

சாதியின் பிடியிலிருந்து மக்களை விடுவிக்க காந்தி, ராஜாராம் மோகன் ராய் முதலான சமூகச் சீர்திருத்தவாதிகள் சித்தாந்தங்களை முன்மொழிந்துள்ளனர். இருப்பினும் சாதியத்தின் வேர்களைப் பிடுங்க அவர்கள் முற்படவில்லை. பொதுவுடைமைவாதிகளோ வர்க்கப் போராட்டத்தினால் மட்டுமே புரட்சி சாத்தியமென அறைகூவலிட்டனர்.
அம்பேத்கரும், 1920கள் வரையில் சமய சீர்திருத்தங்களின் வழியாகப் பட்டியலின மக்கள் இழந்த உரிமைகளை மீட்டெடுக்க முடியும் என்றே நம்பினார். ஆனால், 1930களில் இந்திய அரசியல் களம் தலைகீழ் மாற்றம் கண்டது. 1931இல் பிரிட்டிஷாரை இணங்கவைத்து பட்டியல் சாதியினர் தனித்தொகுதியில் போட்டியிடும் உரிமையை அம்பேத்கர் வென்றெடுத்தார்.
இதனை எதிர்த்து காந்தி சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டார். காந்தியும் பட்டியல் சாதியினரை ஆதரிக்கவே செய்தார். தீண்டாமை பெரும்பாவம், அதேநேரம் சாதி சமூக வேறுபாட்டினை மட்டுமே குறிக்கிறது எனும் பார்வையை காந்தி கொண்டிருந்தார். சாதிய கருத்தியலுக்கும் தீண்டாமைக்கும் இடையில் உள்ளார்ந்த தொடர்பிருப்பதாக வாதிட்டார் அம்பேத்கர்.