Published : 11 Nov 2020 10:17 AM
Last Updated : 11 Nov 2020 10:17 AM

சில தருணங்களும் சில நிகழ்வுகளும் 11: ‘இனிமை’யானவர்கள்

அவர் மிகவும் இனிமையானவர். அவர் மனைவியோ அவரைவிட இனிமையானவர். இந்த ‘இனிமை’ குணத்தில் அல்ல; அவர்களின் ரத்தத்தில் உள்ள ‘இனிமை’. ஆம்... இருவரும் சர்க்கரை நோயாளிகள்! பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே நம் தேசத்தில் வர்ணிக்கப்பட்ட ‘மதுமேகம்’ வியாதி. ‘இனிப்பான சிறுநீர்’ என்று அர்த்தம்.

இவர்களுக்கு இந்த வியாதி இருப்பதை அவர்கள் அறிவார்களா? தெரிந்திருந்தாலும் அதைக் கட்டுக்குள் வைத்திருக்கிறார்களா? இது டைபாயிடு போன்று முழுவதும் குணப்படுத்தக்கூடிய நோய் அல்ல. கட்டுக்குள் வைக்க வேண்டிய ஒன்று.

இந்தியர்களில் 50 சதவீதத்தினர் இந்த நோய் உள்ளவர்களாகவோ இந்த நோய் வரும் சாத்தியம் உள்ளவர்களாகவோ இருப்பது துரதிர்ஷ்டவசம்தான். இது தெரியவருவது அநேகமாக இரண்டு விதத்தில்தான். அதுவும் தற்செயலாகத்தான். சின்ன நோய்வாய்ப்பட்டோ, அடிபட்ட புண் ஆறாமல் போனாலோ, மருத்துவர் சர்க்கரை அளவைப் பரிசோதிப்பார். அல்லது பணியிடத்திலோ, ஆயுள் காப்பீடு செய்து கொள்ளும்போதோ ‘மாஸ்டர் ஹெல்த்’ பரிசோதனை செய்யும்போதோ தெரிய வருகிறது. இந்த நிலையில் இது உங்களுக்கு 2 - 3 வருடங்களாகவாவது இருந்திருக்கும்.

இந்த Type-II என்ற வகை சர்க்கரை நோய் நடு வயதில் தொடங்குகிறது. பரம்பரையாக வரும் சாத்தியமும் உள்ளது. பெற்றோர் இருவருக்குமோ அல்லது

ஒருவருக்கோ இந்த நோய் இருப்பின் குழந்தைகளில் நால்வரில் மூவருக்கு இது வரக்கூடும். மேலும், அப்பாவுக்கு 60 வயதில் வந்தால் மகனுக்கு 50-55 வயதில் வரலாம். பெற்றோருக்கு இல்லாவிடினும் அவர்களது உடன்பிறப்புகளில் இருந்திருக்கிறதா, அவர்களின் சந்ததிகளுக்கு உள்ளதா என்பது போன்ற விவரங்களை அறிவது முக்கியம்.

வருமுன் காப்பதற்கோ, வரும் வயதைத் தள்ளிப்போடவோ முடியும். பெண் எடுக்கும்போதோ, பெண் கொடுக்கும்போதோ, நாம் குடும்பத்தின் தகுதி, குணம், ‘கட்டங்களின்’ சேர்க்கை இதைப் பற்றித்தான் நினைக்கிறோம். சர்க்கரை வியாதி உள்ளதா என்பதை நினைக்கவோ, வெளிப்படையாக கேட்கவோ அல்லது அதைக் காரணமாக நினைத்து அந்தத் திருமணத்தை நிறுத்தவோ அவசியமில்லை. ஆனால், தம்பதிகள் இதைப் பற்றி பேசி, வருமுன் காப்பதுடன் குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்ப்பதையும் திட்டமிட வேண்டும்.

