காங்கிரஸ், கம்யூனிஸ்ட், ஆர்எஸ்எஸ் இயக்கங்கள் - ஒரு பார்வை | நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 66

டாக்டர் ஹெட்கேவர், பாலாசாகேப் தேவரஸ், கோல்வல்கர்.
டாக்டர் ஹெட்கேவர், பாலாசாகேப் தேவரஸ், கோல்வல்கர்.
Updated on
6 min read

இன்றைக்கு பல அரசியல் இயக்கங்கள் நூற்றாண்டைக் கடந்துள்ளன... சில நூற்றாண்டை நெருங்குகின்றன... அவற்றுள் திராவிட இயக்கம், கம்யூனிஸ்ட், ஆர்எஸ்எஸ் இயக்கங்கள் மற்றும் சோசலிஸ்ட் இயக்கம், சுதந்திரா கட்சி ஆகியவை முக்கியமானவை.

கடந்த 1985-ம் ஆண்டு காங்கிரஸ் தனது நூற்றாண்டைக் கொண்டாடியது. அப்போது ராஜீவ்காந்தி இருந்தார். அன்றைய காலத்தில் காங்கிரஸ் வெளியிட்ட நூற்றாண்டு மலரில் காமராஜர் படத்துக்குப் பதிலாக, காங்கிரஸ் தலைவராக இருந்த ஆந்திர வங்கியின் நிறுவனர் பட்டாபி சீதாராமய்யா படத்தை பிரசுரித்தது பெரும் விவாதமானது. சமீபத்தில் சோசலிஸ்ட் கட்சிபூனாவில் 90-வது ஆண்டைக் கொண்டாடியது. தற்போது ஆர்எஸ்எஸ் இயக்கம் நூற்றாண்டைக் கொண்டாடுகிறது.

அகில இந்திய தேசிய காங்கிரஸ் என்று சொல்லப்படும் காங்கிரஸ் கட்சி இந்தியாவில் உள்ள பெரிய அரசியல் கட்சிகளுள் முக்கியமானது. 1885-ம் ஆண்டு ஒரு சமரச இயக்கமாக காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டு பின்னாளில் இந்திய விடுதலை இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லும் ஒரு போராட்ட இயக்கமாக உருவெடுத்தது. இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்ததில் பெரும் பங்கு வகித்தது. இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில் இந்த இயக்கத்தில் கிட்டத்தட்ட 70 மில்லியன் மக்கள் பங்கெடுத்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

விடுதலைக்குப் பின், தேசப் பிதா மகாத்மா காந்தி, காங்கிரஸ் இயக்கத்தை கலைத்து விடலாம் என்று விரும்பியபோது, காங்கிரஸ் இயக்கத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான பண்டித ஜவஹர்லால் நேருவின் தலையீட்டினால், காங்கிரஸ் இயக்கம் அரசியல் கட்சியாக மாற்றப்பட்டு, பல தேர்தலைகளைச் சந்தித்து வெற்றியும் பெற்றது.

இந்தியா விடுதலை அடைந்த 1947-ம் ஆண்டுக்குப் பிறகு கிட்டத்தட்ட 54 வருடங்கள் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தது. காங்கிரஸ் சார்பில் 7 பேர் பிரதமர் பதவியை வகித்தார்கள். மேற்கொண்டு 4 வருடங்கள் காங்கிரஸ் ஆதரவுடன் பிற கட்சிகளின் ஆட்சி அமைந்தது. இந்தியாவை அதிக ஆண்டுகள் ஆண்ட ஒரே கட்சி என்ற பெருமை காங்கிரசுக்கு உண்டு. தற்போது ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முதன்மைக் கட்சியாக காங்கிரஸ் விளங்கி வருகிறது.

