

சமீபத்தில் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறை பள்ளிகளில் சாதி மோதலைத் தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டிருக்கிறது. அதில் வருகைப் பதிவேட்டில் சாதிப் பெயர் இருக்கக் கூடாது; ஆசிரியர்கள் வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ சாதி அடையாளத்தைச் சொல்லி மாணவர்களை அழைக்கக் கூடாது; கைகளில் சாதிய அடையாளத்தை வெளிப்படுத்தும் கயிறுகளை மாணவர்கள் கட்டக் கூடாது என்றெல்லாம் சொல்லப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரலில் கல்வி நிறுவனங்களின் பெயர்களில் இருந்த சாதிப் பெயர்களை நீக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. சமூக ஆர்வலர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றியிருக்கும் இந்த நடவடிக்கையும் உத்தரவும் பாராட்டுக்கு உரியவை. அதேநேரம், ‘மாணவர்களிடம் சாதிய மனோபாவம் மேலோங்குவதற்கு இவை போன்ற கண்ணுக்குப் புலப்படும் அடையாளங்கள் மட்டும்தான் காரணமா?’ என்கிற கேள்வி முக்கியமானது. ஏனெனில், சாதி வெறுமனே அடையாளங்களில் மட்டுமில்லை.