திண்ணை: ய.மணிகண்டனுக்கு விருது

திண்ணை: ய.மணிகண்டனுக்கு விருது
Updated on
1 min read

மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் ‘பாரதி விருது’ பாரதி ஆய்வாளரும் பேராசிரியருமான ய.மணிகண்டனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ‘பாரதியின் இறுதிக் காலம்’, ‘பாரதியியல்: கவனம் பெறாத உண்மைகள்’, ‘பாரதியும் காந்தியும்’, ‘புதுவைப் புயலும் பாரதியும்’ ஆகிய நூல்களைப் பாரதியியலுக்கு வழங்கியவர். நாளை (டிசம்பர் 11) மாலை 6 மணிக்கு ஈரோட்டில் பழனியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ள விழாவில் உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் விருது வழங்குகிறார்.

மணல் வீடு விருதுகள் - ‘கு.அழகிரிசாமி’ சிறுகதை விருது வா.மு.கோமுவுக்கும் ‘ப.சிங்காரம்’ நாவல் விருது மீரான் மைதீனுக்கும் ‘சி.மணி’ கவிதை விருது இலக்குமிகுமாரன் ஞானதிரவியத்துக்கும் ‘ராஜம் கிருஷ்ணன்’ விருது அமரந்தாவுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. மணல் வீடு இதழும் களரி அறக்கட்டளையும் இணைந்து இந்த விருதை வழங்கவுள்ளன. ஜனவரி 7இல் சேலம் மேட்டூர் அருகில் ஏர்வாடியில் நடைபெறவுள்ள விழாவில் இந்த விருதுகள் வழங்கப்படவுள்ளன. விருது ரூ.25,000 பண முடிப்பையும் பாராட்டுப் பரிசையும் உள்ளடக்கியது.

அம்பேத்கர் புத்தகம் இலவச டெலிவரி: இந்து தமிழ் திசை வெளியீடான ‘பாபாசாகேப் அம்பேத்கர்: ஒரு பன்முகப் பார்வை’ நூலுக்காக புதுக்கோட்டை சக்சஸ் புத்தகக் கடை, மக்களின் கவனத்தை ஈர்க்கும்விதமாக விளம்பரம் ஒன்றைத் தயார்செய்துள்ளது. அதில், இந்தப் புத்தகத்துக்குத் தமிழகம் முழுவதும் தாங்கள் இலவச டெலிவரி செய்துதருவதாகக் குறிப்பிட்டுள்ளது. தொடர்புக்கு: 9842018544

கள்ளக்குறிச்சி புத்தகக்காட்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று புத்தகக்காட்சி தொடங்கவுள்ளது. சென்னை பைபாஸ் திடலில் நடைபெறவுள்ள இந்தப் புத்தகக்காட்சியில் 100 அரங்குகள் அமைக்கப்படவுள்ளன. கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் புத்தகக்காட்சி இது. இதில் இந்து தமிழ் திசையும் கலந்துகொள்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in