

இந்திய அரசியல் சாசனம் , 1949 நவம்பர் 26 அன்று நமக்கு நாமே நிறைவேற்றிக் கொண்ட மகத்தான உறுதிமொழி. முகப்புரையின் விழுமியங்களை முழுமையாகப் புரிந்துகொண்டு, நடைமுறைப்படுத்தினால், அனைத்து குடிமக்களும் சமூக நீதியைப் பெற முடியும்; பொருளாதார நீதியை நிலைநாட்ட முடியும்; அரசியல் நீதியை அனைவருக்கும் பொதுவாக்க முடியும்.
எண்ணியதை அச்சமின்றி வெளிப்படுத்த முடியும். நமது நம்பிக்கையையும் உரிமைகளையும் சிதைக்க யாரும் துணிய முடியாது. ஒவ்வொருவரும் தங்கள் மனச்சாட்சியின்படி தெய்வத்தை வணங்கி மகிழலாம்.
சம வாய்ப்பும் சமத்துவமும் பூத்துக் குலுங்கும் நந்தவனமாக நாடு மலரும். மக்களாட்சியின் மாண்பைப் படிப்படியாக விரிவுபடுத்துவதற்குப் பதிலாக, தேர்தல் அரசியல் என்ற குடுவைக்குள் சுருக்கிவிட்டோம். குடிமக்களே அரசின் அடிப்படை அங்கம் என்ற உண்மை மறக்கடிக்கப்பட்டுவிட்டது.
குடிமக்கள் யானை பலம் பொருந்தியவர்கள்; ஆனால், அரசியல்வாதிகள் தங்கள் கையிலிருக்கும் அங்குசம் என்னும் அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களைக் கட்டுக்குள் கொண்டு வந்து, பயனாளிகளாக மாற்றிவிட்டார்கள் என்கிறார் நூலாசிரியர்.