காங்கிரஸ் வளர்ச்சியில் மகாத்மா காந்தி, காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், சர்தார் படேல், ஜவஹர்லால் நேரு, மதன் மோகன் மாளவியா மட்டுமல்லாமல் தொடக்க காலத்தில் இருந்த தலைவர்களான திலகர், விபின் சந்திர பால், லாலா லஜபதி ராய் போன்றோரின் பணிகளும் பெரும் பங்கு வகித்தன.

அதேபோல் மற்றொரு அரசியல் இயக்கமான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, 1925-ம் ஆண்டு டிசம்பர் 26 அன்று கான்பூரில் நடந்த முதல் மாநாட்டில் உருவாக்கப்பட்டது. அக்கட்சியின் பொதுச் செயலாளராக எஸ்.வி.காதே பொறுப்பேற்றார். உலகின் பல்வேறு பகுதிகளில் வெளிநாட்டினரின் உதவியுடன் இந்தியர்களால் உருவாக்கப்பட்ட பல கம்யூனிஸ்ட் குழுக்கள் இருந்தன. தாஷ்கண்டில் உருவாக்கப்பட்ட ஒரு குழு, உஸ்பெகிஸ்தான், வங்காளத்தில் அனுஷிலன் மற்றும் ஜுகந்தர் குழுக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி இருந்தது.

மேலும் பம்பாயில் ஸ்ரீபாத் அம்ரித் டாங்கே தலைமையிலும், சென்னை மாகாணத்தில் சிங்காரவேலர் தலைமையிலும், ஐக்கிய மாகாணங்களில் செளகத் உஸ்மானி தலைமையிலும், பஞ்சாப், சிந்து பகுதிகளில் குலாம் ஹுசைன் தலைமையிலும், ஒரிசாவில் பகபதி சரண் பனிக்ரஹி தலைமையிலும் வங்காளத்தில் முசாபர் அலி தலைமையிலும் சிறு சிறு குழுக்கள் உருவாக்கப்பட்டன.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உருவான ஆண்டு 1925-ம் ஆண்டு என பொதுவாகக் கூறப்பட்டாலும், அது சர்ச்சைக்குரியதாக இருந்தது. ஏனென்றால் 1964-ம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - சிபிஎம்), கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டது 1920-ம் ஆண்டு அக்டோபர் 17-ம் தேதி என்றும், அன்றைய தினத்தையே கட்சி நிறுவன நாளாகவும் கருதுகிறது.

அன்றைய நாளில்தான் எம்.என்.ராய், எவ்லின் ட்ரென்ட் ராய், அபானி முகர்ஜி, ரோசா ஃபிட்டிங்கோவ், முகமது அலி, முகமது ஷபிக் மற்றும் எம்.பி.டி. ஆச்சார்யா ஆகியோர் ஒன்றிணைந்து தாஷ்கண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவினார்கள் என்று கூறுகின்றனர்.

எப்படியிருப்பினும் அன்றைய தொடக்க காலத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படவில்லை, காரணம் அன்றைய காலத்தில் அரசியலமைப்பை இந்தக் கட்சி ஏற்றுக் கொள்ளவில்லை. இது சர்வதேசத்தில் உறுப்பினராவதற்கு விதிக்கப்பட்ட முக்கிய நிபந்தனைகளில் ஒன்றாக இருந்தது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் 1964-ம் ஆண்டு ஏற்பட்ட பிளவால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உருவாகி சிபிஐ மற்றும் சிபிஎம் என இரு பிரிவாகச் செயல்பட்டது. இரண்டு இயக்கங்களும் பெரிய அளவில் உருவெடுத்தன. இந்திரா காந்தியை சிபிஐ ஆதரித்தது. 1996 முதல் 1998 வரை ஐக்கிய முன்னணி அரசாங்கத்தில் பங்கெடுத்தது. தேவகவுடா மற்றும் குஜ்ரால் அமைச்சரவையிலும் இடம்பெற்றது.

