அஞ்சலி: ந.இளங்கோவன் | கனவுகளைத் துரத்துவோருக்குத் துணை நின்றவர்

அஞ்சலி: ந.இளங்கோவன் | கனவுகளைத் துரத்துவோருக்குத் துணை நின்றவர்
Updated on
1 min read

‘அந்திமழை’ மாத இதழ், பதிப்பகத்தை நடத்தி வந்த ந.இளங்கோவன், ஜூலை 28 அன்று இறந்தார். அவருக்கு 55 வயது. மாரடைப்புக் காரணமாக இறந்ததாகக் கூறப்படுகிறது. அவர் தனது குடும்பத்துடன் பெங்களூருவில் வசித்துவந்தார். இளங்கோவனுக்குச் சொந்த ஊர் தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர்.

கால்நடை மருத்துவம் பயின்றவர். தொழில் துறையில் ஆர்வமும் இதழியல் மீது காதலும் கொண்டவராக இளங்கோவன் இருந்தார். பெங்களூருவில் ‘ஐரிஸ் லைஃப் சொல்யூஷன்ஸ்’ என்கிற நிறுவனத்தை நடத்திவந்தார். கால்நடைகள், கோழிகளுக்கான மருந்து தயாரிப்பில் இந்நிறுவனம் ஈடுபட்டுவருகிறது.

‘அந்திமழை’ 2004இல் முதல் கட்டமாக இணைய இதழாகத் தொடங்கப்பட்டது. எழுத்தாளர் சுகுமாரன் முதலியோர் அதற்குத் துணை நின்றனர். 2012இல் அது அச்சு வடிவம் பெற்றது. ‘இடது, வலது, திராவிடம், தேசியம், தமிழ்த் தேசியம், மய்யம், சோத்துக்கட்சி என எல்லாத் தரப்பினருக்குமானதாக இருக்க வேண்டும்’ என்று தன் பத்திரிகையின் கொள்கையை இளங்கோவன் முகநூலில் அறிவித்திருந்தார்.

ஒவ்வொரு இதழும் குறிப்பிட்ட தலைப்பின் கீழ் சிறப்பிதழாக வருவது ‘அந்திமழை’யின் அடையாளம். வளரும் எழுத்தாளர்களுக்கு இடம் அளிப்பது, முன்னணி எழுத்தாளர்களே ஆனாலும் அவர்களுக்கு அரவணைப்பு தேவைப்படுகையில் பத்திரிகை மூலமாக உடன் நிற்பது, குறிப்பிட்ட தளத்தில் மட்டுமே இயங்கும் எழுத்தாளரை இன்னொரு தளத்தில் இயங்க ஊக்குவிப்பது போன்றவை இளங்கோவனின் ஊடகச் செயல்பாடுகளாக இருந்தன. ‘

உங்கள் கனவுகளைத் துரத்தும் பயணத்தில் சக பயணியாகத் தொடர்ந்து வரும்’ என அவர் முன்வைத்த சொற்கள், பத்திரிகையின் உள்ளடக்கமாக வெளிப்பட்டன. ‘அந்திமழை’யின் ஆசிரியர் அசோகன், ஊடகவியலாளர் கௌதமன் ஆகியோருடன் இவருக்கு 25 ஆண்டுகளுக்கு மேலாக நட்பு இருந்தது. ‘அகத்தில் புழங்கும் வெப்பம்’, ‘கரன்சி காலனி’ உள்ளிட்ட நூல்களை இளங்கோவன் எழுதியுள்ளார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in