

தமிழில் குறிப்பிட்ட இனக்குழுவின் வாழ்வை, சமூக நீதிக்கான முன்னெடுப்பை, கடந்தகால வரலாற்றை, நிகழ்கால எதிர்கொள்ளல்களை விவரிக்கிற நூல்கள் வெகு சிலவே. அவற்றில் ஒன்றாக, நாவிதர்கள் என்றழைக்கப்பட்ட சவரத் தொழிலாளர்கள் தனிமனிதர்களாகவும் இனக்குழுவாகவும் எதிர்கொண்ட இன்னல்களைப் பேசுகிறது, அகநி வெளியீடாக வந்திருக்கும் ‘சவுரிக் கூந்தல்’.
திருத்தணி வட்டாரத்துக் கிராமங்கள், முடி திருத்துதலைக் குலத்தொழிலாகச் செய்துவருபவர்களின் மனநிலை, அவர்களில் சிலர் வாத்தியக்காரர்களாக மண விழாக்கள்,கோயில் திருவிழாக்களில் இசைக்கிற வாய்ப்பை எதிர்பார்த்திருத்தல், பொதுச் சமூகம் அவர்களை நடத்துகிற விதம் போன்றவற்றோடு பெருநகரத்துச் சூழல் வழங்குகிற ஆசுவாசம், புதிய வாய்ப்புகள் போன்றவற்றைப் பேசுகிறது இந்நூல்.
இதனை எழுதியிருக்கும் ஜில்லேள்ள பாலாஜி திருத்தணி வட்டாரத்தில் பிறந்து வளர்ந்தவர். தான் கண்ட, கேள்விப்பட்ட, உணர்ந்த வாழ்வினை இந்நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் இழையவிட்டிருக்கிறார்.