Published : 27 Dec 2020 03:14 AM
Last Updated : 27 Dec 2020 03:14 AM

தொ.ப: அரசியலைப் பேசிய ஆய்வாளர்!

தமிழ்த் துறைப் பேராசிரியர் என்றாலும் தொ.ப.வின் அடையாளம் பண்பாட்டு ஆய்வாளர் என்பதே. அவரது ‘அழகர் கோயில்’ ஆய்வேடு அதற்கான தொடக்கப்புள்ளி. அவரது சக ஆய்வாளர்கள் தலவரலாறுகளிலும் கல்வெட்டுச் செய்திகளிலும் கவனம் செலுத்திக்கொண்டிருந்தபோது ஒரு கோயிலுக்கும் குறிப்பிட்ட நான்கு சாதியினருக்குமான உறவைப் பற்றி பேசியது அந்த ஆய்வேடு. தமிழில் அதிகம் விவாதிக்கப்பட்ட ஆய்வேடுகளில் அதுவும் ஒன்று. அவரது கட்டுரைத் தொகுப்புகளான ‘பண்பாட்டு அசைவுகள், ‘அறியப்படாத தமிழகம்’ஆகியவை தீவிர வாசிப்பில் அடியெடுத்து வைப்பவர்களுக்கான பரிந்துரைப் பட்டியலில் நிரந்தர இடம்பிடித்திருக்கின்றன.

பண்பாட்டு ஆய்வு என்பதை அரசியல் ஆய்வாகவும் கருதினார் தொ.ப. அரசியலின் வழியாக மட்டுமின்றிப் பண்பாட்டின் வழியாகவும் அதிகாரம் செலுத்தப்பட்டுவருகிறது என்ற நிலைப்பாட்டிலிருந்தே அவர் ஆய்வுகளை நடத்தினார். புத்தகங்களுக்கு வெளியே மக்களிடம் சென்று ஆய்வுகளை நடத்த வேண்டும் என்று நா.வானமாமலை முன்னெடுத்த ஆய்வியக்கத்தில் தொ.ப. மட்டுமே மாணவரல்லர். அவருடன் சேர்ந்து இயங்கிய மற்ற ஆய்வாளர்களும் இருக்கிறார்கள்.

மார்க்ஸிய ஆய்வுமுறைகளைப் பின்பற்றிக் கட்டுரைகளை எழுதுவதோடு தங்களது ஆய்வுகளின் எல்லைகளை அவர்கள் வரையறுத்துக்கொண்டனர். தொ.ப. மட்டுமே முன்னகர்ந்து சமகால சமூக, பொருளாதார, அரசியலையும் சேர்த்துப் பேசினார். ஒரு ஆய்வாளராக மட்டும் அவர் தன்னைச் சுருக்கிக்கொள்ளவில்லை. ஒரு அரசியல் செயல்பாட்டாளராகவும் அவர் விளங்கினார். உண்மைக்கும் பொய்க்கும் நடுவில் நடுநிலைமை பேணுவதுதான் ஆய்வாளருக்கான அழகு என்பது எப்படி சரியாக இருக்க முடியும்? அவர் உண்மையின் வழியே நின்றார்.

தன்னுடைய ஆய்வுக் கட்டுரைகள் சர்வதேச ஆய்விதழ்களில் வெளியாக வேண்டும் என்றோ பெருநிறுவனங்களின் உதவித்தொகைகளைத் தான் பெற வேண்டுமென்றோ தொ.ப. விரும்பியதில்லை. தன்னுடைய ஆய்வுக் கட்டுரைகளை அனைவருக்கும் கொண்டுசேர்க்க வேண்டும் என்றே அவர் விரும்பினார். அதன் காரணமாகவே, அடிக்குறிப்புகள் இடுவதைத் தவிர்த்தார். சான்றாதாரங்களையும் கட்டுரைகளுக்கு நடுவிலேயே குறிப்பிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். சான்றாகக் குறிப்பிட்ட புத்தகங்களில் பேசப்படும் மற்ற விஷயங்களையும் தொட்டுக்காட்டினார். அதன் வழியாக, அவரைப் பின்தொடரும் இளம் ஆய்வாளர்களுக்கு வழிகாட்டினார்.

