பாகிஸ்தானை பலவீனப்படுத்த இந்தியாவுக்கு ஒரு துருப்புச்சீட்டு இருக்கிறது! - முனைவர் ராமு மணிவண்ணன் நேர்காணல்
பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்குப் பதில் நடவடிக்கையாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியப் படைகள் தாக்குதல் நடத்தின. மூன்று நாள்கள் நீடித்த இந்தத் தாக்குதல், மே 10ஆம் தேதி முடிவுக்கு வந்தது. தாக்குதலை நிறுத்திக்கொண்டதாக இரு தரப்பும் அறிவித்துவிட்டன. சர்வதேச அளவில் கவனம் ஈர்த்திருக்கும் இந்த நிகழ்வு தொடர்பாகச் சென்னைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் - பொது நிர்வாகத் துறை முன்னாள் தலைவர் ராமு மணிவண்ணனோடு நடத்திய நேர்காணலில் இருந்து...
பாகிஸ்தானுடனான இந்தியாவின் மற்ற போர்களில் இருந்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ வேறுபட்டது எனச் சொல்லப்படுகிறது. இதை விளக்க முடியுமா? - இதற்கு முன்பும், இந்தியாவில் பொது இடங்களில் குண்டுவீச்சுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. பஹல்காமில் மக்களைத் தனிமைப்படுத்தித் தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது கவனிக்கப்பட வேண்டும். காஷ்மீர் பகுதிக்குக் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 1 கோடியே 80 லட்சம் சுற்றுலாப் பயணிகள் சென்றிருக்கிறார்கள். இந்நிலையில், உளவியல்ரீதியாக மக்களிடத்தில் ஒரு பீதியை உண்டாக்க இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவே தெரிகிறது.
தாக்குதல் நடப்பதற்குச் சில நாள்களுக்கு முன்பு, அப்போது பாகிஸ்தானின் ராணுவத் தளபதியாக இருந்த அசீம் முனிர் இன, மத அடையாளங்களைச் சார்ந்து, வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசி இருந்தார். இந்துக்களும், இஸ்லாமியர் களும் இரண்டு இனங்களைச் சேர்ந்தவர்கள் என வேறுபடுத்தி ‘இரு நாடுகள்’ என்கிற கோட்பாட்டை முன்வைத்திருந்தார். பாகிஸ் தானின் ஆதரவோடு இந்தத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன என்பதற்குப் போதுமான சாட்சியங்கள் இருப்பதால், இந்தியா எதிர்வினை ஆற்றியுள்ளது.
போரை முடிவுக்குக் கொண்டுவந்ததில் அமெரிக்காவின் பங்கு எப்படிப் பார்க்கப்படுகிறது? - வேறு எந்த நாட்டின் தலையீடும் இல்லாமல் போர் நிறுத்தம் கொண்டுவரப்பட்டது எனவும் இது இடைக்காலப் போர் நிறுத்தம்தான் எனவும் இந்தியா அறிவித்துள்ளது. உண்மையில் அமெரிக்காவின் தலையீட்டால் அல்லது இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பாதுகாப்பு அதிகரிகள் மூலமாகப் போர் நிறுத்தம் கொண்டு வரப்பட்டதா என்பதில் குழப்பம் நீடிப்பதால் இதற்கான விளக்கம் தேவைப்படுகிறது என நினைக்கிறேன். அண்மையில் பாகிஸ்தானுடன் இந்தியா போரிட்டுக் கொண்டிருந்தபோது, சர்வதேசச் செலாவணி நிதியம் (ஐஎம்எஃப்) ஏறக்குறைய 4 பில்லியன் அமெரிக்க டாலர்களைப் பாகிஸ்தானுக்கு நிதிக்கடனாக வழங்கியுள்ளது.
இப்படி, இந்தியாவுக்கு ஆதரவாகப் பேசிக்கொண்டு, இன்னொரு பக்கம் பாகிஸ்தானுக்குத் தேவையான ஆயுதங்களையும் பண பலத்தையும் வேறொரு வகையில் ஏற்பாடு செய்வது ஏற்றுக்கொள்ளப்படக் கூடாதது. பாகிஸ்தான் உடனான போரை நிறுத்துவதும் தொடர்ந்து நடத்துவதும் இந்தியாவின் கணிப்பில்தான் இருக்கிறது என நினைக்கிறேன்.
