

இந்தியா உலகின் அதிக மக்கள்தொகையுள்ள நாடாகப் போகிறது. இது 2030-ல் நடக்கும் என்றுதான் மக்கள்தொகைக் கணிப்பாளர்கள் மதிப்பிட்டிருந்தார்கள். 2021 மே மாதம் சீனாவின் ஆறாவது மக்கள்தொகைக் கணக்கெடுப்பு வெளியானது.
அந்த அறிக்கை 2025-லேயே சீனாவை இந்தியா விஞ்சிவிடும் என்றது. கடந்த ஜூலை 11 அன்று ஐ.நா.வின் உலக மக்கள்தொகை அறிக்கை வெளியானது. மக்கள்தொகையில் இந்தியா முடிசூடும் நாளை அந்த அறிக்கை இன்னும் முன்னதாகவே குறித்துவிட்டது.
அந்த நாள் 2023 ஜூலை 15. ஐ.நா. மதிப்பீட்டின்படி இந்திய மக்கள்தொகை 142.8 கோடியாக ஆகியிருக்கும். சீனா 142.6 கோடியுடன் இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டிருக்கும். 2050ஆம் ஆண்டில் இந்திய மக்கள்தொகை 167 கோடியை எட்டியிருக்கும். அப்போது சீனாவின் மக்கள்தொகை 132 கோடியுடன் வெகுதூரம் பின்னால் இருக்கும்.
‘சீனாவை முந்தியது இந்தியா, உற்பத்தியிலோ வருவாயிலோ ஒலிம்பிக் களத்திலோ அல்ல, மக்கள்தொகையில்’ - இப்படிப் பகடி செய்தனர் சிலர். வேறு சிலர் இந்தியா மக்கள்தொகையை மட்டுப்படுத்தியே ஆக வேண்டும் என்றனர்.
மேலவை உறுப்பினரான ராகேஷ் சின்ஹா, நாடு முழுவதும் இரண்டு குழந்தைத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் தனிநபர் மசோதா ஒன்றைத் தாக்கல்செய்தவர். நாட்டின் வளங்கள் குறைந்து வருகின்றன. ஆகவே, மக்கள்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தியே ஆகவேண்டும் என்பது அவரைப் போன்றவர்களின் வாதம்.
உத்தரப்பிரதேச அரசு மக்கள்தொகைக் கட்டுப்பாட்டைச் சட்டமாக்க ஒரு வரைவறிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறது. மத்தியப்பிரதேசம், உத்தராகண்ட், கர்நாடகம், திரிபுரா, அசாம்ஆகிய மாநிலங்களும் கட்டாயக் குடும்பக் கட்டுப்பாட்டுச் சட்டத்தை அமல்படுத்தப் போவதாகக் கூறிவருகின்றன.
இந்திய மாதிரியும் சீன மாதிரியும்
நமது எல்லாப் பிரச்சினைகளுக்கும் மக்கள்தொகையே காரணம். அதன் பெருக்கத்தைச் சட்டம் போட்டுத் தடுத்தே ஆக வேண்டும் என்கிற வாதம் புதிதன்று. ஆனால், நெருக்கடி நிலைக் காலத்தைத் தவிர இந்தியாவில் குடும்பக் கட்டுப்பாடு எப்போதும் கட்டாயமாக இருந்ததில்லை.
அது பரப்புரைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் வாயிலாகவுமே நடந்துவந்திருக்கிறது. மக்கள்தொகையில் சீனாவை இந்தியா விஞ்சப்போகிறது என்றால், நமது குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் தோல்வியடைந்துவிட்டதா? அப்படிச் சொல்வதற்கில்லை.
சீனா ஒற்றைக் குழந்தைத் திட்டத்தைக் கடுமையாக அமல்படுத்தியதால் அதன் மக்கள்தொகை வெகுவாகக் குறைந்துவிட்டது. அதன் உழைக்கும் மக்கள்(15 முதல் 64 வயதினர்) குறைந்துவிட்டனர், உற்பத்தி பாதிக்கப்படப்போகிறது. சீனா இப்போது பழைய பாதையிலிருந்து மீண்டுவரமுயல்கிறது.
ஆனால் முடியவில்லை. சீனாவில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 1990-ல் 1.7%, 2000-ல் 0.69%, 2021-ல் 0.07% ஆகவும் குறைந்துவந்தது. இனி வரும் ஆண்டுகளிலும் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் எதிர்த்திசையில் இருக்கும். அதாவது, மக்கள்தொகை குறையும். இந்தியாவில் இந்த வளர்ச்சி விகிதம்: 1990-2.16%, 2000-1.84%, 2021-0.8%.
சீனாவின் மக்கள்தொகை குறைந்துவருகிறது. இந்தியாவின் மக்கள்தொகை கூடினாலும், அது கூடுகிற விகிதம் குறைந்துவருகிறது. இதற்குக் கருவள விகிதம் குறைந்து வருவதுதான் காரணம். ஒரு பெண் தன் வாழ்நாளில் பிரசவிக்கும் எண்ணிக்கை கருவளம் எனப்படுகிறது.
