

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் கவிஞர் தமிழ்ஒளி 103வது பிறந்த நாள் விழா மற்றும் வழக்கறிஞர் சிகரம் ச.செந்தில்நாதன் எழுதிய இலக்கியப் போராட்டங்கள் நூல் வெளியீட்டு விழா, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நாளை (திங்கள்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. நாடகவியலாளர் பிரளயன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி து.அரிபரந்தாமன், எழுத்தாளர்கள் ச.தமிழ்ச்செல்வன், களப்பிரன், பதிப்பாளர் சந்தியா நடராஜன், கல்வியாளர் பு.பா. பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்ளிட்டோர் உரையாற்றுகின்றனர். எழுத்தாளர் சிகரம் ச.செந்தில்நாதன் ஏற்புரையாற்றுகிறார்.
ஆய்வரங்கம்
சென்னைக் கிறித்தவக் கல்லூரியின் தமிழ்த்துறை மற்றும் மில்லர் நினைவு நூலகம் சார்பில் கவிஞர் தமிழ்ஒளி 103வது பிறந்த நாளை முன்னிட்டு நாளை (திங்கள்கிழமை) மதியம் கல்லூரியில் ஆய்வரங்கம் நடைபெறுகிறது. துறைத்தலைவர் முனைவர் து.மேஷாக் தலைமையில் நடைபெறும் இந்த ஆய்வரங்கில், கவிஞர் தமிழ்ஒளியின் அறிவியல் பாய்ச்சல் என்ற தலைப்பில் முனைவர் கு.ரவிக்குமார் உரையாற்றுகிறார்.
தேசியக் கருத்தரங்கம்
சென்னை தருமமூர்த்தி இராவ்பகதூர் கலவல கண்ணன்செட்டி இந்துக் கல்லூரியின் தமிழ்த்துறை மற்றும் காலச்சுவடு அறக்கட்டளை இணைந்து நடத்தும் தலித் & பெண் எழுத்து என்ற தலைப்பில் ஒருநாள் தேசியக் கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் செப்டம்பர் 24ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. கல்லூரிச் செயலாளர் எம்.வெங்கடேச பெருமாள் தலைமையில் நடைபெறும் இந்தக் கருத்தரங்கில், ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி, உதவிப் பேராசிரியர்கள் ஜெ.சுடர்விழி, ஸ்டாலின் ராஜாங்கம், கவிஞர் சுகிர்தராணி, ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணி இரமேஷ் உள்ளிட்டோர் உரையாற்றுகின்றனர்.