

தமிழின் புகழ்பெற்ற நாவல் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’. ‘கல்கி’ இதழில் தொடராக வந்த இந்த நாவலை 1950இல் தொடங்கி, 1954இல் நிறைவுசெய்தார் கல்கி. இந்த நாவல், நாடக வடிவமாகச் செய்த பயணத்தை ஆராய்கிறது இக்கட்டுரை.
இந்த நாவலைத் திரை வடிவில் கொண்டுவர வேண்டும் என்ற முயற்சி 1958இல் தொடங்கியது. எம்.ஜி.ஆர். கமல் ஹாசன் ஆகியோர் இந்த முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், 64 ஆண்டுகளுக்குப் பிறகு மணிரத்தினம் இந்த நாவலை, இரண்டு பாகங்களாகத் திரைப்படமாக உருவாக்கி வெற்றிபெற்றார். இந்த நாவல், 1999-2024 வரை சென்னை நாடக மேடைகளில் ‘பொன்னியின் செல்வன்’ நாடகமாக நிகழ்த்தப்பட்டுள்ளது.
1999இல் சென்னையில் மேஜிக் லாண்டர்ன் கலைக் குழுவினர் இந்த நாவலை வெற்றிகரமாக நாடகமாக நிகழ்த்திக் காட்டினார்கள். அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5, 6, 7, 8 தேதிகளில் ‘பொன்னியின் செல்வன்’ நாடகத்தைச் சென்னை ஒய்.எம்.சி.ஏ. திறந்தவெளி அரங்கில் அரங்கேற்றினோம். அது எங்களுக்கு எளிதாக அமைந்துவிடவில்லை. தமிழ் நாடக உலகின் முன்னோடிகள் திரையுலக நண்பர்கள் பலர் எங்களுக்கு உறுதுணையாக இருந்தார்கள்.
இந்த நாடகத்தின் இயக்குநர் பிரவீன் கண்ணனூர், பிரான்ஸைச் சேர்ந்த அரியான் முஷ்கினிடம் பயின்றவர். பல ஆங்கில நாடகங்களின் தமிழ் வடிவை இயக்கியவர். ஒரே அரங்கத்திலேயே காட்சி மாற்றம், மேடையின் பயன்பாடு, அணையாத விளக்கு, நடிகர்களின் நடிப்பு என நாடகம் முழுமையும் ஒரு புதுமையை, பிரமிப்பை உருவாக்கி இருந்தார் இயக்குநர் பிரவீன்.
அதே ஆண்டில் நான்கு நாட்கள் நடைபெற்ற நாடகம் அதன் பிறகு ஒரு முறைகூட மேடை ஏறவில்லை. பொருளாதாரச் சூழல் அதற்குக் காரணம். வேறு எந்த நாடகக் குழுவும் இந்த நாடகத்தை அரங்கேற்றத் துணியவில்லை. 2014இல் இந்த நாடகத்தை மீண்டும் மேடையில் அரங்கேற்ற சென்னையைச் சேர்ந்த ஒரு விளம்பர நிறுவனம் முன்வந்தது.
2012இல் சென்னை மியூசிக் அகாடமி அரங்கில் கலை நிகழ்ச்சிகள் நடத்திவந்த எஸ்.எஸ்.இன்டர்நேஷனல் லைவ் விளம்பர நிறுவனம், பார்வையாளர்களுக்குப் புதிதாக ஏதாவது ஒரு படைப்பைத் தர வேண்டும் என்ற எண்ணத்தில் ‘பொன்னியின் செல்வனை’ நாடகமாக மேடையேற்ற விரும்பியது. அதற்காக மேஜிக் லாண்டர்ன் குழுவினரை அணுகினார்கள். புதியவர்களைச் சேர்த்துக்கொண்டு மேடை ஏறத் தயாரானார்கள் மேஜிக் லாண்டர்ன் குழுவினர்.
2014இல் ‘பொன்னியின் செல்வ’னுக்கு 60ஆம் ஆண்டு. அதைக் குறிக்கும் வகையில் ஜூலை 8-14 வரை ஒரு திருவிழாவாக நாடகம் நிகழ்த்தப்பட்டது. ஏழு நாளும் அரங்கம் நிறைந்த காட்சிகளாக மாபெரும் வரவேற்பைப் பெற்றது இந்த நாடகம். தொடர்ந்து 2015இல் சென்னை மியூசிக் அகாடமியில் ஜூலை 3 - 12 வரை அரங்கு நிறைந்த காட்சிகளாக இந்த நாடகத்தை இதே நிறுவனம் நடத்தியது. 2015இல் நிகழ்த்தப்பட்ட நாடகம் பற்றிக் குறிப்பிடும்போது ‘குமுதம்’ இதழில் ‘அரசு கேள்வி பதில்’ பகுதியில் பிளாக்கில் டிக்கெட் வாங்கியாவது நாடகத்தைப் பார்த்துவிட வேண்டும் என்று எழுதியிருந்தார்கள்.
2015இல் ‘ஆடுதுறை ஸ்ரீ சங்கரநாராயண சபாவினர் நடிக்கும், சென்னை ராஜ் விஷூவல் ஆர்ட்ஸ் தயாரிப்பில், சென்னை ஸ்ரீதேவி பைன் ஆர்ட்ஸ் வழங்கும் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ 2015 ஏப்ரல் 10, 11, 12 நாரத கான சபாவில்’ என்று அறிவிப்பு வெளியானது. 2007இல் கும்பகோணம் வாணி விலாஸ் சபாவில் நாங்கள் ‘பொன்னியின் செல்வ’னை நடத்தியபோது, அதற்கு அரங்கம் அமைத்தவர் மதுரைக் கண்ணன்.