1971-ல் இந்தியாவின் கருவள விகிதம் 5.5. அப்போது ஓர் இந்தியப் பெண்மணி சராசரியாக 5.5 குழந்தைகளைப் பெற்றார். இது 2020-ல் 2.2 ஆகவும், இப்போது 2 ஆகவும் குறைந்துவிட்டது. இந்த விகிதம் 2.1 ஆக இருந்தால், அது பதிலீட்டு விகிதம் எனப்படுகிறது. அந்த விகிதத்தில் பிள்ளைப் பேறு நிகழ்ந்தால் மக்கள்தொகை கூடாமலும் குறையாமலும் இருக்கும். தற்சமயம் இந்தியாவின் சராசரிக் கருவள விகிதம் பதிலீட்டு விகிதத்தைவிடக் குறைந்துவிட்டது.
சட்டம் போட்டுத் தடுக்க முடியுமா?
இந்த விகிதம் எல்லா மாநிலங்களிலும் ஒரே மாதிரி இல்லை என்பதுதான் மையப் பிரச்சினை. ஐந்து மாநிலங்களில் பதிலீட்டு விகிதத்தைவிட அதிகமாக இருக்கிறது. அவை: பிஹார் (2.98), மேகாலயம் (2.91), உத்தரப்பிரதேசம் (2.35), ஜார்கண்ட் (2.26), மணிப்பூர் (2.17). ஐந்து தென் மாநிலங்களின் கருவள விகிதமோ (1.7-1.8). இந்தியாவின் மக்கள்தொகை மிக்க உத்தரப்பிரதேசம், பிஹார் உள்ளிட்ட பலமாநிலங்களுக்கு, கருவள விகிதத்தைக் கணிசமாகக் குறைத்துவிட்ட மாநிலங்களின் வருவாயில்ஒரு பங்கு மடைமாறிப் பாய்கிறது.
மக்கள்தொகைப் பெருக்கம் அதிகமுள்ள மாநிலங்களில், அதைக் குறைப்பது அத்தியாவசியம். ஆனால், அதைச் சட்டங்களாலும் கட்டுப்பாடுகளாலும் சாதித்துவிட முடியாது. சீனா இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. ஐ.நா.வின் மக்கள்தொகை தினக் குறிக்கோள்களில் கல்வி, ஆண்-பெண் சமத்துவம், வறுமை ஒழிப்பு, உடல் நலம், மனித உரிமை முதலான மக்கள் நல அம்சங்கள்தான் முன்னுரிமை பெறுகின்றன. பெண்களுக்குத் தடையின்றி கல்வியும் சுகாதாரமும் கிடைக்கிற எல்லாச் சமூகங்களிலும், குடும்பங்கள் சிறிதாகத்தான் இருக்கின்றன.
உழைக்கும் கரங்கள்
இன்னொரு முக்கியச் செய்தியும் உண்டு. 2020இல் இந்தியாவில் 90 கோடி பேர், மக்கள்தொகையில் மூன்றில் இருவர் உழைக்கும் வயதினராக (15-64) இருந்தனர். 2030இல் இந்த எண்ணிக்கை மேலும் 10 கோடி உயரும். இந்தியாவின் கருவள விகிதம் குறைந்து வருகிறபோதும், இளைஞர்கள் அதிகமாக இருப்பதால் இந்த மாயம் நிகழ்கிறது. 2030இல் உலகில் உழைக்கும் வயதினரில் நான்கில் ஒருவர் இந்தியராக இருப்பார்.
ஆனால் இந்த எண்ணிக்கை மட்டுமே சோறு போடாது. இந்தப் பெரும் திரளுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். நமது தொழிலாளர்களில் கணிசமானவர்கள் கூலித் தொழிலிலேயே காலத்தை ஓட்ட வேண்டியிருக்கிறது. பெருந்தொற்றுக் காலத்தில் கால்நடையாக வீடு திரும்ப வேண்டியிருந்தது. பெண்கள் உற்பத்தியில் ஈடுபடுவது குறைந்துகொண்டே போகிறது.
இதை மாற்ற முடியும். இந்தியப் பிரதமரின் கனவுத் திட்டமான ‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்பதை நனவாக்க முடியும். 2020 முதல் 2030 வரையான காலகட்டத்தை இந்தியாவின் பொற்காலமாக மாற்ற முடியும் என்று இரண்டாண்டுகளுக்கு முன்பு வெளியான CII அறிக்கை குறிப்பிட்டிருந்தது.
இப்போதைய உலகச்சந்தை, தொழில் துறையையும் சேவைத் துறையையும் சார்ந்திருக்கிறது. நமது இளைஞர்கள் அதற்குத் தக்கவர்களாக உருவாக்கப்பட வேண்டும். அதற்கு நாட்டில் எல்லோருக்கும் அடிப்படைக் கல்வி கிடைக்க வேண்டும். மக்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அதற்குக் கல்வியும் மருத்துவமும் இலவசமாக வழங்கப்பட வேண்டும். அப்போது உலகச் சந்தைக்குத் தேவைப்படும் தொழிற்சாலைகளும் சேவை மையங்களும் இந்தியாவெங்கும் உருவாகும்.
கல்வியில் சிறந்த, உடல்நலம் மிக்க சமூகம் பொறுப்புணர்வு மிக்கதாகவும் இருக்கும். அங்கே கருவள விகிதம் குறைவாக இருக்கும். அங்கே சாதி, மதச் சண்டைகள் இராது. வளர்ச்சியடைந்த மாநிலங்களின் வளம், வளர்ச்சி குன்றிய மாநிலங்களுக்கு மடை மாற்றப்படாது. அங்கே மக்கள்தொகை சாபமாக அல்ல, வரமாக இருக்கும்.
மு. இராமனாதன், எழுத்தாளர், பொறியாளர். தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com