

ஆப்ரிக்க அடிமை வாழ்வின் பேரவல நிலையைத் துயரத்தின் சாட்சியாய் உலகின் முன் நிறுத்திய ‘வேர்கள்’ (Roots ) நாவல் வெளிவந்து 50 ஆண்டுகள் ஆகப்போகின்றன. ‘வலி சுமந்தவர்களின் புனித நூல்’ எனப்படுகின்ற இந்த நாவல், இன்றுவரை உலகின் பல மொழிகளில் லட்சக்கணக்கில் விற்றுவருகிறது. மறுபக்கத்தில், இது புனைவா - அபுனைவா என்பதில் தொடங்கி, நாவலின் சில பகுதிகளை நூலாசிரியர் அலெக்ஸ் ஹேலி, இன்னொரு நாவலில் இருந்து திருடினார் என்பதுவரை தொடர்ந்து விவாதங்களும் உள்ளன. இந்த நாவலில் பல வரலாற்றுத் தவறுகள் உள்ளன என்றும் பல சர்ச்சைகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஆனால், அனைத்தையும் தாண்டி இந்த நாவலுக்குள் வினையெச்சங்களாக எஞ்சி நிற்கும் வரலாற்றின் நிகர் பெறுமதி விசாலமானது.
மனித நாகரிகம் வளர்ச்சி அடைந்துவிட்டதாகப் பெருமை கொள்கின்ற இக்காலத்திலும் பேரவலங்களின் நெடுவேரான யுத்தம் எனப்படுவது எவ்வாறு மக்களைப் பூர்விக நிலங்களிலிருந்து புலம்பெயர்வை நோக்கி விரட்டிவருகிறது. அதேபோல, பதினேழாம் நூற்றாண்டு காலப்பகுதியில் உருவான - நிறுவனமயப்படுத்தப்பட்ட - நிறவெறி என்ற குரூர மானுடச் சிந்தனை, பல லட்சக்கணக்கான மக்களை அடிமைகளாக அவர்களது சொந்த இடங்களிலிருந்து வேரை அறுத்து எறிந்தது.
அடிமைச் சமூகங்கள் சங்கிலிகளால் பிணைத்துக் கப்பல் களில் ஏற்றப்பட்டு, பெயர் தெரியாத தொலைதேசங்களில் கொண்டுபோய் இறக்கப்பட்டார்கள். முதுகுகளுக்கு மேல் சவுக்குகள் சுழன்றுகொண்டிருக்க, ஆயுளுக்கும் அடிமைகளாகச் சேவகம் செய்தார்கள். செய்நேர்த்தியான அடிமைகள் உயர் விலைக்கு மறுபடியும் விற்கப்பட்டார்கள். அவர்களுக்குக் குழந்தைகள் பிறந்தபோது, தங்களுக்கு இலவசமாக அடிமை வாரிசுகள் கிடைத்துவிட்டதாக, அவர்களை ஆண்டவர்கள் மனம் குளிர்ந்தார்கள். தலைமுறை தலை முறையாகத் தங்கள் பண்ணை வேலிகளுக்குள் அடிமைகளைப் பயிரிட்டு வளர்த்தார்கள். உரிமைக்காக ஏங்கிய அடிமைகள், வறண்ட ஒளியில் வானத்தைப் பார்த்தவாறே வாழ்ந்து செத்தார்கள்.
இதுபோல, சுமார் ஏழு தலைமுறைகளுக்கு அடிமைச் சேவகம் செய்த தனது மூதாதையரின் குல வலியை 1977இல் அலெக்ஸ் ஹேலி, ‘வேர்கள்’ நூலின் ஊடாக வெளிக்கொண்டுவந்தபோது, வாசித்தவர்கள் அனைவரது குருதியும் ஒரு கணம் உறைந்தது.. பின்னர் உருகியோடியது. எளிதாக முறிந்துவிடக்கூடிய துயர்தோய்ந்த நீள்கதையை, தன் நிலத்தின் நாயகர்களை முன்னிறுத்தி, வரலாற்று நாவலாகக் கட்டுணர்வோடு ஏற்றி அமைத்ததுதான் அலெக்ஸ் ஹேலி இந்நாவலில் அடைந்த பெரும் வெற்றி. காம்பியாவின் சிறு கிராமம் ஒன்றில், முரசு செய்வதற்காக மரம் வெட்டச் சென்றபோது, பதுங்கியிருந்த வெள்ளையர்களால் பிடிக்கப்படும் ஏழு வயதுச் சிறுவன் குண்டா கிண்டே கப்பலில் ஏற்றப்பட்டு, அமெரிக்காவுக்குக் கொண்டுவரப்படுவதிலிருந்து ஆப்ரிக்கக் குடும்பம் ஒன்றின் நீண்ட - கொடிய - அடிமைச் ஜீவிய வரலாறு நாவலில் குருதி வாடையோடு ஆரம்பமாகிறது.
