

மொழிவழி மாநிலப் பிரிவினை பற்றிய பேச்சு எழுந்தபோது தமிழகத்தின் வடக்கிலும் தெற்கிலும் எல்லைப் பிரிவினை பற்றிய கிளர்ச்சிகள் எழுந்தன. அப்படித் தெற்கில் திருவிதாங்கூரின் தமிழர் பகுதிகளான தேவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு, பீர்மேடு, தேவிகுளம், குமரிப் பகுதிகளைத் தமிழ்நாட்டோடு இணைக்க நடைபெற்ற போராட்டங்களின் வரலாற்றுச் சாட்சியமாக விளங்குகிறது ‘தெற்கெல்லைப் போராட்டப் பதிவுகள்’ என்னும் இந்நூல். தொகுப்பாளர் ரா.சீனுவின் முன்னுரை ‘நுதலிப் புகுதல்’ என்றபடி போராட்ட வரலாற்றைச் சுருக்கமாய்த் தெரிவித்து நிற்கிறது.
‘குமரி எல்லை’ என்ற பெயரில் 1947இல் வெளியான சி.குழந்தைசாமியின் சிறு பிரசுரம், ம.பொ.சி-யின் கட்டுரை, அவரின் தென்திருவிதாங்கூர் பயணத்தைப் பற்றிய சி.வேங்கடசாமியின் கட்டுரை, மார்ஷல் நேசமணியின் வரவேற்புரை, 1954இல் வெளிவந்த ஜீவாவின் பிரசுரம், சில தலையங்கங்கள், புதுக்கடைத் துப்பாக்கிச் சூட்டுக்கு எதிரான தமிழர் பேரவை அறிக்கை, குஞ்சன் நாடார் ஆற்றிய மலையாள உரையின் தமிழாக்கம், செங்கோட்டை தமிழ்நாட்டோடு இணைக்கப்பட்டபோது சுப்பிரமணியக் கரையாளர் ஆற்றிய உரை என இத்தொகுப்பு பன்முகப்பட்டு விரிகிறது.