

மாறிவரும் தமிழ்க் கவிதை தனக்கென்று புதிய உருவங்களை தேர்ந்துகொண்டுள்ளது. அன்றாடத்திலிருந்து தப்பிப்பது, சமகால அரசியலின் பாரதூரத்தை அளந்துகாட்டுவது, வாழ்வின் எல்லைக்கு அழைத்துச்சென்று உண்மையை தெளியவைப்பது போன்ற புதிய திசைகளில் வேல்கண்ணன் கவிதைகள் வெகு அழகாகப் பயணிக்கின்றன.
தொடக்ககால கவிதைகளின் உள்ளடக்கங்கள், சுயம்சார்ந்த பிரகடனமாக அமைந்தன. மின்கம்பியில் அமர்ந்துள்ள குருவியின் இருத்தலைப் போல அவரது தன்னிலை புலப்படத் தொடங்குகிறது.
‘நேற்று வரை நிதர்சனமானவை/ பொய்த்துப் போகின்றன/ திசைகள் அற்ற நட்டநடுப் பாலைவனத்தில்/ கம்பளிப் போர்வையில் கிடக்கிறேன்/ உள்நாக்கின் அமில ரசம்/ அழுகிய வீச்சமடிக்கிறது’ என சுய பகடியாகவே வாழ்வை அணுகுகின்றன.
‘சுய தேடல்’ என்றொரு தலைப்பில் ஒரு கவிதை. அதில், ‘தொலைத்ததும் நானே/ தொலைந்ததும் நானே/ தொடர்ந்தும் தேடுகிறேன்/ தொடர்ந்தும் தொலைகிறேன்’ என சுயத்தின் நிறைவுறாத் தன்மையை பேசுகிறது.