

வட இந்தியாவில் பெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகள், முற்போக்குக் கொள்கைகள் எந்த அளவுக்குத் தாக்கம் செலுத்துகின்றன என்பது தொடர்பான விவாதங்கள் தமிழ்ச்சூழலில் அவ்வப்போது எழுகின்றன. வட இந்தியாவின் பல நகரங்களுக்குப் பெரியார் நேரடியாகப் பயணம் மேற்கொண்டு பல கூட்டங்களில் பேசியிருக்கிறார். வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்த தலித் அமைப்பினர், தலைவர்கள் பெரியாரைச் சமூக விடுதலைப் போராளியாகவே கருதியது வரலாறு.
அம்பேத்கரின் மகன் யஷ்வந்த் அம்பேத்கர், ராவ் பகதூர் ந.சிவராஜ் உள்ளிட்டோர் தொடங்கிய இந்தியக் குடியரசுக் கட்சி, பல முறை பெரியாரை அழைத்து மும்பையில் கூட்டம் நடத்தியிருக்கிறது. “பெரியார் தமிழ்நாட்டுக்கு மட்டும் தலைவர் அல்ல. இந்தியாவில் உள்ள தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்குமான தலைவர்” என்று வட இந்திய தலித் தலைவர்கள் போற்றியிருக்கின்றனர்.