இந்திய கலாச்சார, பண்பாட்டு இயக்கம் ஆர்எஸ்எஸ்

நூற்றாண்டு கண்ட மற்றொரு முக்கியமான இயக்கம் ஆர்.எஸ்.எஸ். உலகின் மிகப் பெரிய கலாச்சார, பண்பாட்டு இயக்கமாக ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்.) உயர்ந்திருக்கிறது என்றால், அதன் பின்னணியில் டாக்டர் ஹெட்கேவரின் தொலைநோக்குச் சிந்தனையும், கோல்வல்கரின் இயக்கத்தைக் கட்டமைக்கும் பேராளுமையும், பாலாசாகேப் தேவரஸின் சித்தாந்தச் செயலாக்கமும் இருப்பதை நம்மால் மறுக்க இயலாது. இந்த மூவரால் வடிவமைக்கப்பட்ட பாதையில், அவர்களின் சீரிய தலைமை ஏற்றுக்கொண்ட ஈடு இணையற்ற இயக்கமாக ஆர்எஸ்எஸ் திகழ்ந்து வருகிறது.

கடந்த 1925-ஆம் ஆண்டு விஜயதசமி நாளன்று ‘டாக்டர்ஜி’ என்று அழைக்கப்பட்ட கேசவ பலிராம் ஹெட்கேவர், இளைஞர்கள் ஒருசிலருடன் தொடங்கிய சுயபாதுகாப்புக்கான குழு, இன்றைக்கு ஆல்போல் தழைத்து, மகத்தான பேரியக்கமாக உருப்பெற்றிருக்கிறது.
தேசபக்தி, கட்டுப்பாடு, ஒழுக்கம், ஈடுபாடு, சகோதரத்துவம் உள்ளிட்ட பண்புகளை உள்ளடக்கியதாக இந்த இயக்கம் திகழ்கிறது.
தனிமனித ஒழுக்கம் பேணிப் பாதுகாக்கப்பட்டால்தான் ஓர் உயர்ந்த, நல்ல சமுதாயத்தைக் கட்டமைக்க முடியும் என்கிற உயர்ந்த சிந்தனை. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இணையும் ஒவ்வொருவருக்குமான அடிப்படை இலக்கணமாக உள்ளது.

ஆர்.எஸ்.எஸ். என்பது இந்து மதத்தையும், பாரதத்தின் பண்பாட்டுக் கூறுகளையும், அகண்ட பாரத தேசத்தையும் பாதுகாப்பதற்கான இயக்கம் மட்டுமே என்று நினைப்பவர்கள், அந்த இயக்கத்தின் அடிப்படையைப் புரிந்துகொள்ள வேண்டும். மிகச் சிறந்த ஒழுக்கமான நற்பண்புகளுடன்கூடிய தனிமனிதர்களை உருவாக்குவதுதான் (மேன் மேக்கிங்) ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலையாய கடமையாகக் கருதப்படுகிறது. அதற்காகத்தான் ஆர்.எஸ்.எஸ்.ஸின் அத்தனை துணைஅமைப்புகளும் , பல்வேறு துறைகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.

ஆர்.எஸ்.எஸ். இயக்கம் வளர்ந்ததற்கு காரணம், அந்த இயக்கம் தன்னலமில்லாமல் செய்யும் சேவைகள்தான். தேசத்தின் எந்தவொரு பகுதியில் இயற்கைப் பேரழிவு ஏற்பட்டாலும், கலவரத்தால் பாதிக்கப்பட்டாலும் உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களின் சேவைக்காக ஓடிச் செல்லும் முதல் அமைப்பு ஆர்.எஸ்.எஸ்.தான்

கடந்த 1947-ம் ஆண்டு நடைபெற்ற பிரிவினையைத் தொடர்ந்து நடந்த கலவரங்களில் மேற்கு பஞ்சாபில் இருந்தும் (இப்போதைய பாகிஸ்தான்) கிழக்கு வங்கத்தில் இருந்து (இப்போதைய வங்கதேசம்) அகதிகளாக அடித்து விரட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாகக் களமிறங்கிய முதல் இயக்கம் ஆர்.எஸ்.எஸ். அதன் சேவைகளைப் பார்த்துத்தான் காங்கிரஸ் கட்சியும் முகாம்களை அமைத்து அகதிகளுக்கு உதவ முன்வந்தது என்பது வரலாறு.

