

தடையின் தடத்தில்
துரை.நந்தகுமார்
அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்
பெரம்பூர்,
சென்னை-11.
தொடர்புக்கு: 94446 40986
விலை: ரூ.80
கரோனா பெருந்தொற்றுக் காலம் பல மனிதர்களின் வாழ்வைப் புரட்டிப்போட்டுவிட்டது. திசையெங்கும் அச்சத்தின் நிழலாட்டம். உயிரைப் பற்றிய நமுத்துப்போன உரையாடல்கள். பிள்ளைகளின் கல்வி நிலைகளில் விழுந்தன கறுப்புக் கோடுகள். பொருளாதார பலவீனங்களால் கனக்கும் குடும்பச் சுமைகள். நோய்மையின் இத்தகைய சுவடுகள் மறைய எவ்வளவு காலம் ஆகுமென்று எவராலும் சொல்ல முடியவில்லை. ‘விரல்விட்டு விரலுக்கு/ பூசப்படுகிறது மருதாணி’, ‘யாருமற்ற பள்ளிக்கூடம்/ அழிக்காத கரும்பலகையில்/ இருப்பது 40’. இதுபோன்று தனது கவிதைக்குள் வலிமிகுந்த இந்தப் பெருந்தொற்றுக் காலத்தை, அதன் நெருக்கடியைப் பதிவுசெய்திருக்கிறார் துரை.நந்தகுமார். ஊரடங்கு, கடையடைப்பு, பள்ளிகள் மூடல், எண்ணற்ற பிணங்கள், கைச் சுத்தம், தனிமனித இடைவெளி, விளிம்புநிலை மக்களின் வாழ்வாதாரச் சீர்குலைவு எனப் பெருந்தொற்றுக் காலத்தின் எல்லாப் படிம நிலைகளையும் பேசுகிறது இந்நூல். இதுவொரு நோய்மைக் காலத்தின் ஆவணப் பதிவு. பிளேக், காலரா, பெரியம்மை போன்று கரோனா காலக் கொடுமைகளின் பதிவுகளையும் அடுத்தடுத்த தலைமுறைக்குக் கடத்துகின்றன இந்தக் கவிதைகள்.