இலங்கையை ரணில் மீட்பாரா?
கடந்த இரண்டு வாரங்களுக்குள் இலங்கையில் மிக முக்கியமான அரசியல் மாற்றங்கள் நடைபெற்றிருக்கின்றன. இலங்கையின் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ச, கடந்த ஒன்பதாம் திகதி பதவி விலகியதைத் தொடர்ந்து, இரண்டு தினங்கள் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையிலும் நாட்டில் வன்முறைகள் வெடித்தன. வீடுகளும் வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டதோடு, உயிர்ச் சேதமும் ஏற்பட்டது.
தெருக்களில் பல ராணுவ வாகனங்கள், ஆயுதம் தரித்த படையினரோடு உலாவந்துகொண்டிருந்ததோடு, அரச கட்டளைகளை மீறும் எவரையும் பார்த்த இடத்தில் சுட்டுத்தள்ளும் அதிகாரம் ராணுவத்துக்கும் காவல் துறைக்கும் வழங்கப்பட்டிருந்தது. கொழும்பு காலிமுகத்திடல் ‘கோட்டாகோ’ கிராமத்தில் அமைதியாகப் போராடிக்கொண்டிருக்கும் பொதுமக்கள் உடனடியாக அவ்விடத்திலிருந்து நீங்க வேண்டும் என்று காவல் துறை ஒலிபெருக்கி வழியாக அறிவித்ததுமே, அருட்சகோதரிகளும் பௌத்த பிக்குகளும் பொதுமக்களுக்கு எவ்வித ஆபத்துகளும் நேராத வண்ணம் காவல் துறையும் ராணுவமும் பிரவேசிக்கக்கூடிய வழிகளில் காவல் தேவதைகளாக இரவு முழுவதும் அமர்ந்திருந்ததைக் காண முடிந்தது.
ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச தனது சகோதரரான மகிந்த ராஜபக்சவால் ஏவி விடப்பட்ட வன்முறைகளைத் தடுக்க உடனடியாக எவ்வித முயற்சிகளையும் எடுக்காமல் இருந்ததோடு, பொதுமக்களுக்கு ஆதரவாகவோ, பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகவோ எவ்வித உரையையும் ஆற்றாமல் மறைந்திருந்தார். பிறகு, எதிர்க்கட்சிகளினதும் சர்வதேசத்தினதும் அழுத்தம் காரணமாக இரண்டு நாட்கள் கழித்துத் தொலைக்காட்சி வழியாக மக்களிடம் உரையாற்றினார். நாட்டை திவாலாக்கி, நெருக்கடிக்குள்ளும் பஞ்சத்துக்குள்ளும் தள்ளியதற்கும், அண்மைய வன்முறைகளுக்கும் எவ்வித வருத்தத்தையும் மன்னிப்பையும் ஒரு ஜனாதிபதியாக அவர் கோரவில்லை. வன்முறைக்குக் காரணமானவர்கள்மீது, தான் சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக மாத்திரம் தெரிவித்தார்.
என்றபோதிலும், வன்முறைக்கு முழுமையாகப் பொறுப்புக் கூற வேண்டிய அவரது சகோதரர் குடும்பத்தோடு திருகோணமலை கடற்படை முகாமில் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டிருக்கிறார். அந்தக் குடும்பம் கப்பல் வழியாக வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல முற்படுவதாக அறிந்துகொண்டதுமே நூற்றுக்கணக்கான மீனவர்கள் தமது படகுகளோடு கப்பலைச் சூழ்ந்து மறித்து நின்று, அவர்களைத் தப்பிச் செல்ல விடாமல் தடுத்தார்கள். அதே வேளை, பொதுமக்கள்மீது வன்முறையை ஏவிவிட்ட மகிந்த ராஜபக்ச மீதும், அவரது கூலிப் படைமீதும் சட்ட நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வழக்கு தொடர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதனால், வரலாற்றில் முதல் தடவையாக மகிந்த ராஜபக்சவுக்கும் பல அரசியலர்களுக்கும் முக்கியப் பிரமுகர்களுக்கும் விசாரணைகள் முடியும் வரை வெளிநாடுகளுக்குச் செல்ல நீதிமன்றத்தால் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் பிரதமர் இல்லாத நிலையில், இவ்வளவும் நடைபெற்றுக்கொண்டிருப்பதைக் கண்ட ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சவின் வேண்டுகோளுக்கிணங்க, இலங்கையில் மிக நீண்ட அரசியல் அனுபவத்தைக் கொண்டிருக்கும் ரணில் விக்ரமசிங்க கடந்த 12-ம் திகதி இலங்கையின் பிரதமராகப் பொறுப்பேற்றிருக்கிறார். ஜனாதிபதி, ரணிலைப் பிரதமராகத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் இருக்கிறது. கடந்த ஆட்சியிலும் பிரதமராகப் பதவி வகித்துத் தோல்வியுற்றிருந்த ரணில், ராஜபக்ச குடும்பத்தின் நெருங்கிய நண்பர் என்பதால், என்னதான் வெளிப்பார்வைக்கு ராஜபக்ச குடும்பத்தின் குற்றங்கள்மீது, தான் உக்கிரமாக இருப்பதுபோல அவர் காட்டிக்கொண்டாலும், அவர்களுக்கிடையில் நட்புரீதியான மென்மையான அணுகுமுறையே இருந்துவருகிறது. இது ராஜபக்ச குடும்பத்துக்கே சாதகமாக அமையும் என்று அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
எனவே, மக்களால் எப்போதும் தோல்வியுற்ற அரசியல் தலைவராகவே பார்க்கப்படும் புதிய பிரதமர் ரணிலை இலங்கையின் மீட்பரென்றும், இலங்கையின் அனைத்துப் பிரச்சினைகளையும் அவர் தீர்த்துவைப்பார் என்றும் கருத முடியாது. அவரையும், மகிந்த ராஜபக்சவையும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்களாகத்தான் மக்கள் பார்க்கிறார்கள். என்றாலும், ரணில் பிரதமராகப் பதவியேற்றதைப் பொதுமக்கள் கடுமையாக எதிர்க்காமல் இருப்பதற்கு முக்கியமான காரணங்கள் இருக்கின்றன.
