

பட்டியல் வடிவிலான தரவுகளை மட்டுமே கொண்டுள்ள இந்த நூல் தமிழில் அரிதான முயற்சி. கற்பித்தல், கல்வி நிறுவனங்களில் முக்கியமான பொறுப்புகளை வகித்தல், சொற்பொழிவு, நூல் எழுதுதல், பல்வேறு அமைப்புகள் மூலம் செயல்படுதல் எனத் தமது வாழ்வைத் தமிழர்களின் மேன்மைக்காகவே அமைத்துக்கொண்டவர் காலஞ்சென்ற க.ப. அறவாணன். அவரின் 50 ஆண்டுத் தமிழ்த்தொண்டுகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
1967லிலிருந்து 2017ஆம் ஆண்டு வரைக்கும் அறவாணன் செய்த பணிகளைப் பற்றிய விசாலமான பார்வையை இத்தொகுப்பு அளிக்கிறது. அவர் எழுதிய கட்டுரைகள், அவை வெளியான இதழ்கள், அவரது சொற்பொழிவுகளின் தலைப்புகள், அவை நிகழ்ந்த இடங்கள், ஏற்பாடு செய்த அமைப்புகள், அவரது வானொலி உரைகள் ஒலிபரப்பான நாள், நேரம் உள்ளிட்ட தரவுகளைக் காண்கையில் அறவாணன் என்கிற ஆளுமை மீது நமக்குக் கூடுதல் மரியாதை தோன்றுகிறது.