

மொழி அருங்காட்சியகத்தின் பளபளக்கும் கண்ணாடி முகப்பு சென்னையின் காலை சூரியனைப் பிரதிபலித்துக்கொண்டிருந்தது. கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் எல்லாம் நிரம்பிய ஒரு பேரரங்குக்குள் நுழைந்தோம். “காதால் கேட்கும் மொழி, இங்கே கண்ணால் காணும் காட்சியாக இருக்கிறது” என்று சொல்லிக்கொண்டே செய்மெய் என்னைக் கட்டிடத்தின் மையப்பகுதிக்கு அழைத்துச் சென்றது. “உங்கள் செயற்கை நுண்ணறிவு வரலாற்றுப் புத்தகத்தின் முக்கியப் பகுதிக்கு நாம் இங்கேதான் வர வேண்டியிருக்கிறது” என்றது செய்மெய்.
மக்கள் கூட்டத்தைத் தாண்டி உள்ளே நெருங்க நெருங்க... மந்தமான ஒளி பரவியிருந்த ஒரு மைய மண்டபத்துக்குச் சென்றோம். அங்கே வெளிறிய, ஒளி ஊடுருவும் தன்மையுள்ள ஒளி பிம்ப மனிதத் தலை ஒன்று காற்றில் மிதந்துகொண்டிருந்தது, 30 அடி உயரத்தில், ஏதோ தியானம் செய்துகொண்டிருப்பது போன்ற அமைதி தவழும் முகத்தோற்றத்தில் அந்தத் தலை இருந்தது. அதன் முகம், அது ஆணுமல்ல, பெண்ணுமல்ல என்பதைக் காட்டியது.