

தமிழ் தலித் இலக்கியத்தின் முன்னோடியும் இலங்கையின் இடதுசாரித் தலைவர்களில் ஒருவரும் சாதியொழிப்புப் போராட்டக் களத்தின் முன்னணியில் நின்றிருந்தவருமான எழுத்தாளர் கே. டானியல் அவர்களின் நூற்றாண்டு இது. இதையொட்டி அவரது ஆறு நாவல்களை ‘கருப்புப் பிரதிகள்’ பதிப்பகம் திருத்தமான செம்பதிப்புகளாக வெளியிட்டிருக்கிறது.
‘பஞ்சமர்’, ‘அடிமைகள்’, ‘கோவிந்தன்’, ‘தண்ணீர்’, ‘பஞ்ச கோணங்கள்’, ‘கானல்’ ஆகிய ஆறு நாவல்களதும் முதன்மைக் கதாபாத்திரங்கள் தலித்துகள். நாவல்களின் களம் தலித் மக்களின் வாழ்வியலும் வாழ்தலுக்கான போராட்டமும்.
இந்த ஆறு நாவல்களையும் ‘பஞ்சமர் வரிசை நாவல்கள்’ என கே. டானியல் பெயரிட்டதற்கு ஆழமான காரணமுள்ளது. ஒரு நாவல் ஒரு காலக்கட்டத்தைச் சொன்னால், அதன் தொடர்ச்சியாக அடுத்த நாவல் அடுத்த காலக்கட்டத்தைச் சொல்கிறது.
ஒவ்வொரு நாவலிலும் ஒவ்வொரு தலித் சாதி மக்களின் வாழ்வு மையமாகச் சொல்லப்படுகிறது. இதன் வழியாக இருபதாம் நூற்றாண்டு இலங்கைத் தலித் மக்களது வாழ்வின் வரைபடம் வாசகர் முன்னே இருளும் ஒளியுமாக விரிகிறது.
தனது மரணம்வரை, ஏறத்தாழ ஐம்பது வருடங்கள் தொடர்ச்சியாகச் சாதியொழிப்புக் களத்தில் நின்றிருந்த கே.டானியல் தனது போராட்ட வாழ்வில் சாதி வெறியர்களின் துப்பாக்கிச் சூட்டையும் தலைமறைவு வாழ்வையும் சிறையையும் எதிர்கொண்டவர்.