உங்கள் வீட்டில் ‘குழந்தை மேதை’ இல்லையா?

உங்கள் வீட்டில் ‘குழந்தை மேதை’ இல்லையா?
Updated on
3 min read

சென்னை செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் சிறு வயதிலேயே பிரபலமடைந்த இரண்டு பேர் மீது பலருடைய கவனமும் குவிந்திருந்தது. ஒருவர் பியானோ கலைஞர் லிடியன் நாதஸ்வரம், மற்றொருவர் செஸ் வீரர் பிரக்ஞானந்தா.

2018இல் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தைத் தனது 12ஆவது வயதில் பெற்றபோது, உலகின் கவனத்தை பிரக்ஞானந்தா முதலில் ஈர்த்தார். சமீபத்தில் இணையவழிப் போட்டிகளில் உலக செஸ் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்தியபோது மீண்டும் கவனம் பெற்றார். அமெரிக்காவின் சி.பி.எஸ். தொலைக்காட்சி அலைவரிசை நடத்திய ‘தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட்’ போட்டியில் பியானோ வாசித்து 2019இல் முதலிடம் பெற்று உலகின் கவனத்தை ஈர்த்தார் லிடியன்.

அதிகரித்துவரும் மோகம்

குழந்தை மேதைகள் மீதான மோகம் கடந்த நூற்றாண்டிலேயே அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. பொருளாதாரத் தாராளமயத்துக்குள் இந்தியா நுழைந்த பிறகு, குறிப்பாகப் புத்தாயிரத்துக்குப் பிறகு குழந்தை மேதைகள் மீதான அளவு கடந்த மோகம் பெற்றோரிடையே தீவிரமடைந்தது. இதை வளர்த்தெடுப்பதுபோல் தொலைக்காட்சி அலைவரிசைகளில் பாடல், நடனம், நகைச்சுவை சார்ந்த ரியாலிட்டி ஷோ போட்டிகள் பிரபலமடையத் தொடங்கி, தமிழ் வாழ்க்கையின் ஒரு பாகமாகவே இன்றைக்கு அவை மாறிவிட்டன. ராஜு முருகன் இயக்கிய ‘ஜோக்கர்’ திரைப்படத்தின் நாயகி தமிழ்நாட்டின் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றில் வறிய நிலையில் வாழ்பவராகக் காட்சிப்படுத்தப்பட்டிருப்பார். ஆனாலும், பிற்காலத்தில் தனது குழந்தை தொலைக்காட்சிப் பாட்டுப் போட்டியில் வெற்றி பெற வேண்டுமெனக் குழந்தை பிறப்பதற்கு முன்பே அவர் ஆசைப்படுவார்.

வரலாற்றில் நிறைய குழந்தை மேதைகள் பதிவாகியிருக்கிறார்கள். மோசார்ட், சார்லி சாப்ளின், பாப்லோ பிக்காசோ, மைக்கேல் ஜாக்சன் எனப் பலரையும் இப்படிப் பட்டியலிட முடியும். லட்சத்தில் ஒரு குழந்தை இதுபோல் குறிப்பிட்ட துறையில் பரிமளிக்கவோ சாதனை புரியவோ முடியும் என்பது உண்மைதான். அதற்கு அந்தக் குழந்தையின் வாழ்க்கைச் சூழல், எதிர்கொண்ட நெருக்கடிகள், சாதகமான அம்சங்கள் என எத்தனையோ அம்சங்கள் பங்களித்திருக்கும். இதைப் பெற்றோர் உணர்ந்திருக்கிறார்களா என்பது பெரிய கேள்வி.

