Last Updated : 09 Nov, 2018 10:20 AM

 

Published : 09 Nov 2018 10:20 AM
Last Updated : 09 Nov 2018 10:20 AM

பார்த்திபன் கனவு 51- மாரப்பனின் மனக் கலக்கம்

பொன்னனையும் வள்ளியையும் நள்ளிரவில் மாரப்ப பூபதி தொடர்ந்துபோன காரணம் என்ன? இதை அறிந்து கொள்வதற்கு நாம் மறுபடியும் அன்று சாயங்கால நிகழ்ச்சிகளுக்குப் போக வேண்டும்.

சக்கரவர்த்தியின் சந்நிதியிலிருந்து வெளியேறிய போது மாரப்பன் அளவில்லாத மனச்சோர்வு கொண்டிருந்தான். சாம்ராஜ்யத்திற்காகத் தான் செய்த சேவையெல்லாம் இவ்விதம் பிரதிபலன் இல்லாமற் போகும் என்று அவன் எதிர்பார்க்கவேயில்லை. பார்த்திபன் போர்க்களத்தில் மாண்டு, ஏறக்குறைய ஏழு வருஷமாயிற்று. அந்தப் போரில் தான் கலந்து கொள்ள மறுத்ததற்காகவே உறையூர்ச் சிம்மாசனம் தனக்குக் கிடைக்குமென்று மாரப்பன் எதிர்பார்த்தான். அந்த ஆசை நிறைவேறவில்லை. அதனால் அதிருப் தியோ, வெறுப்போ கொண்டதாக அவன் காட்டிக் கொள்ளவில்லை. பல்லவ சாம்ராஜ்யத்தில் அவனுடைய

பக்தி குன்றியதாகவும் தெரியப்படுத்தவில்லை. தன்னு டைய உண்மையான சாம்ராஜ்ய சேவைக்கு ஒரு நாள் நிச்சயம் பலன் கிட்டும் என்ற நம்பிக்கையுடன் அவன் வருஷக்கணக்காகக் காத்திருந்தான்.

கடைசியாக, விக்கிரமனுடைய சதியாலோசனை யைப்பற்றி அவனுக்குச் செய்தி தெரிந்தபோது, தளபதி அச்சுதவர்மரிடம் உடனே சென்று தெரியப் படுத்தினான். அதன் பலனாக அச்சதியாலோசனையை முளையிலேயே கிள்ளி எறிவது சாத்திய மாயிற்று. இதன் பிறகாவது, தன்னுடைய சேவைக்குத் தகுந்த சன்மானம் கிடைக்குமென்று அவன் நிச்சயமாக நம்பியிருந்தான். அவன் ஆசைப்பட்டது பல்லவ க்கரவர்த்திக்குக் கப்பம் செலுத்திக்கொண்டு உறையூரை ஆளும் பதவிதான். இது உடனே கிடைக்காவிட்டாலும், தான் முன்னர் வகித்து வந்த சேனாதிபதி பதவியாவது கிடைக்குமென்று நினைத்தான்.

ஆனால், நடந்தது என்ன? சக்கரவர்த்தி தன் பேரிலேயே சந்தேகம் கொள்ளலாயிற்று. கேவலம் ஒரு ஓடக்காரன் - அவன் பெண்டாட்டி - இவர்கள் முன்னிலையில் சோழ நாட்டுப் பட்டத்துக்கு உரியவனான தான் அவமானப்பட நேர்ந்தது.

இதை நினைத்தபோது மாரப்பனுடைய நெஞ்சு வெடித்துவிடும் போலிருந்தது. "இது என்ன உலகம்? இது என்ன வாழ்வு?" என்று உலகத்தையே வெறுக்கும் வழியில் மனம் திரும்பிற்று. எங்கே போகிறோமென்ற சிந்தனையே இல்லாதவனாய்க் குதிரைபோன வழியே போக விட்டுக் கொண்டிருந்தான். அறிவுமிக்கப் பிராணியான குதிரை தன் எஜமானனுடைய மன நிலையை உணர்ந்து மந்த நடை யுடன் யதேச்சையாகப் போய்க் கொண்டிருந்தது. உறையூரின் வீதி களில் அங்குமிங்குமாக அது சிறிது நேரம் சுற்றிவிட்டுக் கடைசியில் காவேரிக் கரையை அடைந்தது. பிறகு காவேரிக் கரைச் சாலையோடு கிழக்குத் திக்கை நோக்கிச் செல்லலாயிற்று.

