Last Updated : 06 Jun, 2021 03:11 AM

 

Published : 06 Jun 2021 03:11 AM
Last Updated : 06 Jun 2021 03:11 AM

மைதிலி சிவராமன் எனும் களப்போராளி!

அமெரிக்க அரசின் கறுப்பின மக்கள் மீதான ஒடுக்குமுறையை, சிறிய நாடான கியூபா தீவிரமாக எதிர்த்த செயல் மைதிலி சிவராமனை ஈர்த்தது. அப்போது அவர் ஐநா சபையின் இந்தியத் தூதரகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தார். அவருக்கு கியூபப் புரட்சியால் எழுந்த சமூக மாற்றங்களை நேரில் பார்க்கும் விருப்பம் இருந்தது. கியூபாவை எதிரி நாடாக நினைக்கும் அமெரிக்காவில் வசிக்கும் மைதிலி எப்படி கியூபா செல்வது? அமெரிக்க அதிகாரிகளுக்குத் தெரியாமல் முதலில் மெக்ஸிகோ சென்றார். அங்கிருந்து கியூபா சென்றார். புரட்சியும் புரட்சிக்குப் பின் பொதுவுடைமை நாடாக மலர்ந்த கியூபாவின் செயல்பாடுகளும் அவருக்கு நம்பிக்கையளித்தன. மைதிலியின் மனத்தில் இருந்த பொதுவுடைமைச் சிந்தனை மேலும் சுடர்விடத் தொடங்கியது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினராகவும், சிஐடியு தொழிற்சங்கத் தலைவராகவும், அனைத்திந்திய ஜனநாயகச் சங்கத்தின் அகில இந்தியத் தலைவராகவும் தன் வாழ்க்கையின் ஐம்பதாண்டுகளைப் போராட்டங்களில் கழித்த தலைவர் மைதிலி சிவராமன். வசதியான குடும்பத்தில் பிறந்திருந்தாலும், கம்யூனிஸச் சித்தாந்தத்தின் மீது ஈர்க்கப்பட்ட மைதிலி தன் வாழ்நாள் முழுக்கக் களப் போராளியாகவே இருந்தவர். மென்மையும் உறுதியும் துணிவும் கொண்ட தலைவர். பெண்ணுரிமைப் போராளி. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, அல்சைமர் எனும் மறதி நோயால் பாதிக்கப்பட்டிருந்த மைதிலி, மே 30 அன்று காலமானார்.

ஆந்திராவின் காக்கிநாடாவில் 1939 டிசம்பர் 14 அன்று வீட்டின் ஐந்தாவது மகளாக, கடைக்குட்டிப் பெண்ணாகப் பிறந்தவர் மைதிலி. அவரது தந்தை சிவராமன் சென்னையில் பொறியாளராக இருந்ததால், மைதிலி படித்து வளர்ந்தது சென்னையில்தான். படிப்பில் ஆர்வமாக இருந்த மைதிலி, மாநிலக் கல்லூரியில் பிஏ (ஹானர்ஸ்) ‘அரசியல் அறிவியல்’ படித்தார். டெல்லியிலுள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷனில் (ஐஐபிஏ) பொது நிர்வாகத்தில் முதுகலை டிப்ளமோ முடித்தவுடன், 1963-ல் மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றார். நியூயார்க் மாநிலத்திலுள்ள சிரக்யூஸ் பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்தில் எம்ஏ பட்டம் பெற்றார். ஐநா சபையின் இந்தியத் தூதரகத்தில் சில ஆண்டுகள் ஆராய்ச்சியாளராகவும் பணியாற்றினார். அமெரிக்க அதிகாரத்தை எதிர்க்க நினைக்கும் தான், ஐநா சபைப் பணியில் இருப்பது நியாயமற்றது என்று எண்ணிய மைதிலி, உடனடியாகத் தன் பணியைத் துறந்தார்.

இந்தியா திரும்பிய மைதிலிக்குப் பொதுவுடமைச் சமூகம் மலர வேண்டும் என்ற கனவு மட்டுமே தீவிரமாக இருந்தது. அவருடைய உயரிய கல்வித் தகுதிக்காகக் கிடைத்த ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசிரியர் பணி உள்ளிட்டவற்றையும் ஏற்கவில்லை. இந்தியாவில் வினோபாவின் பூமிதான இயக்கம் தீவிரப்பட்டுக்கொண்டிருந்த வேளை. அதில் தன்னை இணைத்துக்கொள்ள வினோபாவின் ஆசிரமத்தில் தங்கி, அவ்வியக்கத்தின் நோக்கத்தை அறிந்தார். தன் பொதுவுடமைச் சித்தாந்தத்துக்கு இவ்வியக்கம் முழுமையாகத் துணை நிற்காது என்று எண்ணிய மைதிலி, அங்கிருந்து வெளியேறினார்.

