

பெண்ணடிமைத்தனம் இடைக்காலத்தில் திடீரென முளைத்துவிடவில்லை. அது மரபின் பெயரால் வழிவழியாகக் கடத்தப்பட்டு நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்பதை இலக்கியச் சான்றுகளோடு நிறுவியுள்ளார் பேராசிரியர் பிரேமா அருணாசலம்.
தொண்ணூறுகளின் தொடக்கத்தில் இவர் எழுதிய கட்டுரைகள் முப்பது ஆண்டுகள் கடந்தும் நம் பெண்ணுரிமைப் பார்வையை விரிவாக்க உதவுகிறது.
பெண்கள் தலைமையேற்று வழிநடத்திய தாய்வழிச் சமூகம் சொத்துடைமைச் சமூகமாக மாறியபோது துளிர்விட்ட பெண்ணடிமைத்தனம், இலக்கியத்தாலும் பக்தியாலும் மரபாலும் சமயச் சடங்குகளாலும் போற்றி வளர்க்கப்பட்டது.
தமிழின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் தொடங்கி சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம் எனக் கடந்து இறுதியில் இராமலிங்கரின் திருவருட்பா வரை காலக்கிரம வரிசையாகப் பிரித்துக்கொண்டு பெண்களின் அக, புற நிலைகளை விவரிக்கிறார் பேராசிரியர் பிரேமா.
எல்லாக் காலங்களிலும் குறிப்பிட்ட சில விஷயங்களில் ஒற்றுமை நிலவுகிறது. கற்பு, கைம்மைக் கோலம், பரத்தமை ஒழுக்கம் போன்றவை பெண்களுக்கான இலக்கணமாகவும் வீரம், பலதார மணம் போன்றவை ஆண்களின் இயல்பாகவும் போற்றப்பட்டு அந்தந்த கால மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுள்ளன.