

டிஜிட்டல்மயமான இன்றைய காலத்திலும் கூட பலருக்கும் முதலீடுகள் செய்யும் வழிகள் பற்றிய புரிதல்கள் இல்லை. பாதுகாப்பாக முதலீடு செய்வது எப்படி, பங்குச் சந்தைப் போக்குகள் குறித்த விளம்பரங்களைத் தாண்டிய உண்மை நிலவரம் என்ன போன்றவற்றிலும் புரிதல் இல்லை.
இவற்றில் எல்லாம் ஆழம் தெரியாமல் காலைவிட்டு சிக்கலில் மாட்டிக்கொள்பவர்களையும் நாம் அன்றாடம் பார்க்கிறோம். விவரம் அறிந்தவர்களே இவற்றில் எல்லாம் விழுந்துவிடுகிறார்கள் என்பதுதான் சோகம்.
சோம வள்ளியப்பனின் ‘முதலீடுகள்’ எனும் இந்நூல், பணத்தின் அருமையை உணர்த்தக்கூடியது. ஓடிஓடி உழைத்து ஈட்டிய வருமானத்தை நிலைநிறுத்திக்கொண்டு மேலும் பல்கிப்பெருகச் செய்யும் கலையை, கற்றுத்தருகிறது.
நமக்குக் கிடைக்கும் வருமானத்தை நெறிப்படுத்தி, சேமித்து, முதலீடு செய்து வாழ்வை வளப்படுத்திக்கொள்வதற்கான வழிமுறைகளை, அன்றாட வாழ்விலிருந்தே உதாரணங்களைச் சொல்லி நூலாசிரியர் விளக்கும் விதம் சுவையானவை.