்தியிலிருந்து ஒதுக்கப்பட்டுள்ள 6 சதவீதத்தில், குறைந்தது 1 சதவீதம் அளிக்கப்பட வேண்டும்.

பிற மொழிகளில், குறிப்பாக ஆங்கிலத்தில் இருக்கின்ற மென்பொருள்களைத் தாய்மொழிகளில் உருவாக்க, தேர்ந்த நிபுணர்களை நியமித்து போர்க்கால அடிப்படையில் மென்பொருள்கள் கிடைக்கச் செய்யவேண்டும்.

அனைத்துப் பாடநூல்கள், குறிப்பாகபொறியியல், மருத்துவம், விவசாயம், பிற படிப்புகளுக்கான நூல்களைத் தாய்மொழியில் எழுதித் தயாரிக்க, கால எல்லை குறித்து, பல்லாயிரம் மொழி வல்லுநர்களை முழு நேர வேலைக்கு அமர்த்தித் தயார்செய்ய வேண்டும்.

ஒவ்வொரு பல்கலைக்கழகம், கல்லூரியிலும் மொழி மாற்றத்திற்கென்று தனியாகத் துறையை உருவாக்கி, ஆசிரியர்களை நிரந்தரமாக நியமித்து, முழு நேரப் பணியாக மொழிமாற்றப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

முழுவீச்சில் ஆதரவு…

பல்கலைக்கழக மானியக் குழு (UGC), தேசியத் தர மதிப்பீட்டு அமைப்புகள் (NAAC, NIRF, NBA), மாநில மொழிகளில் படைக்கப்படும் வெளியீடுகள், கட்டுரைகளை அங்கீகாரத்திற்கும், தரக் குறியீடுகளுக்கும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அனைத்துப் படிப்புகளின் முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சி அறிக்கையைத் தாய்மொழியிலும் சமர்ப்பிக்க வேண்டும்.

அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் அனைத்துப் பாடப்பிரிவுகளிலும், குறைந்தது 40 சதவீதப்படிப்புகள் தாய்மொழியில் வழங்கப்பட வேண்டும். தேசியக் கல்விக் கொள்கையோ, மாநிலக் கல்விக் கொள்கையோ, கொள்கை அளவில் நின்றுவிடாமல் செயலாக்கம் பெற்றால்தான் தாய்மொழி வளரும், உலகளாவிய தரமான கல்வியையும் நாம் பெற முடியும்.

- க.திருவாசகம், சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர், தொடர்புக்கு: vc@ametuniv.ac.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in