பொதுவாக எல்லோரும் 50-55 வயதில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், இதயப் பரிசோதனை, பெண்களுக்கு மார்பு மற்றும் கருப்பை புற்றுநோய், ஆண்களுக்கு புராஸ்டேட் சுரப்பி பரிசோதனை எல்லாம் செய்துகொள்ள வேண்டும்.

சர்க்கரை நோய் உள்ள குடும்பத்தில் பிறந்தவர்கள் 40 வயதிலேயே கீழ்க்கண்ட பரிசோதனைகளைச் செய்து கொள்வது இன்றியமையாதது.

சர்க்கரை அளவு - வெறும் வயிற்றில், சிற்றுண்டிக்கு ஒன்றரை முதல் இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு. முக்கியமாக HbA1c% என்கிற பரிசோதனை. இது முந்தைய மூன்று மாதங்களில் சர்க்கரை அளவு எப்படி இருந்தது என்பதைக் காண்பிக்கும். இதை ஒரு நாளில் எப்போது வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம்.

அதாவது வெறும் வயிறு, உணவுக்குப் பிறகு என்கிற கட்டுப்பாடுகள் கிடையாது.

இந்தப் பரிசோதனையை 40 வயதிலிருந்து 6 மாதத்துக்கு ஒருமுறை கண்டிப்பாகச் செய்துகொள்ள வேண்டும். அதன் அளவு அதிகரித்தால் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை செய்ய வேண்டும். இந்த டெஸ்ட்டில் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ள முடியாது. நாளை மறுநாள் ‘சுகர் டெஸ்ட்’ என்றால் குற்ற உணர்வுடன் உணவைக் குறைத்துக்கொண்டும், சிற்றுண்டி 2 இட்லி, 1 வடை என்று அளவாகவும் சாப்பிடுவோம்.

வீட்டில் தினசரி அப்படியா? 2 இட்லி சட்னியுடன், 2 இட்லி சாம்பார் அல்லது பழங்குழம்புடன், ருசிச்சு ஒன்று பொடியுடன். மேலும், அம்மா சொல்லுவாங்க... ‘‘இந்த மிச்சம் ரெண்டை நான் எங்கே வைத்து மூட? நீ ஒன்று... நான் ஒன்றுமாகத் தீர்த்து விடுவோம்.. எப்படி பஞ்சு மாதிரி இருக்கு பார் இந்த இட்லி...’’ என்பார்.

மருந்து விவரங்கள், உணவு முறைகள் பற்றி மருத்துவரும், உணவு ஆலோசனை நிபுணர்களும் கூறியிருப்பார்கள். பூமிக்கடியில் விளைவதில் வெங்காயம், இஞ்சி, பூண்டு, முள்ளங்கிதான் சேர்க்கக் கூடியவை. மாவுச்சத்துள்ள கிழங்கு வகைகள், ஆல்வள்ளி, சர்க்கரை வள்ளி, உருளை, கருணை, சேனை, சர்க்கரை உள்ள பீட்ரூட், காரட் ஆகியவற்றைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். நார்ச்சத்து மிகுந்த காய்கறிகள் (கொத்தவரை, பீர்க்கை, புடலை, பீன்ஸ், அவரை, செளசெள, கீரைகள்) குடலில் செரித்த உணவு மெதுவாக ரத்தத்தில் சேரும்படி செய்கின்றன. கலோரிகளும் குறைவு. வாயினுள் போகும் ஒவ்வொரு கவளத்திலும் எவ்வளவு மாவுச்சத்து, சர்க்கரை இருக்கிறது என்கிற கவனம் தேவை. ‘டயட்’ என்றாலே ருசியற்ற உணவு என்று

பலரும் எண்ணுகிறார்கள். புளி, உப்பு, காரம், தாளிப்பு, பெருங்காயம் எல்லாம் சேர்க்கலாம்.