அதேபோல், 1971 - ஒடிஸா புயல், 1977 - ஆந்திரப் புயல், 1984 - போபால் விஷவாயுக் கசிவு, 1984 - டில்லியில் சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை, 2001 - குஜராத் பூகம்பம், 2004 - சுனாமி, 2020 - கரோனா பரவல் என்று இந்தியாவில் ஏற்பட்ட எந்தவொரு பேரழிவு நிகழ்வானாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும், நிவாரணம் வழங்கவும், பாதுகாப்புத் தரவும் முன்நின்று செயல்படும் ஒரே சமுதாய அமைப்பாக இன்றுவரை இருந்து வருவது ஆர்.எஸ்.எஸ். மட்டும்தான் என்பதை யாரும் மறுத்து விடமுடியாது.

ஆர்.எஸ்.எஸ். இயக்கம் மகாத்மா காந்திக்கு எதிரானது என்று பலர் தவறாகக் கருதுகிறார்கள். காந்தியடிகளுக்கும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கும் இடையே நட்பும், மரியாதையும் நிலவியது. 1934-இல் மகாத்மா காந்தி மகாராஷ்டிர மாநிலம், வர்தாவில் ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார். 1947 செப். 16- ஆம் தேதி தில்லியில் உள்ள துப்புரவுப் பணியாளர்கள் காலனியில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் மத்தியில் மகாத்மா காந்தி உரையாற்றியுள்ளார். இதுகுறித்து அவரது ‘ஹரிஜன்’ செப். 28- ஆம் தேதி இதழில் காந்தியே குறிப்பிட்டிருக்கிறார்.

அதில், ஆர்.எஸ்.எஸ்.ஸின் வளர்ச்சி பற்றி கூறும்போது, “குறிக்கோளில் தூய்மை, அடிப்படை நேர்மை , தன்னலமற்ற சேவை ஆகியவற்றின் அடிப்படையிலான எந்தவொரு அமைப்பும் வலுவான அமைப்பாக உயரும் என்பதற்கு ஆர்.எஸ்.எஸ். சிறந்த எடுத்துத்காட்டு” என்பது மகாத்மா காந்தி பதிவு செய்துள்ளார்.

1925-இல் ஆர்.எஸ்.எஸ். தொடங்கியதுமுதல் அதன் ஷாகாக்கள் தினசரி கூடுவது தடைபட்டதோ, நிறுத்தப்பட்டதோ இல்லை. காந்திஜி படுகொலை செய்யப்பட்ட செய்தி வந்தபோது கோல்வல்கர் சென்னையில் ஆர்.எஸ்.எஸ். கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டிருந்தார். அவருக்கு வழங்கப்பட்ட தேநீரைக் குடிக்க முற்பட்டபோது அவரிடம் காந்திஜி படுகொலை செய்யப்பட்ட தகவல் தெரிவிக்கப்பட்டது.
தேநீர்க் கோப்பையை அப்படியே வைத்துவிட்டு, கண்களை மூடிச் சிலையாய் அமர்ந்தார் கோல்வல்கர். கண்களைத் திறந்ததும் அவரது உதடு உதிர்த்த வார்த்தை - “தேசத்துக்கு என்னவொரு துரதிருஷ்டம்” என்பதுதான்.

உடனடியாகப் பிரதமர் ஜவஹர்லால் நேரு, உள்துறை அமைச்சர் வல்லபபாய் படேல், காந்திஜியின் கடைசி மகன் தேவதாஸ் காந்தி மூவருக்கும் தனது இரங்கலை தந்தி மூலம் தெரிவித்தார். தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு நாகபுரியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்துக்கு விரைந்தார் கோல்வல்கர்.

