

பழந்தமிழ் நூல் பதிப்பு முன்னோடிகளான உ.வே.சாமிநாத ஐயர், சி.வை.தாமோதரம் பிள்ளை ஆகியோரால் எழுதப்பட்டு, நீண்ட காலமாக அச்சில் வராத பல நூல்களைப் பதிப்பித்து வருபவர் ஆய்வறிஞர் ப. சரவணன். இவர் எழுதிய ’வள்ளலாரும் நாவலரும் - அருட்பா-மருட்பா போராட்ட வரலாறு’ என்கிற ஆய்வு நூல், சிலப்பதிகாரம், திருவாசகம் முதலான நூல்களுக்கான எளிய உரைகள் போன்றவை பலரது கவனத்தை ஈர்த்தவை. உ.வே.சா. தனது ஆசிரியரின் வரலாற்றைப் பதிவு செய்த நூலான ‘ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம்’, உ.வே.சா. வெவ்வேறு நூல்களுக்கு எழுதிய முன்னுரைகள் (சாமிநாதம்) போன்றவை சரவணனின் உழைப்பில் செம்பதிப்பு நூல்களாக வெளிவந்துள்ளன. இந்தப் பணிக்காக இவருக்கு திருவாவடுதுறை ஆதீனம் உ.வே.சா. பெயரிலான ‘செந்தமிழ்ப் பதிப்புச் செம்மல்’ விருதை அறிவித்துள்ளது. ஜூன் 8 அன்று மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் நடைபெறவுள்ள ஆதீனத்தின் 24வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகளின் ஜென்ம நட்சத்திர விழாவில் இவ்விருது வழங்கப்பட உள்ளது.