

உலக வங்கி அண்மையில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், இந்தியாவில் 2011-12இல் 27.1% ஆக இருந்த தீவிர வறுமைக் குறியீடு, 2022-23இல் 5.3% ஆகக் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பு இருந்ததைவிடக் குறைந்துள்ளது என்கிறபோதும், இந்தியாவில் இன்னும் 7.4 கோடி பேர் தீவிர வறுமைக்கோட்டின் கீழ் இருப்பதாகவும் இந்த ஆய்வு குறிப்பிடுகிறது.
இந்திய நிலவரம்: வளர்ந்துவரும் நாடுகளில் உள்ள பணவீக்கம், தனிநபர் வாழ்க்கைச் செலவினம் அதிகரிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, தீவிர வறுமைக்கோட்டை நிர்ணயிக்கும் தினசரி குறைந்தபட்ச வருமான வரம்பை 2.15 டாலரில் இருந்து 3 டாலராக உலக வங்கி உயர்த்தியுள்ளது. வாங்கும் திறன் சமநிலை (Purchasing Power Parity - PPP) முறைப்படி, இந்திய மதிப்பில் தினசரி ரூ.65க்கும் குறைவாக வருமானம் ஈட்டுபவர், தீவிர வறுமைக்கோட்டின்கீழ் இருப்பவராக வரையறுக்கப்பட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.