லிடியனின் வெற்றிக்குப் பிறகு பிரபல பியானோ கலைஞர் அனில் சீனிவாசன் விரிவான ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். அதில் இந்தியப் பெற்றோரின் மனோபாவம் குறித்துத் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார்: ‘லிடியனின் வெற்றிக்குப் பிறகு, தங்கள் குழந்தைகளுக்கும் பியானோ கற்றுத் தருவதன் மீது பெற்றோர்களின் கவனம் குவியத் தொடங்கியது. அதைக்கூடப் புரிந்துகொள்ளலாம். ஆனால், அவர்கள் கேட்டதெல்லாம் லிடியனைப் போலவே தங்கள் மகன்/மகள் அதிவேகமாக எப்போது பியானோ வாசிக்க இயலும் என்பதைப் பற்றித்தான்’. இந்த இடத்தில் பியானோ என்கிற கலையைக் கற்றுக்கொள்வதைவிட, லிடியனைப் போலவே தங்கள் குழந்தையை எவ்வளவு வேகமாகத் தயாரித்துவிட முடியும் என்பதிலேயே பெற்றோரின் கவனம் இருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஒரு குழந்தை வளர்ந்து பெரியவர் ஆவதற்கு முன்பே, சாதனையாளராக அடையாளப்படுத்தப்பட்டுவிட வேண்டும் என்கிற தீவிர ஆர்வம் பல பெற்றோருக்கு இருக்கிறது.

சமமற்ற போட்டி

முன்பு விளையாட்டு, பாடல், நடனம் போன்றவற்றைச் சார்ந்து இருந்துவந்த இந்த ஆர்வம் இன்றைக்குக் குழந்தைகளை வைத்துக் கதைசொல்லுதல், கதை எழுதுதல், கவிதை எழுதுதல், ஓவியராக்குதல் என்று விரிந்துவிட்டது. ஒரு குழந்தை இந்த உலகை அறிய முற்படும் வயதில் வண்ணங்களையும் வார்த்தைகளையும் கொண்டு விளையாட விரும்பும். குழந்தைக்கே உரிய புரிதல்களையும் வெளிப்பாட்டையும் இந்த முயற்சிகளில் காணலாம். காரணம், பெரியவர்களிடம் உள்ள போலித்தனங்கள் குழந்தைகளை முழுமையாகப் பீடித்திருக்கவில்லை. இந்த அம்சத்துக்கு உரிய அளவில் முக்கியத்துவம் வழங்கப்படுகிறதா என்பது கேள்விக்குறி.

இதற்கு நேர்மாறாகப் பெற்றோர் பலர் இதற்காகச் செலவு செய்யவும், குழந்தையின் பெயரில் தாங்களோ ஆள் வைத்தோ படைப்புகளை உருவாக்கத் தயாராக இருக்கிறார்கள். குழந்தைகளின் படைப்புகள், திறமைகளை மையமிட்டு செயற்கைப் பூச்சு கொண்ட விழாக்களும், போலிப் பாராட்டுகளும் இன்றைக்கு அதிகரித்துவருகின்றன. குழந்தைகளின் படைப்புகளை ‘ரொமான்டிசைஸ்’ செய்யும் தன்மையும் அதிகரித்திருக்கிறது.

ஏதாவது ஒரு துறையில் தங்கள் குழந்தையை சாதனையாளராக, மேதையாக ஆக்கிவிட வேண்டும் என்கிற பெற்றோரின் இந்தத் தீவிர ஆர்வம் காரணமாகச் சமமற்ற ஒரு போட்டி மற்ற குழந்தைகள் மத்தியில் உருவாக்கப்படுகிறது. இயல்பான வளர்ச்சியைக் கொண்டுள்ள குழந்தைகள், பெரியவர்கள் வரையறுத்து வைத்துள்ள சாதனைகளைப் புரியாத குழந்தைகள் தாழ்வாகப் பார்க்கப்படுகிறார்கள்.

அதிகரிக்கும் மனச்சிக்கல்கள்

சமூக ஊடக வெற்றுப் பாராட்டுகளும் விதந்தோதுதல்களும் பெரியவர்களுக்கு அவசிய செயல்பாடுகளாகிவிட்டன. தங்கள் வாழ்க்கையின் அன்றாடச் சம்பவங்களைப் படமும் ரீல்ஸும் எடுத்துப்போட்டு பெயர் வாங்குவது அன்றாட நடைமுறையாகிவிட்டது. அதே நச்சுச் சுழலுக்குள் குழந்தைகளையும் இழுத்துவர பெற்றோர் நினைப்பதன் நீட்சிதான் குழந்தை மேதைகள் மீதான ஆர்வமும். சமூக ஊடகத்துக்கு நாளும் புதிய சரக்கு தேவை. தங்கள் குழந்தை இந்தச் சாதனையைப் புரிந்திருக்கிறது, அந்தச் சாதனையைப் புரிந்திருக்கிறது என்று பிரபலப்படுத்திக் குழந்தைகள் வழியாகப் பெற்றோர் சிலர் புகழ்தேடத் தலைப்படுகின்றனர்.