அவர் 2014இல் சென்னையில் ‘பொன்னியின் செல்வன்’ நடத்த வருமாறு அக்குழுவினரை அழைக்க, 2015இல் 26 காட்சிகளாக இந்நாடகம் சென்னையில் அரங்கேறியது. நாடகத்திற்கு வசனம், கலைச்செல்வம் சாம்பு. நாடக இயக்குநர் ஆடுதுறை பாஸ்கர்.
2015இல் இந்நாடகத்தை அரங்கேற்றிய மற்றொரு குழு டி.வி.கே.கல்ச்சுரல் அகாடமி. டி.வி.கே.ரமேஷ் தயாரிப்பில் மல்லிக்ராஜ் இயக்கத்தில் 2015 ஜூன் 25, 26, 27 தேதிகளில் ராஜா அண்ணாமலை மன்றத்தில் மேடையேறியது ‘பொன்னியின் செல்வன்’. எஸ்.எஸ்.இன்டர்நேஷனல் லைவ் தயாரிப்பே தங்கள் ‘பொன்னியின் செல்வன்’ நாடகத்துக்கான ஊக்கி என்று கூறினார் அஜய் என்டர்டைன்ஸ் குழுவின் நாடக இயக்குநர் மல்லிக்ராஜ். இவரது ‘பொன்னியின் செல்வன்’ 2015 முதல் தமிழ்நாட்டிலும் பிற மாநிலங்களிலும் 265 முறைக்கு மேல் மேடையில் நிகழ்த்தப்பட்ட சாதனை புரிந்தது. இவரது நாடகத்திற்கு வசனம், பூவை தயா.
2017இல் ‘பொன்னியின் செல்வன்’ நாடகத்திற்கும், தமிழ் நாடக உலகிற்கும் பெருமை சேர்க்கும் நிகழ்வு ஒன்று நடைபெற்றது. சிங்கப்பூர்த் தமிழ் மொழி விழாவில் ஒரு பகுதியாக ஏப்ரல் 28, 29, 30 ஆகிய தேதிகளில் எஸ்பிளனேடு அரங்கில் ‘பொன்னியின் செல்வன்’ அரங்கு நிறைந்த காட்சிகளாக நடைபெற்றது. ஒரு காட்சிக்குப் பார்வையாளர்கள் 3000பேர் என மூன்று காட்சிகளில் பார்வையாளர்கள் 9000பேர் நாடகத்தைக் கண்டு களித்தனர். எஸ்.எஸ்.இன்டர்நேஷனல் லைவ், மேஜிக் லாண்டர்ன் இணைந்து 2014 - 2017 வரை இந்நாடகத்தை 37 முறை மேடையேற்றியுள்ளது.
2022, ஜூலை 24இல் ஈவென்ட்ஸ் குமார் ‘பொன்னியின் செல்வன்’ நாடகத்தை அரங்கேற்றினார். சி.வி.சந்திரமோகன் எழுத்தில் ‘வந்தியத்தேவனின் வீரப்பயணம்’ என்கிற தலைப்பில் நாடகத்தை நடித்து இயக்கினார் குட்டி. இந்த நாடகம் ஆறு முறை மேடை ஏறியது. 2022 மே 8இல் ஸ்ரீ அன்னை கிரியேஷன்ஸ் பரத்வாஜ் ‘பொன்னியின் செல்வ’னை மேடை ஏற்றினார். ஸ்ரீ சங்கர்லால் சுந்தர் பாய் ஷுகன் ஜெயின் மகளிர் கல்லூரி மாணவிகள் நடித்திருந்தார்கள். எழுதியவர் பேராசிரியர் ராணி மனோகரன். இது மூன்று முறை மேடையேறி உள்ளது.
இந்தாண்டு டிசம்பர் 8இல் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நவீன் ஃபைன் ஆர்ட்ஸ் என்ற குழுவினருக்காக இயக்குநர் மல்லிக்ராஜ் இந்த நாடகத்தை அரங்கேற்றினார். ‘ஆடுதுறை ஸ்ரீ சங்கர நாராயண சபா 69ஆவது ஆண்டு விழாவையொட்டி 1988 ஜனவரி 7இல் ஆடுதுறை ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் கோயில் அப்பர் அரங்கில் இரவு 10.30 மணிக்கு ‘பொன்னியின் செல்வன்’ நாடகம் நடைபெற்றது’ என்ற தகவலை, சென்னை நகர நாடக அரங்கில் நடைபெற்ற பொன்னியின் செல்வன் நாடக வரலாற்றுக்கு முன் வரலாறு என அதற்கான அழைப்பிதழ் சான்றுடன் ஆடுதுறை பாஸ்கர் பதிவுசெய்கிறார்.
2022இல் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் அதன் ஆளுமைகளின் பலத்தில் நாடு தழுவிய வெற்றியைப் பெற்றுக் குன்றிலிட்ட விளக்காக ஒளிர்கிறது. அதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே தொடங்கிய ‘பொன்னியின் செல்வன்’ நாடக வரலாறு குடத்திலிட்ட விளக்காகவே அமைந்துவிட்டது. அந்த ஒளியை உலகின் பார்வைக்குக் காட்ட வேண்டும் என்பதே கட்டுரையின் நோக்கம்.
- தொடர்புக்கு: anbesivam24@gmail.com