

மனதுள் உறைந்து கிடக்கிற, அல்லது உறையாமல் அங்குமிங்குமாக அலைந்து கொண்டிருக்கிற மெல்லுணர்வை ஆவேசங்கொண்டு உசுப்பும் / சாந்தப் படுத்தும் ஆற்றல் கதைகளுக்கு எப்போதும் உண்டு.
அதனால்தான் அவை கதைகள். சில கதைகளின் வழி நமக்குப் பிடித்தவர்களையோ, பிடிக்காதவர்களையோ, பிடிப்பது போன்றவர்களையோ, ஒரு தரிசனம் மாதிரி கண்டுவிட்டால் அக்கதைகளின் மீதும் அதை எழுதியவர்களின் மீதும் நமக்கும் கொத்துக் கொத்தாக வந்துவிடுகிறது, விட்டுவிட முடியாத பேரன்பு.
அப்படி நமக்கு வேண்டியவர்களாகவும் அந்த கதாபாத்திரங்களில் ஒன்றாக நாமும் மாறிவிடக் கூடாதா என ஏங்க வைப்பவர்களாகவும் இருக்கிறார்கள், வண்ணதாசனின் ‘அப்பா செய்த நாற்காலி’ தொகுப்பில் வருகிறவர்கள்.