‘வேர்கள்’ நாயகன் குண்டா கின்டே, அடிமையாகக் கொண்டுசெல்லப்படுகின்ற வர்ஜினியா
வில் அவன் தப்புவதற்குத் தொடர்ச்சியாகத் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோற்றுப்
போய், கடைசியில் அவனது காலொன்று பாதத்தோடு வெட்டியெறியப்படும்போது ஏற்படுகின்ற வலி, ‘வேர்கள்’ நாவல் முழுவதும் பரவிக்கிடக்கிறது. அதன்பிறகு, அவன் பணிபுரிகின்ற பண்ணையில் திருமணமாகி, பிறக்கின்ற கிஸ்ஸி என்கிற மகள், அவனது முதலாளியால் விற்கப்படுகின்ற வலியும், அவளை வாங்குகின்ற முதலாளி, அவளைப் புணர்ந்து, குழந்தையைப் பெற்று, அவனை ஒரு அடிமையாக வளர்த்து, கடைசியில் சேவல்சண்டை சூதில் தோற்று - மகன் என்ற துளி பாசமுமின்றி - இன்னொருவனுக்கு விற்கப்படுவதும் என்று ‘வேர்கள்’ நாவலை நாற்பத்தேழு வருடங்களுக்குப் பிறகு இன்று படிக்கின்றபோதும், மானிடத்தின் கீழ்மைகளில் எழுகின்ற அச்சம் ஆழமானது. அதிகார வெறியின் மிகக் குரூரமான மனப்பிறழ்வை அருகில் காண்பிக்கக்கூடியது.
‘வேர்கள்’ நாவல் ஆப்ரிக்கர்களின் புலம்பெயர் வலியை மாத்திரம் பதிவு செய்துவிடவில்லை. நிலத்தைப் பிரிந்த பிறகும் - இன்னொரு நிலத்திலேயே பிறந்து வாழ வேண்டிய விதி தமக்கு நேர்ந்தபோதும் - பூர்விக நிலத்தினதும் தங்களது இனத்தினதும் பண்பாட்டை - கலாச்சாரத்தை - மொழியை - தலைமுறைகளின் ஊடாக வாய்வழிக் கதைகளாக எடுத்துச்செல்கின்ற சடங்குமுறை வாழ்வென்பது, சுயவாதைக்கு அப்பால் எவ்வாறான அகவிடுதலையைத் தருகிறது என்பது நாவலின் அடியில் அடர்நதியாய் நகர்கிறது.
இந்நாவலில், ஒரு இனத்தின் இருப்பெனப்படுவதும் இழந்தவர்களின் நிலம் சார்ந்த பெருமையும் வர்க்க வேறுபாடுகள் சார்ந்ததோ - சாதிக் கட்டுமானங்கள் சார்ந்ததோ இல்லை. மாறாக, அது அவர்களது இனம் சார்ந்த - மொழி சார்ந்த – உரிமை சார்ந்த வேட்கையாகத் தொடர்கிறது.
அறுக்கப்பட்ட தலைமுறைகளின் பற்றுக்கோடாக, ஆப்ரிக்கர்களுக்குள் தொடரப்பட்டுவந்த வாய்வழிக் கதைகூறல் முறை, அலெக்ஸ் ஹேலி காம்பியாவுக்குச் சென்றபோது ஏழு தலைமுறைகளுக்குப் பிறகும், சொந்த நிலத்தில் காணப்படுகிறது. இது, அவர்களை எவ்வகையான நீண்ட வட்டம் ஒன்றில் மீண்டும் கொண்டுவந்து இணைத்திருக்கிறது என்பதைப் படிக்கும்போது, அவர்களுக்கு ஏற்படுகின்ற அதே நெகிழ்ச்சி, நாவலைப் படிக்கின்ற ஒவ்வொரு வாசகனுக்கும் ஏற்படுகிறது.
முரண்களின் வரிசையும் பாத்திரங்களின் எதிர்க்குரல்களும் இப்பெரும் நாவலை இன்றைய காலகட்டத்திற்கும் பொருத்தமான செவ்வியல் பிரதியாக உணரவைக்கிறது. நெடுந்துயர் சூழ்ந்த காலத்திற்குள்ளேயும், அறத்தைக் கைவிடாதவர்களின் வாழ்வு எவ்வாறானது, மேலாதிக்கம் கொண்டவர்களைத் துணிச்சலோடு எதிர்கொண்டது எப்படி, தங்களில் தவறிழைத்தவர்களின் வாழ்வு எவ்வாறு முடிந்தது? அடக்கப்படும் சமூகத்திற்குள் தவறுகள் எனப்படுபவை எவ்வகையான சட்டகத்தில்வைத்து மதிப்பிடப்பட்டன என்று, பெரும் இருண்ட காலத்திற்குள் இடம்பெற்ற அத்தனை சம்பவங்களும் இன்று படிக்கின்றபோது, இந்நாவல் பெரும் மானுட தரிசனம் ஒன்றை நோக்கி நம்மை நகர்த்துகின்றது.
- ஈழ எழுத்தாளர்
தொடர்புக்கு: theivigan@gmail.com