

குறுங்கவிதை அளவுக்குத் தலைப்பு கொண்ட கவிதைப் புத்தகங்களுக்கு மத்தியில் சிறு தலைப்புகள் போலக் கவிதைகளைக் கொண்டிருக்கிறது கோ.வசந்தகுமாரனின் ‘பியானோ மீது கல்லெறிந்தாலும் இசை பிறக்கும்’. ஒரு மீச்சிறு ‘டைரி’க் குறிப்பு போல இருக்கின்றன பெரும்பாலான கவிதைகள். அனைத்தும் ஆசிரியரின் அந்தந்த கணத்து உணர்தலாகத் தெரிகின்றன.
அவற்றில் எள்ளல், எரிச்சல், பரிகாசம், ரௌத்திரம், நெகிழ்ச்சி, மயக்கம் எனப் பல உணர்வுகள் தென்படுகின்றன. ‘நிலவில் மனிதன் கால் வைத்தான்; இனிமேல்தான் கை வைப்பான்’ என்பன போன்ற சில, பொதுநலம் பாராட்டுகின்றன.
‘தினமும் குளி, ஏசி அறையில் உறங்காதே, குழந்தைமையை ரசி’ என்று அறிவுரை சொல்வதற்குப் பதிலாகச் சில கவிதைகளைத் தந்திருப்பது ‘அட’ சொல்ல வைக்கின்றன. சொற்சிக்கனம் மிக அதிகம் என்பதால் ‘சுமார்’ என்று எதையும் எளிதில் சொல்லிவிட முடிவதில்லை. கவிதைகளில் நிறைந்திருக்கிற எளிமையே அதற்குக் காரணம்.
பியானோ மீது கல்லெறிந்தாலும்
இசை பிறக்கும்
கோ.வசந்தகுமாரன்
தமிழ் அலை பதிப்பகம்
விலை: ரூ.150
போன்: 7708597419