

எனக்குத் தெரிந்த இலக்கிய நண்பர் ஒருவர் வினோதமானவர். ஆச்சரியம் அளிக்கக்கூடியவர். நீங்கள் எந்த புத்தகத்தைப் பற்றிச் சொன்னாலும் வாசித்திருப்பார். அல்லது சென்ற நாள்களிலேயே மீள்வாசிப்பு செய்திருப்பார். அவரளவில் ஒளவையின் ‘கற்றது கைம்மண்ணளவு, கல்லாதது உலகளவு’ என்பதெல்லாம் வெற்றுப் பம்மாத்து. ஒட்டுமொத்தத் தமிழிலக்கியம் மட்டுமல்லாமல், மொழிபெயர்ப்பில் வெளியான இந்திய – உலக இலக்கியங்களையும் வாசித்திருப்பதாகச் சொல்வார். இவ்வளவு ஆச்சரியங்களைத் தரக்கூடிய இலக்கிய உபாசகரோடு பழக்கம் வைத்திருப்பதெல்லாம் இந்த ஒற்றை வாழ்வுக்கு நாம் அளிக்கும் தண்டனையன்றி வேறல்ல எனத் தோன்றும். ஆனாலும் நண்பரோடு பேசுவதில் சுவாரசியமும் இருக்கவே செய்யும்.
அண்மையில் அவரோடு உரையாடினேன். ராஜீந்தர் சிங் பேடியின் சிறுகதை ஒன்றை அவரிடம் பகிர்ந்துகொண்டேன். “ஆமாம் நானும் வாசித்திருக்கிறேன், அற்புதமான எழுத்தாளரல்லவா!” என்றார் நண்பர். சிறந்த எழுத்தாளர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை என்றேன். “இவரது கதைகளை என்னுடைய சிறிய வயதில் வாசித்தேன். ஆனால் பாருங்கள், இன்றுவரை ஞாபகத்தில் உள்ளது” என்றார். இந்த நண்பர் எல்லாவற்றையும் சிறிய வயதிலேயே வாசித்தவர். இப்போது வாசிப்பதற்கு என்ன இருக்கிறது என்று சலித்தும் கொள்வார்.
இது ஒருவகையான வியாதி. வாசிப்பவர்கள் பலரிடமும் காணப்படும் மிக முக்கியமான பிரச்சினை. அவர்கள் வாசிக்காமல் எந்தப் புத்தகமும் இல்லை. அவர்கள் அறியாமல் எந்தப் பக்கமும் பூமியில் புரட்டப்படவில்லையெனக் கருதுகிறார்கள். எனக்குத் தெரிந்த கல்விப் புல நண்பர் ஒருவர் இலக்கியக் கூட்டங்களுக்குத் தவறாமல் வருபவர். நவீன இலக்கிய வாசிப்பில் தீவிரம் கொண்டவர் என்று எங்கும் தன்னை முன்வைக்க மாட்டார். அமர்ந்திருந்து குறிப்புகள் எடுப்பார். சில புத்தகங்களை வாங்கிச் செல்வார். இந்தப் புத்தகம் வாசித்திருக்கிறீர்களா என்று கேட்டால், உண்மை நிலவரம் என்னவோ அதையே சொல்வார். இவருடைய உண்மை, ஞானத்தை அடைய விரும்பும் ஆற்றல் கொண்டது என்றே தோன்றும். ஆனால், ஆரம்பத்தில் கூறிய நண்பர் அப்படியா என்ன!
லா.ச.ரா இவர் வாசிக்க வேண்டுமென்று தான் ‘அபிதா’வையே எழுதினார். ஜான் பெர்க்கின்ஸ் தன்னை ‘பொருளாதார அடியாள்’ என்று ஒப்புதல் அளித்து எழுதியதும் முதல் அத்தியாயத்தையே நண்பருக்குத்தானே அனுப்பி வைத்தார். தகழியின் ‘கயிறு’ நாவலை வாசிக்கும்போது நண்பருக்கு ஏழு வயதென்பது பொய்யா என்ன! எட்டாவது வயதிலேயே நல்லுரைக்கோவையைப் படித்ததுவும், பத்தாவது வயதிலேயே தி.ஜானகிராமனின் மொத்தப் படைப்புக்களையும் வாசித்து முடித்ததும் உண்மையா என்ன!