பலூசிஸ்தான் ஆதரவு இயக்கத்தின் செயல்பாடுகளால் இந்தியாவுக்குச் சாதகமா... பாதகமா? - பலூசிஸ்தான் விடுதலை இயக்கமானது ஒரு காலக்கட்டத்தில் பலவீனமாக இருந்து மீண்டும் எழுச்சி பெற்றுள்ளது. அதிகக் கனிம வளங்கள் கொண்ட பலூசிஸ்தான், பாகிஸ்தானின் வளத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால், அப்பகுதியின் வட்டார வளர்ச்சி மிகவும் பிற்படுத்தப்பட்ட நிலையில்தான் இப்போதும் இருக்கிறது. எனவே, பாகிஸ்தான் அரசு தங்களை ஏமாற்றுவதாக அப்பகுதியினர் நம்புகின்றனர். அண்மைக் காலங்களில் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக மிகப் பெரும் எதிர்ப்பு அலை அப்பகுதியில் உருவாகியுள்ளது. பலூசிஸ்தான் தனி நாடு கோரிக்கைகளும் வலுத்துள்ளன.
இந்தச் சூழலில், இந்தியா பாகிஸ்தானுடன் போரிட்டபோது பலூசிஸ்தான் அமைப்பு உள்நாட்டுப் போரை அறிவித்தது. இந்தியா தங்களை அங்கீகரிக்க வேண்டும் எனக் கோரிக்கையும் விடுத்தது. ஒருவேளை, பலூசிஸ்தானை இந்தியா அங்கீகரித்தால், மிகப் பெரிய புவிசார் மாற்றமாகவும், பாகிஸ்தானையே திருப்பிப்போடக்கூடிய நிகழ்வாகவும் அது அமையும். 1971இல் வங்கதேச உருவாக்கத்தில் இந்தியா பெரும் பங்காற்றியது.
தற்போதைக்கு அது போன்ற ராணுவத் தலையீடு இல்லை என்றாலும் உலக அரசியல், தெற்கு ஆசிய பிராந்திய
அரசியல், பாகிஸ்தான் அரசின் நிலைப்பாடுகளைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, புதியதொரு அரசியல் மாற்றத்தையும், நிலப்பரப்பு சார்ந்த அரசியல் மாற்றத்தையும் இந்தியா உருவாக்க முடியும் அல்லது உருவாக்கிவருகிறது எனலாம். இது பாகிஸ்தானைப் பலவீனப்படுத்த இந்தியாவுக்கு ஒரு துருப்புச்சீட்டாகவும் அமையலாம்.
எல்லைப் பகுதிகளில் தொடரும் தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு உள்ள சாத்தியம் என்ன? - பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்துக்குப் பிறகு ரத்த ஆற்றில்தான் இரு நாடுகளும் உருவாகின. ஒரு நிலையான அரசாங்கத்தை உருவாக்க முடியாததாலும், மத அடிப்படையில் மட்டுமே ஒரு தேசத்தைக் கட்டமைக்க முடியும் என்கிற சித்தாந்தத்தாலும் பாகிஸ்தான் பல சவால்களைச்
சந்திக்கிறது. பாகிஸ்தானால் இந்தியாவுக்குப் பல பாதகங்கள் ஏற்படுகின்றன. பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்புகளின் வன்முறை, தீவிரவாதத் தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவருவது இந்தியாவுக்குச் சவாலான காரியமாகவே இருக்கிறது.
எனவே, தீவிரவாதத்தை ஒழிக்கும் பயணத்தில் முழுமையாக வெற்றி கண்டுவிட்டோம் என்கிற நிலை இந்தியாவுக்கு வரப்போவதில்லை. இலங்கை, நேபாளம், வங்கதேசம், மாலத்தீவு நாடுகளோடும் இந்தியாவுக்குப் பிரச்சினைகள் இருக்கின்றன. ஆனால், பிரச்சினையைப் பொறுத்து ஒவ்வொரு நாட்டுக்கும் எதிராகக் கையாளும் முறைகள் மாறுபடும். புவியியல் ரீதியாக இந்தியாவின் மிக அருகில் இருக்கும் பாகிஸ்தான் ஏற்படுத்தும் சவால்கள் நமக்கு அதிகம்.
