நிரந்தர ஆசிரியர்களை நியமிப்பது தானே சமூக நீதி

நிரந்தர ஆசிரியர்களை நியமிப்பது தானே சமூக நீதி
Updated on
2 min read

அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை 4,989 இடைநிலை ஆசிரியர்கள், 5,154 பட்டதாரி ஆசிரியர்கள், 3,188 முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் பள்ளி மேலாண்மைக் குழுக்களின் வழியாக இந்தக் கல்வியாண்டின் 10 மாதங்களுக்கு மட்டும் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கக் கூறி ஆணையொன்றை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பல தொடக்கப் பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாகவே இருந்துவருகின்றன. 3,000-த்துக்கும் மேற்பட்ட ஓராசிரியர் பள்ளிகள் இருப்பதாக சமீபத்திய ‘இந்து தமிழ் திசை’ கட்டுரையொன்றில் நாம் குறிப்பிட்டிருந்தோம்.

சென்னையில் மிகவும் பெரிய பள்ளி, 2,400 குழந்தைகளுக்கு மேல் படிக்கக்கூடிய முஸ்லிம் மாணவிகள் பள்ளியொன்றில் பெற்றோர் - ஆசிரியர் கழகத்தின் வழியாக 22 ஆசிரியர்கள் நிரப்பப்பட்டு, அந்தப் பள்ளி பல ஆண்டுகளாக இயங்கிவருகிறது. அந்தப் பள்ளிக்கு 10 ஆண்டுகளுக்கும் மேலாகத் தலைமையாசிரியரே இல்லையாம். தலைமையாசிரியர் பணியிடமே இன்னும் உருவாக்கப்படாமல் இருக்கிறது.

பள்ளிக்கல்வி அமைச்சரை நேரில் சந்தித்துப் பிரச்சினை குறித்து விளக்கிக் கோரிக்கை வைத்தும், கல்வித் துறை உயர் அதிகாரிகளின் கவனத்துக்குப் பல முறை எடுத்துச்சென்றும் தலைமையாசிரியர் பணியிடம் உருவாக்கப்படவில்லை என்கிறார் பொறுப்புத் தலைமையாசிரியர். தலைமையாசிரியர் பொறுப்பில் இருக்கும் ஒரு ஆசிரியர்தான் பள்ளியைக் கவனித்துவருகிறார்.

மிகப் பெரிய சவால் அது. அங்கு ஏராளமான ஆசிரியர் காலிப் பணியிடங்கள் இருந்தும் அரசு நியமிக்கவில்லை. அதைக் காட்டிலும், தலைமையாசிரியர் இல்லாமல் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு பள்ளி இயங்குகிறது என்றால், இதை எவ்வகையில் நோக்குவது? இது ஒரு உதாரணம்தான். நேர்மையான புள்ளிவிவரங்களைத் திரட்டினால், இதுபோன்ற ஏராளமான பள்ளிகளைக் கண்டறியலாம்.

பெரம்பலூர் மாவட்டத்தில், ஒரு அரசுப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு ஆங்கிலவழி வகுப்பெடுக்க ஆசிரியர்கள் இல்லை என்று எட்டாம் வகுப்பு வரை ஆங்கிலவழியில் படித்த பெரும்பாலான குழந்தைளைத் தமிழ்வழிக்கு மாற்றிவிட்டனராம். ஆசிரியர் நியமனம் இல்லை என்பதுதான் காரணம்.

எந்தப் பள்ளியை ஆய்வுசெய்தாலும் அங்கு பாட ஆசிரியர்கள் குறைவு, உடற்கல்வி, இசை, ஓவியம் இவற்றுக்குப் பகுதி நேர ஆசிரியர்கள் மட்டுமே இருப்பது, ஓராசிரியர் பள்ளிகள் என ஆசிரியர் பற்றாக்குறைப் பிரச்சினையாகவே இருப்பது பள்ளிக் கல்வியின் அவலமாகவே பார்க்கலாம்.

10 ஆண்டுகளுக்கும் மேலாக பகுதி நேர ஆசிரியர்களாகப் பணியாற்றுவோரையும் நிரந்தர ஆசிரியர்களாக மாற்றுவதற்கு அரசு முன்வரவில்லை. இது மட்டுமல்ல, கடந்த இரண்டு கல்வி ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளில் சேர்ந்த ஆறு லட்சம் குழந்தைகளுக்கான ஆசிரியர் நியமனங்கள் இல்லை.

இப்படி ஆசிரியர்களே இல்லாத சூழல் தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் இருக்க, அங்கு ஆசிரியர் பணியிடங்களை நிரந்தரமாக நிரப்புவதுதான் கல்வி வளர்ச்சிக்கு ஆதாரமாக இருக்கும். பயிற்சிபெற்ற ஆசிரியர்கள் லட்சக்கணக்கில் வெளியே இருக்கும் நிலையில், தற்காலிகமாக அவர்களை நியமித்து, வெறும் 10 மாதங்களுக்கு ஊதியம் கொடுத்துக் கற்பித்தல் பணியில் ஈடுபடச் செய்வது ஏற்றுக்கொள்ளவே முடியாத செயல்.