நண்பருக்குப் பொய்யின் மீது ஏனிந்த இரக்கமோ அறியேன். எதன் பொருட்டும், எவர் பொருட்டும் இந்த நிலையை விட்டு அவர் இறங்கியதில்லை. டி.டி.கோசாம்பி எழுதிய ‘பண்டைய இந்தியா’ புத்தகத்தை மீள் வாசிப்பு செய்ய வேண்டும் என்றார்.
“முன்னர் எப்போது வாசித்தீர்கள்?” என்று கேட்டேன். “பன்னிரண்டு வயசிலேயே படிச்சாச்சு” என்றார். “அடேயப்பா. ஆச்சரியம்தான்” என்றேன். அவருக்குள் ஒரு வீண் பெருமை. என்னை நம்ப வைத்துவிட்டாராம்.
“லோகமாதேவி எழுதிய ‘அந்தரத்தாமரை’ன்னு ஒரு புத்தகம் வாசித்தீர்களா?” எனக் கேட்டேன்.
“என்ன நண்பரே! இப்படிக் கேட்டுட்டீங்க. அந்த நாவல் என்னோட பால்ய கால நினைவுகள்ள ஒண்ணு. ஊர்ல உள்ள நூலகத்தில இருந்து வாசிச்ச நினைவு. இருபது வருஷமாகியும் இப்பவரைக்கும் எனக்குள்ள இருக்கு. அந்த நாவலோட பெயர்தான் மறக்க இயலாதது. அந்தூரத் தாமரை” என்று இனிப்பு உண்டவரைப் போல பாவனை செய்தார். அவ்வளவு இனிமையான நாவலாம் அது. புரிகிறதா?
“அதிருக்கட்டும்.. அந்தப் புத்தகத்தை எதுக்கு இப்ப கேட்டீங்க. மறுபதிப்பு வந்திருக்கா?” என என்னிடம் கேட்டார்.
“மறுபதிப்பில்லை. முதல் பதிப்பே இப்பதான் வந்திருக்கு. அது நாவலோ, சிறுகதையோ, ஏன் நினைவுக் குறிப்போ இல்லை. கட்டுரைதான். தாவரவியல் கட்டுரைகள்” என்றேன்.
“அப்படியா! இல்லையே நான் இவரின் நாவலை வாசித்திருக்கிறேனே. அப்படியெனில், அந்தரத்தாமரை எழுதிய லோகமாதேவி வேறு யாரோவா?” விழுந்தும் மீசையில் மண் ஒட்டாத மடப்பேர்வழியாகச் சமாளித்தார்.
“இன்னும் வாசிக்கவில்லைனு சொல்றதுக்கு என்னய்யா பிரச்சினை” என்று கேட்டதும் நண்பர் திகைத்துவிட்டார்.
சற்று நேரம் அமைதியாக நின்ற நண்பர் மெல்லிய இருமலுடன் கேட்டார். “நான் சொல்றதெல்லாம் பொய்யின்னு தெரிஞ்சு இத்தனை வருஷம் கேட்டுட்டு இருந்தீங்களே ஏன்?”
“உண்மையிலும் ஒருநாள் உங்களை இலக்கியம் வாசிக்க வைத்துவிடலாம்ங்கிற நம்பிக்கைதான்.”
“ஆனா, நீங்க ஜூனியர் விகடன்ல எழுதின தொடரை வாசிச்சிருக்கிறேன். ‘தெய்வம், பேய், நிலம், கடவுள்’ நல்ல தொடர்” என்றார்.
இதற்கு மேலும் அவருடன் பேசினால், இலக்கியத்தின் பேரினால் ஏதேனும் அனர்த்தம் நிகழவும் வாய்ப்பு இருக்கிறது எனத் தோன்றியது. விடைபெற்றுக்கொண்டேன்.
தொடர்புக்கு: akaramuthalvan01@gmail.com