அணு ஆயுத மோதல் குறித்து இரு நாடுகளின் நிலைப்பாடு என்ன? - இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் அணு ஆயுதங்களை நோக்கிச் சென்றதற்கு வெவ்வேறு காரணங்கள் இருக்கின்றன. சீனா அணு ஆயுத நாடாக இருக்கும்போது, இந்தியா அணு ஆயுதங்கள் இல்லாமல் இருக்க முடியாது. அதே சிந்தனையில்தான் இந்தியா அணு ஆயுத நாடானதற்குப் பின்பு பாகிஸ்தானும் அணு ஆயுதங்களை வாங்கியது. ஆனால், எல்லாப் பிரச்சினைகளுக்குமே அணு ஆயுதத்தைப் பயன்படுத்த வேண்டும் என்கிற எண்ணம் ஏற்புடையதல்ல. 1971ஆம் ஆண்டுக்குப் பிறகு பாரம்பரிய போர் முறையில் இந்தியாவை வெல்ல முடியாது எனத் தீர்மானித்தற்குப் பிறகு, தீவிரவாதத்தைப் பயன்படுத்தி பாகிஸ்தான் தாக்குதல் நடத்திவருகிறது.
இந்தியாவில் ‘ஆயிரம் வெட்டுக்களை உருவாக்குவோம்’ என்பதே பாகிஸ்தானின் கொள்கைத் திட்டம். தேவைப்பட்டால், அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவோம், அதுவும் முதலாவதாகப் பயன்படுத்துவோம் என பாகிஸ்தான் சொல்லிவருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை அணு ஆயுதம் இல்லாத நாடுகளுக்கு எதிராகப் பயன்படுத்த மாட்டோம் என்பதிலும், அணு ஆயுத பலம் மிக்க நாடுகளுக்கு எதிராக முதலாவதாகப் பயன்படுத்த மாட்டோம் என்பதிலும் உறுதியாக இருக்கிறது.
தீவிரவாதத்தை ஒழிக்கப் போர் மட்டுமே தீர்வாகுமா? - இந்தியா - பாகிஸ்தான் பிரிந்த காலக்கட்டத்தில் இருந்து கடந்த 75 ஆண்டு களுக்கும் மேலாக காஷ்மீர் பகுதியில் அமைதி கிடையாது. இந்த விவகாரத்தில் இந்தியா என்ன நிலைப்பாட்டை எடுக்கிறது என்பதைவிட, எதிரியின் நிலைப்பாடு எப்படியானது என்பதைப் பொறுத்துத்தான் முடிவுகளை எடுக்க முடியும். வரலாற்றில் அமைதியைத் தேடியும் போர்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. இது முரணான ஒரு வாதமாக இருந்தாலும் அமைதியை வேண்டியும் போர் நடத்த வேண்டித்தான் இருக்கிறது. எனினும், தொடர் போரின் மூலமாக மயான அமைதிதான் கிடைக்குமே தவிர, நிரந்தரமான அமைதி கிடைக்காது!
போர்ச் சூழலின்போது இணையம் வழியாக ஏற்படக்கூடிய சவால்கள் குறித்து... ‘போரில் முதலில் பாதிக்கப்படுவது உண்மைதான்’ என்கிற பிரபல சொற் றொடரை நினைவுகூர வேண்டும். போர்ச் சூழலின்போது பரப்பப்படும் பொய்ப் பிரச்சாரம், வதந்திகள் ஆகியவற்றைக் கவனமாகக் கையாள வேண்டும். ஒரு செய்தியை ஒன்றுக்கு இரண்டு முறை பரிசீலனை செய்த பின்னரே பகிர வேண்டும். இது நாட்டையும், நாட்டு மக்களையும் சார்ந்த விஷயம் என்பதால், ஒவ்வொரு தனிமனிதருக்கும் அதிகக் கவனமும் பொறுப்பும் அவசியம். இதை அனைவரும் உணர வேண்டும்!
- தொடர்புக்கு: karthiga.rajendran@hindutamil.co.in