காந்திஜிக்கு அஞ்சலி செலுத்தும் விதத்தில் அடுத்த 13 நாள்களுக்கு ஆர்.எஸ்.எஸ். ஷாகாக்கள் நடத்தப்படவில்லை. அந்த இயக்கத்தின் வரலாற்றிலேயே வேறு யாருக்காகவும் ஷாகாவின் செயல்பாடு நிறுத்தப்பட்டதில்லை. அப்படி இருந்தும் 1948 ஜனவரி 4 -ஆம் தேதி முதல் 1949 ஜூலை 11-ஆம் தேதிவரை ஆர்.எஸ்.எஸ். இயக்கம் பண்டித ஜவஹர்லால் நேரு அரசால் தடை செய்யப்பட்டது. பிறகு அந்தத் தடையை அரசே நீக்க வேண்டியதாயிற்று.

1966-இல் பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான அரசு, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஜே.எல்.கபூர் தலைமையில், மகாத்மா காந்தியின் படுகொலை தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டது. அந்த ஆணையம் 101 சாட்சிகளை விசாரித்தது. 407 ஆவணங்களை சமர்ப்பித்தது. 1969-இல் வெளியிடப்பட்ட நீதிபதி ஜே.எல்.கபூர் ஆணைய அறிக்கை , “மகாத்மா காந்தியையோ, ஏனைய மூத்த காங்கிரஸ் தலைவர்களையோ குறிவைத்து தீவிரவாதச் செயலில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் ஈடுபடுவது தொடர்பாக எந்தவொரு ஆதாரமோ, சாட்சியங்களோ இல்லை” என்று மிகத் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தது.

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அடிப்படைக் கொள்கை, சாதிபேதமற்ற இந்து சமுதாயம் என்பது ஆரம்பம் முதலே இருந்து வருகிறது. ‘‘இந்து’ என்பது மதமல்ல; அது வாழ்க்கைமுறை; பண்பாட்டுக் கூறு. பாரதத்தில் வாழும் அனைவருமே ‘இந்து’ கலாச்சாரத்துடன் இணைந்திருக்கிறார்கள். இந்து முன்னோர்களைக் கொண்டவர்கள் இந்து தேசத்தை, அதாவது பாரத தேசத்தைச் சேர்ந்தவர்கள்” என்ற, சர்சங்கசாலக் மோகன் பாகவத்ஜியின் கூற்றுதான் ஆர்.எஸ்.எஸ்.ஸின் அடிப்படைக் கொள்கை.

“தீண்டாமை என்பது இந்திய மண்ணில் இருந்து துடைத்தெறியப்பட வேண்டும்” என்று 1973-இல் குரல் கொடுத்தவர் அப்போதைய சர்சங்சாலக்காக இருந்த ‘பாலாசாகேப்’ என்று அழைக்கப்பட்ட மதுகர் தத்தாத்ரேய தேவரஸ்.

காந்தியடிகள் மட்டுமல்ல, பாபா சாகேப் அம்பேத்கராலும் ஆர்.எஸ்.எஸ். பாராட்டப்பட்டதற்குக் காரணம், தீண்டாமை குறித்த அந்த இயக்கத்தின் நேர்மையான அணுகுமுறை என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். டாக்டர் அம்பேத்கருக்கு ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துடன் தொடர்பிருக்கவில்லை என்கிற பரப்புரை சிலரால் மேற்கொள்ளப்படுகிறது.

ஜனவரி 21, 1940 அன்று டாக்டர் அம்பேத்கர், சதாரா மாவட்டத்திலுள்ள கராடில் உள்ள ஷாகாவில் கலந்து கொண்டது குறித்த செய்தி, புனேயில் இருந்து வெளிவரும் ‘கேசரி’ நாளிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. காங்கிரஸை எதிர்த்து டாக்டர் அம்பேத்கர் தேர்தலில் நின்றபோது, அவருக்கு ஆதரவாகப் பணியாற்றியது ஆர்.எஸ்.எஸ். என்பதும் உலகறிந்த உண்மை.

