

‘பூமனம் கொண்டவள் பால் மணம் கண்டாள்’, ‘வாழ நினைத்தால் வாழலாம்’, ’காலமதைத் தவறவிட்டால் தூக்கமில்லை மகளே’, இப்படிக் கவிதை வரிகளைக் கொண்ட திரையிசைப் பாடல்களில் தனக்குப் பிடித்தவற்றை இந்த ‘மாபெரும் பாட்டுப் புத்தக’த்தில் முன்வைத்திருக்கிறார் எழுத்தாளர் மணா.
உடுமலை நாராயண கவி, மருதகாசிக்கு முன் தொடங்கி கண்ணதாசன், பட்டுக்கோட்டையார் உட்படப் பலரது பாட்டுக்கோட்டைகளை, அவற்றிலுள்ள சொல்லடுக்குகளை, வெளித்தோற்ற எளிமையை விவரித்திருக்கிறார். ஒரு தலைமுறையின் ரசனையாக மட்டுமல்லாமல் அன்றைய மனிதர்களின் வாழ்வு, குணாதிசயம், மனப்பாங்கு எனப் பலவற்றைப் பிரதிபலிக்கிறது இந்த நூல்.