‘‘ஒருநாள் சாப்பிடுவதால் ஒன்றும் ஆகாது’’ என்று உபசரிப்பவரிடம் சின்ன சிரிப்புடன் ‘‘ஒருநாள் மட்டும் விஷம் சாப்பிடவா?’’ என்று கூறுங்கள். இனிப்புகள் வெல்லமோ, கற்கண்டோ, கேசரியோ, பாயசமோ இவை நேராக வயிற்றில் இருந்து ரத்தத்தில் உறிஞ்சப்பட்டு, ‘சுகர்’ எகிறி விடும் எச்சரிக்கை.

தேன், பனங்கற்கண்டு, கருப்பட்டி எல்லாம் ‘நல்ல சர்க்கரை’ என்று கூறுவார்கள். அவை ‘நல்ல’ எதனால்? வேதிப் பொருட்களால், வெள்ளைச் சர்க்கரையைப்போல் சுத்திகரிக்கப்படுவதில்லை. அதனால், இரும்புச் சத்து, சுண்ணாம்புச் சத்து இவை இருக்கும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் ‘அஸ்கா’வுக்குப் பதில் இவற்றை உபயோகிப்பது நல்லது. ஆனால், இவை எல்லாமே சர்க்கரைதான். அதனால், நீரிழிவு நோயாளிகளுக்கு இவை நல்லதல்ல.

பெரும்பான்மையான பெண் நோயாளிகள், குடும்பத்தினருக்குச் சமைப்பதையே தாங்களும் சாப்பிடுகிறார்கள். தன் வியாதிக்கு ஏற்ப நார்ச்சத்து உள்ள காய்கறிகளையோ, சுண்டல் வகைகளையோ செய்து கொள்வதில்லை. சப்பாத்தியோ, கோதுமை சாதமோ செய்து கொள்வார்கள். அது மட்டும் போதாது. மற்றுமொரு வருந்தத்தக்க விஷயமும் இருக்கிறது. சாப்பாட்டு மேசையில் மீதி இருக்கும் உணவை, அது தனக்கு ஒத்துக்கொள்ளாததாக இருந்தாலும் வீணாக்க மனமின்றி உண்டு வயிறை ‘குப்பைக் கூடை’ ஆக்கிக்கொள்வார்கள். ‘மக்கும் குப்பை’தான். ஆனாலும், மக்கிய பின் சர்க்கரை அளவைக் கூட்டும் அல்லவா?

உணவுக் கட்டுப்பாட்டால் எடையைக் குறைக்கலாம். நீங்கள் இப்போது சாப்பிடும் அளவில் மூன்றில் ஒரு பங்கைக் குறைத்தால் ஒரு நாளைக்கு 75 கிராம் எடை

குறையும். என்ன அற்பமாகத் தோன்றுகிறதா? 75 x 30 = 2.25 கிலோ ஒரே மாதத்தில்! இதற்கு மேல வேகமாகப் பட்டினி கிடந்து எடையைக் குறைத்தால் ‘டயட்டிங்’ நிறுத்தியவுடன் கிடுகிடுவென்று எடை கூடும்.

இதைச் செய்வது கஷ்டமில்லை. 3 தோசைக்குப் பதில் இரண்டு, 3 கரண்டி பொங்கலுக்குப் பதில் இரண்டு. நடுநடுவில் நீர் மோர் குடித்து வயிற்றை நிரப்புங்கள். ஒரு மாதத்திலேயே வயிறு சுருங்கி அதிகம் சாப்பிடவே தோன்றாது.

சந்திப்போம்... சிந்திப்போம்..!

கட்டுரையாளர்: கல்யாணி நித்யானந்தன்,
இதயநோய் நிபுணர் (பணி நிறைவு),

டாக்டர் கல்யாணி நித்யானந்தன், 1969-ல் தமிழகத்தின் முதல் கரோனரி சிறப்பு சிகிச்சைப் பிரிவு சென்னையில் அமையக் காரணமாக இருந்தவர்களில் ஒருவர்.

தொடர்புக்கு:joenitya@yahoo.com
ஓவியம்: வெங்கி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x