

சிறந்த இலக்கியப் படைப்புகளுக்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் புக்கர் பரிசுகள், உலகளாவிய இலக்கிய வாசகர்களால் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்றன. நேரடியாக ஆங்கிலத்தில் எழுதப்படும் நாவல்களுக்கு ‘புக்கர் பரிசு’ வழங்கப்படுகிறது.
அதேவேளையில், உலகின் எந்த மொழியில் எழுதப்பட்ட நாவலும் சிறுகதைத் தொகுப்பும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பிரிட்டன் அல்லது அயர்லாந்தில் வெளியிடப்பட்டிருந்தால், அது ‘சர்வதேச புக்கர் பரிசுக்கான’ போட்டியில் தகுதி பெறுகிறது.
நூலாசிரியரோடு மொழிபெயர்ப்பாளரின் பங்களிப்பையும் அங்கீகரிக்கும் வகையில், 50,000 பவுண்டுகள் கொண்ட பரிசுத் தொகை இருவருக்கும் சமமாகப் பகிர்ந்து அளிக்கப்படுகிறது.
தேச எல்லைகளைக் கடந்து சிந்திக்கும் ஓர் இலக்கியச் சமூகத்தை உருவாக்குவதே இந்தப் பரிசின் முதன்மை நோக்கம். 2026ஆம் ஆண்டுக்கான சர்வதேச புக்கர் பரிசுப் போட்டியில் 128 புத்தகங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. பிப்ரவரி 24 அன்று வெளியான 13 நூல்கள் கொண்ட முதல் பட்டியலிலிருந்து, இறுதிப் போட்டிக்கான 6 நூல்கள் கடந்த மார்ச் 31 அன்று அறிவிக்கப்பட்டன.