ஏனெனில், புதிய அரசு அமைந்தவுடன் ஆசிரியர்கள் நியமனம் இருக்கும் என்று பெற்றோர்களும் ஆசிரியர்களும் வெகுவாக எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். கடந்த 10 ஆண்டுகளில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் அறவே இல்லை; முதுகலை ஆசிரியர் டிஆர்பி வழியாகத் தேர்வுகள் எழுதினாலும் எந்த ஆசிரியர் நியமனமும் முறையாக, முழுமையாக நடைபெறவில்லை.

ஆசிரியர்கள் பற்றாக்குறை அதிகமாகிக்கொண்டுவந்தாலும் பணி நிரவலில் மட்டுமே அரசு கவனம் செலுத்துகிறது. இப்படியான சூழ்நிலையில், பள்ளிகளில் ஆசிரியர்களை நியமித்து முழு ஊதியம் அவர்களுக்குக் கொடுத்தால்தான் கற்பித்தலும் சிறப்பாக இருக்கும். ஒரே பள்ளியில், ஒரே வகுப்பில் பாடம் எடுக்கும் ஆசிரியர் ஒருவர் அரசால் நியமிக்கப்பட்ட ஊதியத்திலும், மற்றொருவர் தொகுப்பு ஊதியமாக மிகக் குறைந்த அளவு ஊதியத்தையும் பெற்றுப் பணியாற்றுவது மோசமான ஏற்றத்தாழ்வு.

பள்ளி மேலாண்மைக் குழுக்கள் பள்ளிகளின் தேவைகளையும் பிரச்சினைகளையும் கண்டறிந்து சரிசெய்வதற்கு முக்கியக் காரணியாக விளங்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால், அவர்கள் கையிலேயே கல்விப் பொறுப்பையும் கொடுப்பது என்பது அரசு கல்விப் பொறுப்பிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு கைகழுவும் வேலையைச் செய்கிறதாகத் தோன்றுகிறது. எதிர்காலத்தில், அரசுப் பள்ளியில் படிக்கக்கூடிய எந்தக் குழந்தைக்கும் கல்வி சார்ந்த எந்தப் பிரச்சினை வந்தாலும் அரசு இவர்களைத்தான் கைகாட்டும் என்பதில் ஐயம் இல்லை.

இப்போது நியமிக்கத் திட்டமிட்டிருக்கும் ஆசிரியர்களைத் தொகுப்பூதியத்தை வழங்கியும்கூட அரசு நிரந்தர ஆசிரியர்களாக அவர்களை நியமிக்கலாம். ஆரம்பத்தில் தொகுப்பூதியமாக வழங்கி, பின்னர் நிரந்தரமாக்கும் பணியை முன்னெடுக்க வேண்டும். அதுவே அறம்.

ஜெயலலிதாவின் ஆட்சியின்போது இடைநிலை ஆசிரியர்கள் ரூ.3,000, இளநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் ரூ.4,000, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் ரூ.4,500 என்ற தொகுப்பூதியத்தின் அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். அதற்குப் பிறகு கருணாநிதி அரசில் நிரந்தரப் பணியாளர்களாக இரண்டு ஆண்டுகள் கழித்து, 2006-ல் நிரந்தரம் செய்யப்பட்டனர்.

அது போன்ற ஒரு முன்னெடுப்பைச் செய்தால் வரவேற்கலாம். ஆனால், அதை விடுத்து, நியமனமே பள்ளி மேலாண்மைக் குழு வழியாக, அதுவும் 10 மாதங்களுக்கு மட்டும்தான் இவர்கள் பாடம் எடுக்கப்போகிறார்கள் என்றால், யாருக்கு என்ன பொறுப்பு இருக்கும்? உண்மையான கற்றல் - கற்பித்தல் அங்கு நிகழுமா? வாய்ப்பு மறுக்கப்படும் குழந்தைகள், விளிம்புநிலை மக்களின் குழந்தைகள் போன்றோர்தான் அரசுப் பள்ளிக் குழந்தைகள் என்றால், எப்போதுமே அவர்களுக்குச் சிறப்பாக எதுவும் அமையக் கூடாதா என்ற கேள்வி நம்முன் எழுகிறது.

அரசு உடனடியாக நிரந்தர ஆசிரியர்களைப் பணியிடங்களில் நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கையை வலிமையாக வைப்பதே பெற்றோர் தரப்பு, ஆசிரியர் தரப்புக் குரலாக இருக்க வேண்டும்.

- சு.உமாமகேஸ்வரி,

கல்விச் செயல்பாட்டாளர்.

தொடர்புக்கு: uma2015scert@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in