‘அனைவரும் அர்ச்சகராகலாம்’ என்கிற கருத்தை முன்மொழிந்தது ஆர்.எஸ்.எஸ். இயக்கம்தான். காந்திஜியும் சரி, டாக்டர் அம்பேத்கரும் சரி, ‘தீண்டாமை’ என்கிற ஒரு பிரச்சினையில் ஆர்.எஸ்.எஸ்.ஸுடன் ஒரே நேர்கோட்டில் இணைகிறார்கள்.

இன்று தனது நூற்றாண்டை ஆர்.எஸ்.எஸ். இயக்கம் கொண்டாடுகிறது என்றால், அதற்குக் காரணம் அதன் தன்னலமற்ற தொண்டும், இந்தியாவில் வாழும் அனைவரும் பாரதியர் என்கிற கண்ணோட்டமும், தேசப்பற்றுடன் கூடிய அர்ப்பணிப்பும்தான்.

ஜவஹர்லால் நேரு அமைச்சரவையில் தொழில் துறை அமைச்சராக இருந்தவர் சியாமா பிரசாத் முகர்ஜி. அந்த சமயத்தில், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து என்ற நேருவின் செயல்பாட்டில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அமைச்சரவையில் இருந்தும் காங்கிரசில் இருந்து அவர் விலகினார். இந்த காலகட்டத்தில்தான் டாக்டர் அம்பேத்கர் மற்றும் இந்தியாவின் முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்த தமிழ்நாட்டைச் சேர்ந்த சண்முகம் செட்டியாரும் அமைச்சரவையில் இருந்தும், காங்கிரசில் இருந்து விலகினர்.

பின்னர் ‘ஜனசங்கம்’ என்ற கட்சியை சியாமா பிரசாத் முகர்ஜி தொடங்கினார். அவர் நல்ல கல்வியாளர், கல்கத்தா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தவர். இந்நிலையில் அவர் திடீரென மரணமடைந்து விட்டார். அவரது இறப்பில் மர்மம் இருப்பதாகச் சொல்லப்பட்டது. அவருக்குப் பின் தீனதயாள் உபாத்தியாயா ஜனசங்கத்தின் தலைவராக பொறுப்பேற்றார். அவரும் கல்வி மேதையாகத் திகழ்ந்தவர். இந்நிலையில், ரயில் நிலையத்தில் மர்மமான முறையில் அவர் மரணமடைந்தார். அவரது மரணத்திலும் பல்வேறு சந்தேகங்கள் அன்றைய காலத்தில் எழுப்பப்பட்டன. இந்த ஜனசங்கம்தான் தற்போது பாரதிய ஜனதா கட்சியாக உருவெடுத்துள்ளது.

திராவிட இயக்க வளர்ச்சியில் கலைத் துறையின் பங்களிப்பு

நூற்றாண்டைக் கண்ட மற்றொரு பேரியக்கம் திராவிட இயக்கம். திராவிட இயக்க வளர்ச்சியில் எண்ணற்ற தலைவர்களின் பங்கு அளப்பரியது. அவர்களில் முக்கியமானவர்களாக அண்ணா, ஈவிகே சம்பத், நாவலர் நெடுஞ்செழியன், மதியழகன், கலைஞர் என ஏராளமானோர் இருந்தனர்.

கலைத்துறையின் மூலம் திராவிட இயக்கத்தை வளர்த்தெடுத்ததில் அண்ணா, கலைஞர் இருவரும் முக்கியப் பங்காற்றினார்கள். அதிலும் கலைஞரின் பங்கு கணிசமானது. அவரது கைவண்ணத்தில் உருவான திரைப்படங்களில், திரைக்கதை வசனங்களில் திராவிட இயக்க சித்தாந்தங்களை எளிய மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் கையாண்டார். அதில் ஒரு முக்கியமான படம்தான் ‘பராசக்தி’. இப்படத்தின் மூலமாகத்தான் சிவாஜி கணேசன் எனும் மகத்தான கலைஞன் நமக்குக் கிடைத்தார்.

