

கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில், இந்தியப் பள்ளிக்கூடங்களில் படித்துவரும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இன்றைய தேதியில் இந்தியப் பள்ளிக்கூடங்களில் கல்வி பெற்றுவரும் மாணாக்கர்களில் 48% மாணவிகள். அதிலும் உயர்கல்வியைப் பொறுத்தமட்டில் மாணவிகளின் மொத்தச் சேர்க்கை விகிதம் மாணவர்களைக் காட்டிலும் சற்றே கூடியிருக்கிறது.
இருப்பினும், பெண் கல்வி என்னும் கோணத்தில் அணுகும்போது இன்றளவும் பாலின இடைவெளி மறைமுகமாக இந்தியக் குடும்பங்களால் கட்டிக்காக்கப்படுகிறது. மகள்களின் கல்விக்குச் செலவழிப்பதைக் காட்டிலும் மகன்களுக்கே அதிகம் நிதி ஒதுக்கும் வழக்கம் நம் சமூகத்தில் வாழையடி வாழையாகப் பின்பற்றப்பட்டுவருவதைத் தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு சுட்டிக்காட்டுகிறது.