

நல வாழ்வுக்குத் தேவையானதைப் பரிந்துரைக்கும் ஔவையின் ஆத்திசூடி அறிவுரைகளில் ஒன்று, ‘நோய்க்கு இடம் கொடேல்’. உணவையே மருந்தாகக் கொண்ட பழந்தமிழரின் வாழ்க்கை முறையைப் பின்பற்றினால் நோய்க்கு இடம் கொடாமல் வாழ முடியும் என்று நிறுவுகிறார் ஊட்டச்சத்து நிபுணர் நாகப்பன் சூரியநாராயணன்.
நம் உணவுப்பழக்கமும் மாறிவரும் வாழ்க்கை முறையுமே பெரும்பாலான தொற்றா நோய்களுக்குக் காரணமாக இருக்கின்றன. எண்ணெய்யில் பொறிக்கப்பட்ட – வறுக்கப்பட்ட இறைச்சி, சக்கை உணவு, செயற்கைக் குளிர்பானங்கள், உடற்பயிற்சியின்மை போன்றவை நோய்களை அழையா விருந்தாளியாக நம் உடலுக்கு அழைத்து வருகின்றன.
இதயநோய், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக நோய்கள், உடல்பருமன், மார்பகப் புற்றுநோய் உள்ளிட்ட பல நோய்களுக்கும் ‘கொலஸ்ட்ரால்’ ஒரு காரணியாக இருக்கிறது என்பதை ஆய்வுத் தரவுகளோடு முன்வைக்கிறார் நாகப்பன்.