

டார்வின் என்றதும் பீகில் கப்பல் பயணமும் பரிணாமக் கோட்பாடும்தான் நினைவுக்கு வரும். நமக்கெல்லாம் நன்றாக அறிமுகமான அறிவியலாளர் என்றாலும் டார்வினைப் பற்றிய வேறு விஷயங்களை நாம் அதிகம் அறிந்ததில்லை.
அதற்குப் போதுமான நூல்கள் தமிழில் இல்லை என்கிற குறையைப் போக்கும் விதத்தில் நன்மாறன் திருநாவுக்கரசு எழுதிய ‘டார்வின்’ நூல் வெளிவந்திருக்கிறது. பெரும்பாலான பெற்றோரைப் போலவே டார்வினின் தந்தையும் மருத்துவராகவோ பாதிரியாராகவோ டார்வின் வரவேண்டும் என்று நினைத்தார்.
ஆனால், டார்வினோ சின்ன வயதிலிருந்தே இயற்கையின் மீது நாட்டம் கொண்டிருந்தார். சமயம் படிப்பதைவிட மருத்துவம் படிக்கலாம் என்று முடிவெடுத்தார். ஆனால், மருத்துவம் அவர் இயல்புக்கு ஒத்துவரவில்லை. அதனால் வேறு வழியின்றி சமயம் படிக்க கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கும் அவரால் மனம் ஒன்றிப் படிக்க இயலவில்லை.
அது சமயம் குறித்தும் கடவுள் குறித்தும் கேள்வி கேட்கும் காலமாக இருந்தது. டார்வினுக்குள்ளும் அந்தக் கேள்வி வந்தது. பதில் தேடிப் பல்வேறு அறிஞர்களைச் சந்தித்தார்.