1968 டிசம்பர் 25. கீழ்வெண்மணி கிராமத்தில் கூலி உயர்வு கேட்டுப் போராடியதால், ஏழை விவசாயக் கூலிகள் 44 பேர் உயிரோடு கொளுத்தப்பட்டனர். செய்தியறிந்து, அந்தப் பகுதியைச் சேர்ந்த காந்தியச் செயல்பாட்டாளர் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனுடன் சேர்ந்து கீழ்வெண்மணிக்குச் சென்றார். விவசாயக் கூலிகள் மேல் நிகழ்த்தப்பட்ட வன்கொடுமையைப் பற்றி ஆங்கில இதழ்களில் கட்டுரைகளை எழுதினார். கீழ்வெண்மணி சம்பவத்தை உலகின் கவனத்துக்குக் கொண்டுசென்றதில் மைதிலிக்குப் பிரதானப் பங்குண்டு. தீவிரமான களப்பணியாளராக மைதிலி தன்னை அர்ப்பணித்துக்கொண்டது வெண்மணி சம்பவத்துக்குப் பிறகுதான்.

சென்னையில் சிம்சன், டிவிஎஸ், மெட்டல் பாக்ஸ், அசோக் லேலண்ட், டேபலெட் இந்தியா, பாலு கார்மென்ட்ஸ் போன்ற தொழிற்சங்கங்களின் போராட்டத் தலைவராகத் தொழிலாளிகளோடு சேர்ந்து களத்தில் நின்றிருக்கிறார். ரேஷன் தட்டுப்பாடு, தண்ணீர் பிரச்சினை, கழிப்பறை வசதி, பெண்கள் மீதான வன்முறை, திரைப்படங்களில் ஆபாசம், பெண் உரிமை உள்ளிட்ட பெண்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு முன்னணிப் போராளியாகக் களம் நின்றிருக்கிறார். சட்டரீதியான தீர்வுகளுக்கும் வழிவகுத்திருக்கிறார்.

கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டங்களுக்குத் தன் மகள் செல்வதை மைதிலியின் தந்தை சிவராமன் விரும்பவில்லை. கட்சிப் பணிகளுக்குச் சென்றுவிட்டு, தாமதமாக வீட்டுக்குத் திரும்பும் மைதிலிக்கு அவரது தந்தை கதவைத் திறக்க மாட்டார். வீட்டில் சாப்பாடு போடக் கூடாது என்பார். தாயார் பங்கஜம்தான் மைதிலிக்கு ஆறுதல். களப்பணியோடு எழுத்திலும் பத்திரிகைத் துறை மீதும் மைதிலிக்கு நாட்டம் இருந்தது. அமெரிக்காவில் இருந்தபோது நண்பர்களாகியிருந்த இந்திய நண்பர்களான ப.சிதம்பரம், என்.ராம்ஆகியோருடன் சேர்ந்து, ‘ரேடிகல் ரிவ்யூ’ என்ற ஆங்கில இதழைத் தொடங்கினார் மைதிலி. ‘ரேடிகல் ரிவ்யூ’ இதழில் ஆசிரியர் குழுவில் பணியாற்ற வந்த கருணாகரனோடு இருந்த ஒத்த சிந்தனையால் இருவரும் வாழ்க்கையிலும் இணைந்தனர்.

தன்னுடைய அர்ப்பணிப்புகளுக்காகச் சமூகத்திடமிருந்து எந்தப் பிரதிபலனையும் பெறாமல், கடைசி வரை கடைநிலைக் களப்போராளியாக மட்டுமே நிலைநிறுத்திக்கொண்டவர் மைதிலி. ‘வெண்மணி ஒரு காலத்தின் பதிவு’, ‘ஆண் குழந்தைதான் வேண்டுமா?’, ‘கல்வித் துறையில் வறுமையால் நசுக்கப்படும் குழந்தைகள்’ உள்ளிட்ட பல நூல்களை எழுதினார் மைதிலி. மைதிலியின் மகள் கல்பனா தன் அம்மாவைப் பற்றி, ‘காம்ரேட் அம்மா’ என்றொரு புத்தகம் எழுதியிருக்கிறார். கல்பனாவுக்கு மட்டுமல்ல; இன்றும் களங்களில் நின்று போராடிக்கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் அவர் காம்ரேட் அம்மாதான். அரிதின் முயன்று அவரடைந்த உயரிய இடம் அது!

- மு.முருகேஷ், தொடர்புக்கு: murugesan.m@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x