சூரியன் அஸ்தமித்தது. அன்று சுக்கிலபட்சத்துச் சதுர்த்தியாதலால் மேற்குத் திசையில் நாலாம் பிறை தோன்றிற்று. வானத்தில் நட்சத்திரங்கள் ஒவ்வொன்றாய்த் தோன்றி மினுக்கத் தொடங்கின. சற்று நேரத்துக்கெல்லாம் வானவெளி முழுவதிலும் கோடிக்கணக்கான வைரங்களை வாரி இறைத்ததுபோல் நட்சத்திரங்கள் பொறிந்து கிடந்தன. மாரப்பன் இந்த வான விசித்திரம் ஒன்றையும் கவனியாமல் ஏதேதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். அரைக்காத வழி இவ்விதம் போனபிறகு, அவன் திடுக்கிட்டுச் சுயநினைவு வந்தவனாய் எங்கே போகிறோமென்று ஆராய்ந்தான். இதற்குள் நாலாம்பிறைச் சந்திரன் மேற்கு வானத்தின் அடிப்பாகத்துக்கு வந்துவிட்டது. குதிரையைத் திருப்பி உறையூர்ப் பக்கம் செலுத்தினான்.

உறையூர்க் கோட்டை வாசலைத் தாண்டி உள்ளே சிறிது தூரம் அவன் சென்றபோது, எதிரே அநேக தீவர்த்தி களுடனும், சங்கம் முதலிய வாத்திய முழக்கங் களுடனும் ஒரு கூட்டம் வருவதைக் கண்டான். கூட்டத்தின் மத்தியில் சிங்கக்கொடி பறந்ததைப் பார்த்தபோது, ஒருவேளை சக்கரவர்த்தி தன் பரிவாரங்களுடன் ரங்கநாதர் ஆலயத்துக்குப் போகிறாரோ என்று நினைத்துச் சட்டென்று குதிரையிலிருந்து இறங்கிச் சாலை ஓரமாக அடக்க ஒடுக்கத்துடன் நின்றான். கூட்டம் அருகில் வந்தபோது அதில் சக்கரவர்த்தி இல்லையென்பது தெரிந்தது. தளபதி அச்சுதவர்மரும், அவருக்குப் பக்கத்தில் தலை மொட்டையடித்த ஒரு சாமியாரும் வந்து கொண்டிருந்தார்கள். அந்தச் சாமியார் திடகாத்திர தேகமுடையவராயும் முகத்தில் நல்ல தேஜஸ் உடையவராயுமிருந்தார். மாரப்பனுடைய மனத்தில் மின்னலைப் போல் ஒரு எண்ணம் உதித்தது. "ஒருவேளை இவர் தான் அந்த ஜடா மகுடதாரியான கபட சந்நியாசியோ?" என்று நினைத்தான். அதே சமயத்தில் தளபதி அச்சுதவர்மரின் பார்வை மாரப்ப பூபதியின் மீது விழுந்தது. அவர் பூபதியைச் சமிக்ஞையினால் அருகில் அழைத்து, பக்கத்திலிருந்த சிறுத்தொண்டரை நோக்கி, "அடிகளே! இவன் யார் தெரிகிறதா? பார்த்திப மகாராஜாவின் சகோதரன் மாரப்ப பூபதி!" என்றார்.

