திரையுலகத்தில் இருந்து மாநில முதல்வர் வரை... கோலோச்சிய ஜெயலலிதா! - ஒரு பார்வை

திரையுலகத்தில் இருந்து மாநில முதல்வர் வரை... கோலோச்சிய ஜெயலலிதா! - ஒரு பார்வை
Updated on
2 min read

அரசியல் குடும்ப பின்னணியோ, சிறு வயது முதல் அரசியல் வாசனையோ அறியாத ஜெயலலிதா தான், பின்னாளில் மாநிலத்தை ஆளும் முதல்வரானார். 1948-ம் ஆண்டு பிப்.24-ம் தேதி கர்நாடக மாநிலம், மாண்டியாவில் பிறந்த அவர், 1964-ம் ஆண்டு சென்னை சர்ச் பார்க் கான்வென்டில் மெட்ரிகுலேஷன் படிப்பை முடித்து உயர்கல்வி பயில உதவித்தொகை கிடைத்தும், திரைப்படங்களில் நடிக்க முடிவெடுத்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

1961-ல் தனது திரை வாழ்க்கையை குழந்தை நட்சத்திரமாக கன்னட திரைப்படத்தில் தொடங்கினார். அதன்பின், 1965-ல் தரின் ‘வெண்ணிற ஆடை' எனும் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பின், எம்ஜிஆர், சிவாஜி உள்ளிட்ட பல்வேறு நடிகர்களுடன் நடித்துள்ளார். நடிப்புக்காக பல்வேறு விருதுகளையும் பெற்று முன்னணி நடிகையாகத் திகழ்ந்தார். 1982-ல் தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். தலைமையிலான அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டு தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார்.

மாநிலங்களவை உறுப்பினராக 1984 முதல் 1989 வரை பணியாற்றினார். மாநிலங்களவையில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஜெயலலிதாவின் பேச்சை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி வெகுவாக பாராட்டியுள்ளார். கடந்த 1987-ல் எம்ஜிஆர் மறைந்த நிலையில், அதிமுக இரண்டாக பிளவுபட்டது.

மறைந்த ஜானகி அம்மையார் தலைமையில் ஒரு அணியும், ஜெயலலிதா தலைமையில் ஒரு அணியும் என இருந்த நிலையில், 1989-ல் ஒன்றுபட்ட அஇஅதிமுகவின் தலைமை பொறுப்பை ஏற்றார். அதன்பின், 1991-ல் தமிழகத்தில் ஆட்சியை பிடித்து முதல்முறையாக முதல்வர் ஆனார். தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டை இந்திய அரசமைப்புச் சட்டம் ஒன்பதாம் அட்டவணைப் பாதுகாப்புடன் (76வது சட்டத் திருத்தம்) ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வழங்கிய சரித்திர சாதனையை நிகழ்த்தினார். 6 முறை தமிழகத்தின் முதல்வராக இருந்த இவர், பல்வேறு நலத் திட்டங்களை வடிவமைத்தார்.

தமிழக முதல்வராக ஐந்தாவது முறையாக ஜெயலலிதா பொறுப்பேற்ற போதுதான் அம்மா மருத்துவ பரிசோதனை திட்டம், அம்மா உணவகம், அம்மா குடிநீர், முதியோர் இலவச பஸ் பயண திட்டம், தொட்டில் குழந்தை திட்டம் உள்ளிட்ட பல்வேறு சமூகநல திட்டங்களை அறிமுகப்படுத்தினார். 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழகத்தை சுனாமி தாக்கிய போது, இவரது நிர்வாகத் திறமை பாராட்டப்பட்டது.

2003-ல் மாநிலத்தின் எல்லைக்குள் ஆன்லைன் உட்பட அனைத்து லாட்டரிகளையும் விற்பனை செய்வதைத் தடை செய்து ஏழைக் குடும்பங்களின் வாழ்வில் விளக்கேற்றினார். 2011-ம் ஆண்டு வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் நான்கு ஆடுகள், ஒரு மாடு - வீடுகளுக்கு மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகள் அரசுப் பள்ளிகளில் மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்க முடிவு செய்தார். 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினிகள், திருமண உதவித் திட்டம், தாலிக்கு தங்கம் என பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார். தமிழகத்தை மின் மிகை மாநிலமாகவும் மாற்றியவர் மக்களின் மனங்களில் வாழ்கிறார்.

| டிச.5 - இன்று: ஜெயலலிதாவின் 8-ம் ஆண்டு நினைவு தினம் |

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in