

உள்ளடக்கத்தில் சமூக சிந்தனைமிக்க ‘வானம்பாடி’; உருவத்தில் சோதிமிக்க ‘நவகவிதை’ என நெருக்கடிகளுக்காக உயரும் குரல், நிதர்சனத்தை பகிரும்போது மெல்லிய தொனியில் சன்னமாகிவிடுகின்றன பழநிபாரதியின் கவிதைகள்.
இத்தொகுப்பின் கவிதைகள் அதிகம் சர்ரியலிசத்தை நோக்கி நகர்வதாகத் தெரிகிறது. அருகில் இல்லாத தன் இணைக்குச் சொல்ல நினைக்கும், அன்பை நினைவூட்டும் வாட்டமுற்ற பிரிவின் செய்திகளாகத்தான் அவை வெளிப்பட்டுள்ளன. அன்பை யாசிக்கவில்லை. எதையும் நேரடியாக சொல்லவுமில்லை.
நீ அருகில் இருந்தால் நன்றாக இருக்கும் என்றுகூட சொல்லவில்லை. ஒரு கவிதை இப்படி ஆரம்பிக்கிறது: ‘நீ இருந்திருந்தால்/ உன் அருகில் /அமைதி ஒரு கொடி போல படர்ந்திருக்கும்’ என்று தொடங்கி, தனிமை வீட்டின் சாளர கண்ணாடியில் மோதும் மின்னலும், கதவின் அருகே பெய்யும் மழையுமே துணையாயிருக்கிறது எனக்கு என்பதை சொல்கிறது.
அவள் அருகில் இல்லாததால் கவிஞனின் மனதில் ஏற்படும் தடுமாற்றத்தை வேறு பொருட்களின் மீது ஏற்றி அதைக்கூட ஒரு தகவலாகத்தான் நினைவூட்டலாகத்தான் இக்கவிதையில் கடத்தப்படுகிறது. காதல் உணர்வுகளுக்கான முக்கியத்துவத்தைவிட, உலக உயிர்களின் யதார்த்தங்களை பரிசீலிக்கின்றன இவரது பல கவிதைகள்.