இதனால் குழந்தைகள் இயல்பாக வளர முடியாமல் போகிறது. அந்தந்த வயதில் அதற்குரிய மனநிலையோடு மகிழ்ச்சியாக வாழவும், வாழ்க்கையை அனுபவிக்கவும், தவறுகளைக் திருத்திக்கொண்டு அடுத்த கட்டத்துக்கு நகரவும் முடியாமல் போகிறது. இதன் காரணமாகக் குழந்தை மேதைகள் வளர்ந்த பிறகு பல்வேறு மனச்சிக்கல்கள், மனநலப் பிரச்சினைகளுக்கு ஆளாவதும் பதிவாகியிருக்கிறது. உலகைப் புரிந்துகொள்ளும் பக்குவத்தைப் பெறுவதற்கு முன்பே அவர்களுக்குக் கிடைத்துவிட்ட பிரபலம், பிற்காலத்தில் குறையும்போது / சிக்கலுக்கு உள்ளாகும்போது அவர்களால் அந்த நிலையை எதிர்கொள்ள முடிவதில்லை.

எல்லாரும் சாதனையாளராக முடியுமா?

தற்போது குறிப்பிட்ட ஒரு துறையில் அடித்து விளாசும் ஒரு குழந்தை, இடையிலேயே அந்தத் துறை சார்ந்த தன் ஆர்வத்தை இழப்பதற்கும் வாய்ப்பு உண்டு. அல்லது அந்தக் குழந்தையின் படைப்பாற்றலோ திறமையோ குறிப்பிட்ட துறை சார்ந்து குறையலாம்; மாறுபடலாம். எதிர்காலத்தில் வேறொரு துறையில் அதே குழந்தை பரிமளிக்கலாம்.

எந்தத் துறையாக இருந்தாலும் அதில் ஒரு குழந்தை இயல்பான ஆர்வத்தை வெளிப்படுத்துகிறதா, அந்த ஆர்வம் வளர்கிறதா, அது சார்ந்த கற்றலை முறைப்படுத்தும்போது குழந்தை இயல்பாக அதை உள்வாங்கித் திறன்களை மேம்படுத்திக்கொள்கிறதா, இல்லை குழந்தையின் ஆர்வம் குறைகிறதா என்பதையெல்லாம் பெற்றோர், ஆசிரியர்கள் உன்னிப்பாகக் கவனித்தறிய வேண்டும். இதற்கெல்லாம் மேலாக ஒரு குழந்தைக்கு குறிப்பிட்ட துறை பிடிக்கவில்லை என்றால் விலகிக்கொள்வதை அனுமதிக்க பெற்றோர் தயாராக இருக்க வேண்டும்.

உலகைத் திரும்பிப்பார்க்க வைக்கும் சாதனையைப் புரியாவிட்டால் வாழ்க்கை இல்லை என்பது போன்ற பிரமை உருவாக்கப்பட்டு, பள்ளிக் குழந்தைகள், இளைஞர்கள் மனதில் இயல்பு களவாடப்பட்டு நெருக்கடி திணிக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும். இதுபோன்ற தேவையற்ற நெருக்கடியே மற்றவர்களைப் போலத் தன்னால் உலகின் கவனத்தைப் பெரிதாக ஈர்க்க முடியவில்லை என்கிற தாழ்வுமனப்பான்மை குழந்தைகள் மத்தியில் உருவாக முக்கியக் காரணமாகிறது. சாதனை புரிந்தால்தான் வாழ்க்கை என்றால், உலகிலுள்ள 800 கோடி பேரும் உலகைத் திரும்பிப் பார்க்க வைக்கும் தனிச்சாதனைகளைப் புரிவது சாத்தியமா?

- ஆதி வள்ளியப்பன், தொடர்புக்கு: valliappan.k@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in