கலைஞரின் கதை வசனத்தில் உருவான ‘பராசக்தி’ திரைப்படம், சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கத்துக்கு எதிரில் இருந்த பாரகன் தியேட்டரில்தான் 2 நாட்கள்... ஏறக்குறைய 30 மணி நேரம் சென்சார் செய்யப்பட்டது. அந்த சென்சார் துறையின் அதிகாரியாக இருந்தவர் ‘மணிக்கொடி’ பத்திரிக்கை நடத்திய சீனிவாசன். அந்த சமயத்தில் அவர் காங்கிரஸ் கட்சியின் சார்பாக சங்கரன்கோவில் தொகுதியில் போட்டியிட வாய்ப்புக் கிடைத்தது.

அதற்கு அவர் “நான் தஞ்சை பகுதியில் இருப்பதால் சங்கரன்கோவில் சென்று போட்டியிட முடியாது” என்று மறுத்து விட்டார். அதைத்தொடர்ந்து சென்சார் போர்டு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அவர் அதிகாரியாக இருந்ததனால் ‘பராசக்தி’ திரைப்படத்தில் சொல்லப்பட்ட பல்வேறு கருத்துகள் நீக்கப்பட்டன. கடும் கெடுபிடிகளுக்கு இடையே தணிக்கை செய்துமுடிக்கப்பட்டு, அதற்குப் பிறகுதான் அத்திரைப்படம் வந்தது.

1952-ஆம் ஆண்டு வெளிவந்த ‘பராசக்தி’ படத்துக்கு கலைஞர் வசனம் எழுத,கிருஷ்ணன்-பஞ்சு ஆகியோர் இயக்கினர். சிவாஜி கணேசன், பண்டரிபாய், எஸ்.எஸ்.ராஜேந்திரன், எஸ்.வி.சகஸ்ரநாமம், ஸ்ரீரஞ்சனி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். எஸ்.எஸ்.ராஜேந்திரன், சிவாஜி கணேசன் ஆகியோரை திரையுலகுக்கு அறிமுகப்படுத்திய படம் இது. இப்படத்தை ஏவி. மெய்யப்ப செட்டியார் மற்றும் பி.ஏ.பெருமாள் ஆகியோர் தயாரித்திருந்தனர். பாவலர் பாலசுந்தரத்தின் நாடகத்தை அடிப்படையாகக் கொண்டது இதன் கதை. இரண்டாம் உலகப் போரின்போது ஒரு தமிழ் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு நேர்ந்த துயரங்களை விவரிக்கும் வகையில் இதன் கதை அமைக்கப்பட்டிருந்தது.

‘பராசக்தி’ திரைப்படம் திராவிட இயக்கத்தின் பிரச்சார படம் என்று அண்ணா பாராட்டினார். இப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தது கலைஞரின் அனல் தெறிக்கும் வசனங்கள் என்றால் மிகையாகாது. பகுத்தறிவு, சீர்திருத்தக் கருத்துகள் படம் முழுவதும் வியாபித்திருந்தன. அதில் இடம் பெற்ற கோர்ட் சீன் படத்தின் ஹைலைட்டாக இருந்தது. "கோயில் கூடாது என்பதல்ல; கோயில் கொடியவர்களின் கூடாரம் ஆகிவிடக் கூடாது" என்ற வசனத்தை அந்தக் காலத்தில் உச்சரிக்காதவர்களே இல்லை எனலாம்... இப்படம் வெளியாகி இன்றைக்கு 73 ஆண்டுகள் ஆகிவிட்டன.

தான் கால்பதித்த துறைகளில் எல்லாம் வெற்றிகளைக் கண்ட கலைஞரின் ‘பராசக்தி’ படம், அவரது வாழ்க்கையை ஜொலிக்க வைத்ததின் தொடக்கமாக அமைந்தது.

(தொடர்வோம்...)

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in