

தமிழில் 90களிலிருந்து, லத்தீன் அமெரிக்க இலக்கியத்தின் தாக்கம் யுக மாற்றத்துக்கான ஒரு கருவியாகவே உணரப்பட்டது. ‘நிழல்களின் உரையாடல்’ என்னும் இந்நாவலை அமரந்தா மொழிபெயர்த்திருப்பது தற்செயலானதல்ல; அவரது சமூக செயற்பாட்டின் இன்னொரு பகுதி.
அமரந்தாவின் மொழிபெயர்ப்புகள், மூன்றாம் உலக நாடுகளின் சமூக, பண்பாடு, அரசியல், இலக்கியம் சார்ந்து தீவிர வாசிப்புகளை ஏற்படுத்தியிருக்கின்றன.
அவ்வரிசையில், மார்த்தா த்ராபா எழுதிய இந்த லத்தீன் அமெரிக்க நாவல், அப்பாவி மக்கள் அடிக்கடி காணாமல் போவது என்பது, எங்கெல்லாம் போராட்டம் நடக்கிறதோ... போர் நடக்கிறதோ அங்கெல்லாம் சர்வசாதாரணமாக நடக்கிறது... என்பதை மையமாக வைத்துள்ளது.
இந்நாவலின் முதல் வரியே, `அழைப்பு மணியோசை அவளைத் தூக்கிவாரிப் போட்டது' என்று தொடங்குகிறது. பியூனஸ் அயர்ஸில் உள்ள அந்த வீட்டின் உள்ளே இருக்கும் மூத்த நாடக நடிகையான ஐரீன், அழைப்பு மணிக்கு உடனே செவிசாய்க்காமல் சிறிது நேரம் மவுனமாகக் கடக்கிறார். மீண்டும் அழைப்பு மணியோசை மெதுவாக ஒலிக்கிறது.