

திருச்சி மாவட்டம் குமாரவயலூருக்கு அருகே டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தால் கண்டறியப்பட்டு, 1984 பிப்ரவரி 19ஆம் நாள் சீரமைப்பிற்கு உள்ளான முள்ளிக்கரும்பூர் சிவன்கோயில் முன்னுள்ள பெருவெளியில்தான் தமிழ்நாடு அரசுத் தொல்லியல்துறை பொறுப்பு இயக்குநராக இருந்த நடன. காசிநாதனை முதன்முதலாகச் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது.
முதல் சந்திப்பே அவர் மிக எளிமையான மனிதர், அனைவரையும் தழுவிச்செல்லும் பண்பினர் என்பதை உணர்த்தியது. நடன. காசிநாதனுடன் தொல்லியல்துறைக் கருத்தரங்குகளிலும், அரசுசார் அமைப்புகளிலும் பல ஆண்டுகள் இணைந்து பங்கேற்கக் கிடைத்த வாய்ப்புகள் அவருடனான நட்பை வளர்த்தன. பழகுதற்கு இனியவராகவும் அணுகுவதற்கு எளியவராகவும் விளங்கிய அப்பெருந்தகையின் தொடர்பால் எங்கள் மைய ஆய்வர்கள் பெரும் பயன் பெற்றனர். அவரது தொல்லியல் பட்டறிவும் ஆய்வுப் புலமையும் நிகரற்றன.