அவசரமாகவும் காலம் தாழ்த்தாமலும் இலங்கையில் ஓர் அரசாங்கம் நிறுவப்பட வேண்டும் என்ற இக்கட்டான நிலைமை முதன்மையான காரணி. இலங்கையில் பிரதமரோ அரசாங்கமோ இல்லாத நிலைமை நீடித்தால் உணவு, மருந்து, எரிபொருள், மின்சாரம் என இலங்கை மக்கள் சந்தித்துவரும் நெருக்கடிகள் அனைத்தும் இன்னும் தீவிரமடையும். நாடு முழுவதும் வன்முறை மேலோங்கி, எவரும் தமக்குத் தேவையானவற்றைக் கொள்ளையடிக்க முற்படும் வாய்ப்புகள் அதிகரித்ததால், மக்களின் பாதுகாப்புப் பிரச்சினை என்பது அடுத்த முக்கிய காரணியாக இருந்தது. எனவே, இக்கட்டான இந்நேரத்தில், திவாலாகியுள்ள நாட்டுக்குப் பொறுப்பேற்கத் தைரியமாகவும், நம்பிக்கையோடும் முன்வரும் ஒருவருக்குப் பிரதமர் பதவி வழங்கப்பட வேண்டிய கட்டாயம் உருவானது.
சில மாதங்களுக்குள் இந்த நெருக்கடி நிலைமையை நீக்கி நாட்டை மீண்டும் சாதாரண நிலைக்குக் கொண்டுவருவதை நாட்டிலுள்ள ஏனைய அரசியலர்களை விடவும் ரணிலால் மாத்திரமே சிறப்பாகச் செய்ய முடியும் என்பது மக்களின் நம்பிக்கை. இலங்கையின் ஏனைய அரசியலர்களை விடவும் ரணிலுக்கு சர்வதேசத்திடம் இருக்கும் வரவேற்பையும் நம்பிக்கையையும் பயன்படுத்தி அவர் இந்தச் சிக்கலைத் தீர்க்கக் கூடும். எதையும் பூசி மெழுகி மறைக்காமல், அடுத்த இரண்டு மாதங்களுக்கு நாட்டின் நெருக்கடி நிலைமை படுமோசமாக இருக்கும் என்று அவர் பதவியேற்ற பின்னர் மக்களுக்கு ஆற்றிய உரையில் வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார்.
அனைத்து நாடுகளுடனும் நெருக்கத்தையும் சிறந்த நட்பையும் பேணிவரும் அவரால் அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளிடமிருந்தும் கடனுதவிகளையும் மருத்துவ உதவிகளையும் பெற முடியும். என்றாலும், இதன் மூலம் மக்களின் பிரச்சினைகளுக்குத் தற்காலிகத் தீர்வு மாத்திரமே கிடைக்கும் என்பதையும் மக்கள் நினைவில் கொள்ள வேண்டும். தற்போதும் இலங்கையைத் தாங்க முடியாதளவு சர்வதேசக் கடன்கள் அழுத்திக்கொண்டிருக்கும் நிலையில், இன்னும் இன்னும் கடனாளியாக ஆவதும், நாட்டின் இடங்கள் வெளிநாடுகளுக்கு வழங்கப்படுவதும் தொடர்ந்தும் நீடித்துக்கொண்டிருந்தால், அது எதிர்காலத்தில் இலங்கைக்குச் சாதகமாக அமையுமா என்பது குறித்தும் மக்கள் யோசித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.
இலங்கையின் மீட்சிக்கு நிரந்தரத் தீர்வு வேண்டுமானால், நாட்டுக்குள் உற்பத்தி அதிகரிக்கப்பட வேண்டும். லஞ்சம், ஊழல், இன-மத பேதமற்ற அரசியலர்களாலும், சட்டத்தை மதித்து நேர்மையாக செயல்படக்கூடிய பொதுமக்களாலும் மாத்திரமே அதை நடத்த முடியும். அவ்வாறான நீண்ட காலத் திட்டத்தில், ரணிலின் செயல்பாடுகளில்தான் அவரது பிரதமர் பதவி நிலைப்பது தங்கியிருக்கிறது. எனவே, புதிய பிரதமர் வந்ததுமே மக்கள் எழுச்சிப் போராட்டம் கலைந்துவிடும் என்ற அரசின் எதிர்பார்ப்பைப் பொய்ப்பிக்கும் வகையில் தற்போதும் மக்களின் எழுச்சிப் போராட்டம் நடைபெற்றுக்கொண்டேயிருக்கிறது.
- எம்.ரிஷான் ஷெரீப், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், ஊடகவியலர், இலங்கை. தொடர்புக்கு: mrishansh@gmail.com