சிறுத்தொண்டர் மாரப்பனை ஏற இறங்கப் பார்த்த வண்ணம், "அப்படியா? வெகு காலத்துக்கு முன்னால், மகேந்திர சக்கரவர்த்தியின் காலத்தில் இவனைப் பார்த்திருக்கிறேன். இப்போது அடையாளம் தெரியவில்லை" என்றார்.

"விக்கிரமனுடைய சதியாலோசனையைக் கண்டு பிடித்துச் சொன்னது பூபதிதான். ஆனாலும் சக்கரவர்த்திக்கு ஏனோ இவன் பேரில் தயவு பிறக்கவில்லை!" என்றார் அச்சுதவர்மர்.

சிறுத்தொண்டர் இதற்கு ஒன்றும் சொல்லாமல் மறுபடியும் ஒரு தடவை மாரப்பனை ஏற இறங்கப் பார்த்து விட்டு, மேலே போகத் தொடங்கினார்.

ஊணுறக்கம் கொள்ள மாட்டேன்

அவர்கள் இருவரும் அப்பால் சென்றதும், சேடிகள் சூழ்ந்த பல்லக்கு பின்னால் வருவதைப் பார்த்து, சக்கரவர்த்தியின் திருமகளாயிருக்கலாம் என்று மாரப்பன் ஊகித்துக்கொண்டு அவசரமாய் விலகிச் செல்லத் தொடங்கினான். ஆனால் என்ன ஆச்சரியம்! அதே இடத்தில் பல்லக்கு நின்றது. "பூபதி!" என்று மதுரமான பெண் குரலில் அழைப்பது கேட்டது. மாரப்பன் திரும்பிப் பார்த்தபோது, பல்லக்கில் பூரண சந்திரனை ஒத்த முககாந்தியுடைய குந்தவி தேவியும், அவளருகே சிவபக்தியே உருவங்கொண்டது போன்ற மூதாட்டி ஒருவரும் இருக்கக் கண்டான். குந்தவி தேவிதான் தன்னை அழைக்கிறாள் என்று அறிந்ததும், மாரப்பனுடைய உள்ளத்தில் வியப்பும் மகிழ்ச்சியும் சேர்ந்தாற்போல் பொங்கின. ஒரு பக்கம் சங்கோசம் பிடுங்கித் தின்றது. பல்லக்கின் அருகில் சென்று, குந்தவியைப் பார்க்க விரும்பினானாயினும் கூச்சத்தினால் நிமிர்ந்து பார்க்க முடியாதவனாய்த் தரையைப் பார்த்துக்கொண்டு நின்றான்.

"பூபதி! இன்று என் தந்தை உன்னிடம் ரொம்பக் கடுமையாயிருந்துவிட்டார். அதற்காக நீ வருத்தப்பட வேண்டாம். உன் பேச்சில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. எப்படியாவது அந்தப் போலி வேஷதாரிச் சிவனடியாரை மட்டும் நீ கண்டுபிடித்துவிடு. அப்புறம் உன்னுடைய கட்சியில் நான் இருப்பேன்!" என்று குந்தவிதேவி அனுதாபம் நிறைந்த குரலில் கூறியபோது, மாரப்பனுக்கு ஏற்பட்ட மனக் கிளர்ச்சியை வர்ணிக்கத் தரமன்று, அதல பாதாளத்திலிருந்து ஒரே அடியாகச் சொர்க்கத்துக்கு வந்துவிட்டதாகவே அவனுக்குத் தோன்றியது. சிறிது தலைநிமிர்ந்து, "அம்மணி! தங்களுடைய சித்தம் என்னுடைய பாக்கியம்.

அந்தப் போலிச் சிவனடியாரைக் கண்டுபிடிக்காமல் இனிமேல் நான் ஊணுறக்கம் கொள்ள மாட்டேன்" என்றான்.

"சந்தோஷம், கண்டுபிடித்ததும் எனக்கு உடனே தெரியப்படுத்து" என்று சொல்லிவிட்டு, குந்தவி தேவி பல்லக்கை மேலே செல்லும்படி கட்டளையிட்டாள்.

- மீண்டும் கனவு விரியும்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x