முக்கியமாக, ‘தமிழில் முதல் முறையாக’தனது கண்டுபிடிப்பு என்று அவர் எந்த உரிமையும் கோரியதில்லை. மக்களிடமே எடுக்கப்பட்டது, அவர்களுக்கே மீண்டும் அது அளிக்கப்பட்டது என்பதாகவே அவரது ஆய்வுமுறைகள் அமைந்தன. மக்களுக்கும் தெரியும், அவர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாதே தவிர அவர்களும் அறிஞர்கள்தான் என்ற கருத்து அவருக்கு இருந்தது. அவரது கள ஆய்வுகளின் வெற்றிக்கான காரணமும் அதுவே.

ஆய்வுகளில் காட்டிய ஆர்வத்தை, அதை மக்களிடம் கொண்டுசேர்க்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தனது கட்டுரைகள் தொகுத்து வெளியிடப்பட வேண்டும் என்பதில் அவர் காட்டியதில்லை. பத்திரிகைகளில் வெளிவந்த அவரது சில நேர்காணல்களையும் கட்டுரைகளையும் ‘செவ்வி’, ‘பரண்’ என்ற தலைப்புகளில் தொகுத்தார் அவரது மாணவ நண்பர்களில் ஒருவரான ஆய்வாளர் சித்தானை. மாணவ நண்பர்களுடனான உரையாடலை மிகவும் விரும்பியவர் அவர். சுந்தர்காளியுடன் அவர் நடத்திய உரையாடலின் நூல்வடிவமான ‘சமயங்களின் அரசியல்’ அவருக்கு மிகவும் பிடித்த புத்தகங்களில் ஒன்று.

மாணவ நண்பர்கள் என்று சொல்வதற்குக் காரணம், அவர் மாணவர்களை நண்பர்களாகத்தான் நடத்தினார் என்பது மட்டுமல்ல. கல்வித் துறை வட்டத்துக்கு வெளியே அவரது நண்பர்கள் பலருக்கும் அவர் ஆய்வு வழிகாட்டியாக இருந்தார். புத்தக அலமாரிகளைத் திரைபோட்டு மறைக்கிற ஆய்வாளராக அவர் இருந்ததில்லை. அவரது வீடு நண்பர்களால் நிறைந்திருந்தது. அவரது புத்தகங்களும் அவர் வீட்டில் சமைக்கப்படுகிற உணவும் எல்லோருக்குமானதாக இருந்தது. அவரது ஆய்வுப் பயணங்கள் அனைத்தும் நண்பர்களோடுதான் நடந்தன. நண்பர்களின் ஆய்வுப் பயணங்களில் தானும் ஒருவராகப் பங்கெடுத்துக்கொள்வதிலும் அவருக்கு எந்த மனத்தயக்கமும் இருந்ததில்லை.

தொ.ப.வின் இறுதி ஊர்வலத்தில் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்து எழுத்தாளர்களும் பத்திரிகையாளர்களும் வந்து கலந்துகொண்டனர். எழுத்தாளர்களுக்கும் அவர் ஆய்வுத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார். உள்ளூர்ச் செய்தியாளர்கள் எந்த நேரத்திலும் அவரிடம் வரலாற்றுத் தகவல்களைக் கேட்டுப்பெற முடியும். ஆய்வும் அதன் முடிவும் அனைவருக்குமானது, அதில் ஆய்வாளரின் பெயர் குறிப்பிடப்பட வேண்டிய அவசியம்கூட இல்லை என்று வாழ்ந்துகாட்டிச் சென்றிருக்கிறார் தொ.பரமசிவன்.

‘அவரை மனிதனாக உயிர்ப்போடு அணுகுவதன் வழியாகத்தான் இன்னொரு தொ.பரமசிவன் உருவாகும் சூழலை உருவாக்க முடியும்’ என்று தனது இரங்கல் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார் கமல்ஹாசன். அது அவ்வளவு எளிதா என்ன? ஒரு ஆய்வாளர் தான் சார்ந்திருக்கும் கல்வி நிறுவனத்துக்குள்ளேயே எவ்வளவு போராட்டங்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது என்பதற்கும் தொ.ப.வின் பணிக்காலமே ஓர் உதாரணம். மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவர் பதவியைத் துறந்து, விருப்ப ஓய்வு என்னும் முடிவை நோக்கி அவரைத் தள்ளிய அவரது சகாக்களும், அதற்குத் துணைநின்றவர்களும்கூட இன்று பெயர்பெற்ற ஆய்வாளர்களாகத்தான் இருக்கிறார்கள்.

- செல்வ புவியரசன், puviyarasan.s@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x